வாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com
Sunday, August 25, 2013
ஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்
அன்பு நண்பர்களே , வணக்கம் .
ஐந்திற்குள் அடங்கிய (இயற்கையின் ஐந்து நிலைக்குள்) அனைத்தும் என்னென்று பார்ப்போம்.
ஐந்தாக அமைந்தவைகள்
* பஞ்சஅட்சரம் -
ந ம சி வ ய
* பஞ்சபுராணம் -
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு,பெரியபுராணம்.
* பஞ்ச கங்கை -
ரத்ன கங்கை,தேவ கங்கை,கயிலாய கங்கை,உத்ர கங்கை, பிரம்ம கங்கை.
* பஞ்சாங்கம் -
திதி, வாரம், நட்சத்திரம்,யோகம்,கரணம்.
* பஞ்ச ரிஷிகள் -
அகத்தியர், புலஸ்தியர், துர்வாசர், ததீசி, வசிஷ்டர்.
* பஞ்ச குமாரர்கள் -
விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.
* பஞ்ச நந்திகள் -
போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,
* பஞ்ச மூர்த்திகள் -
விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.
* பஞ்சாபிஷேகம் -
வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,
பச்சை கற்பூரம்,குங்குமப்பூ கலந்த நீர் ,
கிராம்பு, கொரோசனம் கலந்த நீர் , விளாமிச்சை வேர் ,
சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.
* பஞ்ச பல்லவம் -
அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி.
* பஞ்ச இலைகள் -
வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.
* பஞ்ச உற்சவம் -
நித்ய உற்சவம், வார உற்சவம், பட்ச(மாதம்இருமுறை) உற்சவம்,
மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.
* பஞ்ச பருவ உற்சவம் -
அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, மாதப்பிறப்பு.
* பஞ்ச பூதங்கள் -
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்.
* பஞ்ச ஸ்தலங்கள் -
காஞ்சிபுரம் , திருவானைக்காவல், திருவண்ணாமலை, தி ருக்காளத்தி, சிதம்பரம் .
* பஞ்ச அவயங்கள் -
மெய், வாய், கண், மூக்கு, செவி.
* பஞ்ச கர்மாக்கள் -
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்
* பஞ்ச சபைகள் -
ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.
* பஞ்ச ஆரண்யம் -
உஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை,அர்த்தஜாமம்.
* பஞ்ச முகங்கள் (சிவன்)-
தத்புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்.
* பஞ்ச முகங்கள் (காயத்ரி)-
பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.
* பஞ்ச மாலைகள் -
இண்டை,தொடை,தொங்கல்,கண்ணி,தாமம்.
* பஞ்சமா யக்ஞம் -
பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம்,தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்.
* பஞ்ச ரத்தினங்கள் -
வைரம்,முத்து,மாணிக்கம்,நீலம்,மரகதம்.
* பஞ்ச தந்திரங்கள் -
மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.
* பஞ்ச வர்ணங்கள் -
வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.
* பஞ்ச ஈஸ்வரர்கள் -
பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்.
* பஞ்ச கன்னியர்கள் -
அகலிகை,திரௌபதி,சீதை,மண்டோதரி,தாரை.
* பஞ்ச பாண்டவர்கள் -
தர்மன்,அர்ச்சுனன்,பீமன்,சகாதேவன்,நகுலன்.
* பஞ்ச ஹோமங்கள் -
கணபதி ஹோமம்,சண்டி ஹோமம்,நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம்,
ருத்ர ஏகாதச ஹோமம்.
* பஞ்ச சுத்திகள் -
ஆத்ம சுத்தி,ஸ்தான சுத்தி,திரவிய சுத்தி,மந்த்ர சுத்தி,லிங்க சுத்தி.
* பஞ்ச கோசம் -
அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.
* பஞ்ச காவ்யம் (பசு)-
பால்,தயிர்,நெய்,கோமியம்,சாணம்.
* பஞ்ச லோகம் -
தங்கம்,வெள்ளி,பித்தளை,செம்பு,ஈயம்.
* பஞ்ச ஜீவநதிகள் -
ஜீலம்,ரவி,சட்லெட்ஜ்,பீஸ்(பீயாஸ்),ரசனாப்.
