என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Sunday, October 27, 2013

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 2

அன்பு நண்பர்களே வணக்கம்.
மூலிகையும் மந்த்ரமும் என்னவென்று அறியும் முன் நாம் யோகம் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது ,
ஆகவே இந்த பதிவினில் யோகம் பற்றிய முக்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம் .
யோகமும் , மூலிகையும் , மந்த்ரமும் என்னவென்று பார்ப்போம் .

முதலில் யோகம் . . .

மனித வாழ்வினில் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் நன்மைகள் பெருகி வருவதை நாம் யோகம் என்கிறோம் , காரணம் , நமது எண்ணங்களுக்கும் , செயல்பாட்டிற்கும் மேல் அதிகமாக நன்மைகள் கிடைப்பதால் அதனை நாம் யோகம் என்று சிறப்பித்து கூறுகிறோம்.

ஆனால் இப்போது நாம் சொல்ல இருக்கும் இந்த யோகம் என்பது , மண்ணில் மண்ணாக மறையப்போகும் இந்த மனித உடல், ஒரு பெரிய சாதனையை செய்து , இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ள , வாழ்வதற்கு வர இருக்கின்ற, மனித உயிர்கள் தன்நிலையில் இருந்து உய்யும் பொருட்டு மகரிஷிகளாலும் , யோகிகளாலும் , சித்தர் பெருமக்களாலும் நமக்கு அருளப்பட்டதாகும் .
இந்த யோகம் எதிர்பாராமல் வருவதல்ல , எதிர்பாராமல் வரும் யோகமானது , நமது வாழ்நாளில் வரலாம் , வராமலும் போகலாம்.
ஆனால் இந்த யோகத்தினை பயிற்சியின் வாயிலாக நமக்கு நாமே பெற்றுக் கொள்ளலாம். அதுதான் இந்த யோகத்தின் தனித்தன்மையும் பெருமையுமாகும்.
இதனால் வருகின்ற யோகமானது , எப்பிறப்பிலும் நமது துணையாவதாகும்.

இந்த பயிற்சியினை வாசி யோகம் என்றும், ப்ராணாயாமம் என்றும் , மூச்சு பயிற்சி என்றும் கூறுவார்கள் . ஆனால் மனிதனை தெய்வ நிலை காணச் செய்வதால் இந்த பயிற்சியினை தெய்வநிலை யோகப் பயிற்சி என்பதே சரியாகும்.

இந்த யோகத்திற்கான பயிற்சிக்கு நேரம் காலமும் , உணவு முறையும் மிகவும் முக்யமானதாகும் .

இந்த யோகப்பயிற்சியை முறைப்படுத்தி பூலோக வாசிகளுக்கு அருட்கொடையாக அருளியவர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் ஆவார்கள்.

சாட்சாத் எம்பெருமான் ஆனவர் ஸ்ரீ ஸ்ரீ பார்வதி தேவிக்கு யோகத்தின் அதி சூட்சுமத்தை மனமுவந்து அருளி , தேவியானவர் அதனை பதஞ்சலிக்கும் , வியாக்ரபாதருக்கு அருள்பாலித்து , அதன்பின்னர் அவர்கள் இதற்கு வடிவம் தந்து , பின் அவர்களிடமிருந்து பணிந்து இதனைப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் இதற்கு உரிய பாடல்களையும் , பயிற்சியையும் வகுத்து மனிதர்களின் மேன்மை கருதி உலகறிய அருள் செய்தார்கள் .

பின்னாளில் வந்த பெருமைக்குரிய யோகிகளும் , சித்தர்களும் மனித ஜீவர்கள் பால் பேரன்பு கொண்டு தந்த , சிறப்பு மிக்க அந்த பயிற்சி முறையை எல்லோரும் முறையாக மேற்கொண்டால் வாழ்வில் எல்லா நலமும் , வளமும் அமைதியும், ஆனந்தமும் பெறலாம் .       
யோகப் பயிற்சிக்கு உரிய நேரம் என்னவென்று பார்ப்போம்.
24 நிமிடங்கள் என்பது ஒரு நாழிகை ஆகின்றது ,
2 ½ நாழிகை என்பது 1 மணி நேரம் .
நாளொன்றுக்கு 10 ஜாமம் .
5 ஜாமம் என்பது 12 மணி நேரமாகும் .
10 ஜாமம் என்பது 24 மணி நேரமாகும்

அப்படி என்றால் 24 மணியை ஜாமங்களாக பிரிக்கையில் 2 மணி 24 நிமிடங்கள் என்பது ஒரு ஜாமம் என்றாகின்றது.
முப்பது நாழிகைகளை 6 + 6 ஆக பிரித்தால் 5 ஆக பிரிக்கலாம்
பகற் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.
இராக் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.

இதில் பகல் முப்பது நாழிகையில், பூமியை ........

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை     (6.00-8.24)    ஆகாயமும்
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    காற்றும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை  (1.12-3.36)     நீரும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை   (3.36-6.00)          நிலமும் ஆளுகின்றன. 

இதில் இரவு  முப்பது நாழிகையில், பூமியை........

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை    (6.00-8.24)     நிலமும்  
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    நீரும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை   (1.12-3.36)         காற்றும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை    (3.36-6.00)    ஆகாயமும் ஆளுகின்றன.

இதில் கதிரவன் உதயத்திற்கு முன் 6 நாழிகையும்
(*சுமாராக காலை 3-30 மணி முதல் 6.00 மணி வரையிலும்)
பின் 6 நாழிகையும் (*சுமாராக காலை 6-00 மணி முதல் 8.24 மணி வரையிலும்) உள்ள காலமே யோகப் பயிற்சிக்கு உகந்ததாக ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் அருளுகின்றார்.