* பஞ்ச ஆயுதங்கள்(மகாவிஷ்ணு) -
சங்கு, சக்கரம், கதை, வாள், வில்.
* பஞ்ச நிலங்கள் -
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை.
* பஞ்ச காப்பியங்கள் -
மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி, சிலப்பதிகாரம்.
* பஞ்சமா பாதகங்கள் - .
காமம்,கள்ளுண்டல்,களவு,கொலை,பொய்.
* பஞ்ச சயனம் -
அழகு,குளிர்ச்சி,வெண்மை,மென்மை,மணம்.
* பஞ்ச புராண ஆசிரியர்கள் -
நால்வர், கரு ஆருத்தேவர், சேத்தனார், சேக்கிழார், கச்சியப்பர்.
தொகுத்தளித்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ,
அன்புடன் கருணாகரன்
Labels:
கட்டுரைகள்
Tuesday, August 13, 2013
அனுபவமென்பது . . . .
அன்பு நண்பர்களே, வணக்கம்.
அனுபவம் ஒரு கவிதை ,
அனுபவம் ஒரு ஆசான் ,
அனுபவம் ஒரு வாழ்வின் தத்துவம்,
அனுபவம் ஒரு எச்சரிக்கை மணி ,
அனுபவமே குரு என்றெல்லாம்
சொல்லப்படுகின்ற
அனுபவம் என்பதை என்னென்று பார்ப்போம்.
அனுபவம் என்பது மனிதர்களின் ஒவ்வொரு
செயலுக்கும் , ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி உண்டாவது ஆகும்.
இருந்த போதிலும் அனுபவமுள்ளவர்களை
கேட்டு அதன்படி செயல்படுவதுதான் சிறந்ததாகும்.
மேலும் , அனைத்தையும் நாமே
அனுபவித்து அறிவதென்பது இயலாததாகும்.
அனுபவத்தின் வாயில்படி (செயல்பாடு)
வெவ்வேறாக அமைந்தாலும் , வெளியேற்றம் (முடிவு) ஒன்றாகத் தான் அமைகிறது.
உதாரணமாக ஒரு துறையில் , பயிலும்
மாணாக்கர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உயர்நிலையை அடைவதில்லை. அனுபவங்கள்
வித்தியாசப்படுவதால்தான் இந்நிலை ஏற்படுகிறது .
அனுபவச் சொல்லை அப்படியே கேட்டு
நடக்கும் மனோபாவம் தற்போது இல்லை என்றாலும் , தங்களுடைய சிற்றனுபவங்களை சேர்த்து
செயல்படுத்தும் போது அவை சில சமயங்களில் வெற்றியையும், பல சமயங்களில் எதிர்பார்த்த
பயன் தராமலும் முடிகின்றன.
இதனை, ஔவையார் “மூத்தோர் சொல் கேள்” என சொல்லிச்
சென்றாள்.
நாம்தான் கேட்கவில்லை , கேட்டிருந்தால் இதனை எழுதும்
அவசியமேற்பட்டிருக்காது.
மூத்தோர் என்பதினை, இப்போது நாம் செயல்படுத்த என்னும்
செயலை இதற்கு முன் செய்தவர்கள் எனக் கொள்ளவேண்டும்.
அதனால் வீட்டில் அல்லது வெளியில் உள்ள வயது
முதிர்ந்தோர் சொல் கேளாதே எனவும் அர்த்தமில்லை.
இதனை இடத்திற்கு தகுந்தார்ப்போல் அமைத்துக்
கொள்ளவேண்டும்.
ஏனென்றால் இப்போதெல்லாம் நாம் அர்த்தங்களை
அனர்த்தங்களாக்கிப் பழகிக் கொண்டோம் .
அப்படிப் பழகியதையே வாழ்க்கையாக்கி கொண்டுள்ளோம்.
ஒருவரின் அனுபவம் என்பது , மற்றவருக்கு தெரியாத ஒரு
விஷயத்தை அவருக்கு தெரிவிக்கின்றதாகும் . அதனை நாமே அனுபவித்து அறிவதென்பது மிக
காலதாமதத்தையும், பொருள் இழப்பையும் உருவாக்கும்.
அதன் பொருட்டே அனுபவம் பெற்றவரிடம் தகவல் பெறுவது நலம்
தரும் எனப்படுகிறது.
ஒருவரிடமே நமக்கு தேவையான எல்லாவிதமான அனுபவ தகவல்களும்
கிடைக்காது , அப்படி கிடைப்பது அபூர்வம்.
தேவையான தகவலுக்கேற்ப அனுபவஸ்தர்களை நாட
கூச்சப்படக்கூடாது , அவர்களும் தகவல்களை தருவதற்கு மறுக்க மாட்டார்கள் , காரணம் அவர்கள் அனுபவஸ்தர்கள்.
தெய்வீக அனுபவம் , வாழ்வியல் அனுபவம் , செய்தொழில் அனுபவம்
, செய்ய என்னும் தொழிலின் அனுபவம் என எந்த வகையிலான அனுபவங்களாக இருந்தாலும் அதனை
கண்டறிந்தவர்களின் அனுபவம் புதியவர்களுக்கு தேவை.
மேலும் அனுபவம் என்பது மிக சிறந்த பயன்தரவல்லதாகும். ஏதும்
அறியாதவர்கள் கூட அனுபவப்பட்டவர்களை நாடி அவர்களின் அனுபவம் பெற்று மிக சிறந்த
நிலையினை அடைந்துள்ளார்கள் .
இந்த நிலையினை ஒரு பாடலில் கவிஞர் ஒருவர் “அகரம் இப்போ
சிகரம் ஆச்சு – தகரம் இப்போ தங்கம் ஆச்சு – காட்டு மூங்கில் பாட்டுப்பாடும்
புல்லாங்குழலாச்சு “ என்கிறார்.
கோடிக்கணக்கான மூங்கில்களில் எல்லா மூங்கில்களும் புல்லாங்குழல் ஆவதில்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட
மூங்கில்களே புல்லாங்குழலாகின்றன, பிறந்த எல்லோரும் சிறந்த வாழ்வெனும்
வெற்றிக்கனியை சுவைப்பதில்லை, சுவைத்தவர்களின் அனுபவத்தினை கேட்டு அதன்படி
செயல்பட்டவர்களும் வெற்றியடைந்துள்ளார்கள்.
ஆனால் அனுபவம் இல்லாதவர்கள் வெற்றி பெற்றதில்லை, வெற்றி
பெற்றால் அது நிலைப்பதில்லை, காரணம் முன் அனுபவம் இல்லாத காரணத்தினால் வெற்றியை
தொடர்ந்து தனதாக்கிக் கொள்ள தெரிவதில்லை.
அனுபவம் என்றவுடன் பெரிதாக கற்பனையெல்லாம் வேண்டாம் ,
வெறும் சுடுதண்ணீர் வைப்பதற்கு கூட அனுபவம் வேண்டும் இல்லையென்றால் கையை சுட்டுக்
கொள்வோம் எனும் போது மற்றவற்றை எப்படி அனுபவமின்றி செய்வது ?
எல்லாவகையிலும் முதன்மையும், முக்கியத்துவத்தையும்
பெற்றுள்ள அனுபவம் என்பது என்ன ?
என்று மண்டையை குடைந்து யோசித்து பார்த்ததில் கவியரசர்
கண்ணதாசன் அவர்களின் கவிதையை காண நேர்ந்தது ,
அவர் சொல்கிறார்.
இதோ அவரது அனுபவமிக்க அனுபவக் கவிதை :
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
அனுபவித்தேதான் அறிவது
வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன் ? எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
"அனுபவம் என்பதே நான்தான்"
என்றான்!
-கவியரசு கண்ணதாசன்
அடடா
, அனுபவம் என்பது ஆண்டவனுக்கு நிகரானது எனப் புரிந்ததும்
மனம்
நிம்மதி பெற்றது , அதனால்தான் அனுபவம் அதிமுக்கியமானது.
இனி
எந்த செயலையும் அனுபவம் பெற்றோரிடம் கேட்டு செய்வோம் .
எதிலும்
வெற்றி பெறுவோம் ,
வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .
அன்புடன் கருணாகரன்.
Labels:
கட்டுரைகள்
Subscribe to:
Posts (Atom)