*(தினசரி சூரிய உதயம் கணித்து இந்த நேரத்தை முறையாக தேர்ந்தெடுக்கலாம்.)

திருமூலர் 3 ம் தந்திரம் , 16 வார சரத்தில்,
திங்கள் , புதன் , வெள்ளியில் மூச்சை இடைநாடி வழியாகவும் ,
செவ்வாய் , சனி , ஞாயிறில் மூச்சை வலது நாடி வழியாகவும் ,
வளர்பிறை வியாழனில்  மூச்சு இடை நாடியிலும்,
தேய்பிறை வியாழனில் மூச்சு வலது நாடியிலும் பயில வேண்டும் என்கிறார்.

மேலும்,
காலையில் யோகம் பயில கபம் நீங்கும்,
நண்பகல் யோகம் பயில கொடிய வாத நோய்கள் தீரும்,
விடியற்காலையில் யோகம் பயில பித்த நோய்கள் அகலும் என்கிறார்.

காற்றினை உள்ளுக்கு இழுப்பது “ பூரகம் எனப்படுகிறது ,
காற்றினை வெளி விடல்  “ ரேசகம் “ எனப்படுகிறது,
காற்றினை உள் நிறுத்துதல் “ கும்பகம் “ எனப்படுகிறது.

·         16 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து

·         64 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி

·         32 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் பிராணாயாமம் எனப்படுகின்றது

இந்த முறைக்கு மாறாக வலப்பக்கம் காற்றினை உள்வாங்கி பயிலுதல் “வஞ்சனை எனப்படும்.

இடைகலை வழியாக 16 மாத்திரை கால அளவு பூரகம் செய்து ,
பிங்கலையில் 32 மாத்திரை கால அளவு இரேசகம் செய்து மீண்டும்
காற்றினை உள்வாங்காமல் 64 மாத்திரை கால அளவு வெளி கும்பகம் செய்ய பல உண்மைகள் தெரியுமாம்.

மாத்திரை கால அளவு என்பது கண் இமைப்போது அல்லது கைந் நொடிப்பொழுது எனப்படுகிறது .

இந்த முறைகள் நன்கு தேர்ந்தவர்களாலேயே செய்யமுடியும்.
மேலும் இவைகளை எல்லாம் தேர்ந்த குருமூலமாகவே பயில வேண்டும்.

ஆரம்ப நிலையில் பயில்பவர்கள் , இதனை 
·         6 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து

·         24 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி

·         12 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் சாத்தியமாகின்றது என்றறிகிறோம் .
எப்படி என்றாலும் நன்றாக தேர்ந்த குருவின் துணை அவசியமாகின்றது . 

குருவின் துணையின்றி முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடது நாசியை எப்படி மூடி வலது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , கும்பகம் என்பதனை எப்படி செய்வது என்பதையும் , வலது நாசியை எப்படி மூடி இடது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , வெளி கும்பகம் எவ்வாறு செய்வது என்பதனையும் குருவின் அருகாமையில்தான் செய்ய வேண்டும் .

ஏனென்றால் குருவின் துணையின்றி இந்த பயிற்சியில் ஈடுபட்டு தோல்வி காண்பது மட்டுமல்ல , உடல் தொந்திரவுகளும் ஏற்படுவதுண்டு . ( தொந்தி , அடிக்கடி ஏப்பம் , அடிக்கடி அபானன் பிரிதல், சித்த சுவாதீனம் , பார்வை குறைபாடு போன்றவைகள் )

முறையாக பயிற்சியை பயின்றால் இதனுடைய பலன்கள் சொல்லில் அடங்காதது.

காரணம் , மனித முயற்சியினால் செய்ய முடியாத பலவிதமான சாதனைகளையும், சாகசங்களையும் நேர்த்தியாக செய்து முடிக்கலாம் ,
ஆனால் பயில்வோரின் மனதில் முழுக்க முழுக்க தன்னலம் கருதாமையும் , மக்கள் நலனும் , உலக நன்மையை கருதும் மனோபாவமும் இருப்பது அவசியமாகும் .

அடுத்து வருவது உணவு முறைகள் :

மேலே சொல்லப்பட்ட பயிற்சிகள் செவ்வனே முடித்து பயிற்சியில் உயர்நிலை காண சைவ உணவு மிக அவசியமாகின்றது . 

அசைவ உணவுகள் உண்போர் பயிற்சிகளை தொடர்ந்து பயில்வதே முடியாமல் போகும் . 

மேலும் உடல் உபாதைகளும் உருவாகும் .

அதனால் இதனை பயில முயல்வோர் அசைவம் உண்பதை நிறுத்தி விடுவதே சிறந்ததாகும் . அப்போதுதான் சிறப்பாகவும் , விரைவாகவும் பயிற்சியில் உயர்நிலை காண முடியும்.

துவரம்பருப்பு சைவ உணவல்ல என்பது மூத்தோர் கூற்றாகும் , சைவம் என்பது பாசிப்பருப்பு குழம்பு , கீரைவகைகள் , தேங்காய் போன்றவை என்பர் .

இந்த பயிற்சி துவங்குவதற்கு ஏற்ற வயது குறைந்தது 18 வயதும், அதிகபட்சம் 45 வயது எனலாம் . 

இதற்கு மேல் வயது கொண்டவர்கள் வெறும் த்யானம் மட்டும் செய்யலாம்.
உடலும் , மனமும் , எண்ணமும் , செயலிலும் தூய்மையாக இருப்பது மிக அவசியம்.  

இந்த பயிற்சியின் மூலமாக வெளிப்படுவதே அடுத்து வரும் அஷ்ட கர்மாக்களும் அதன் பலன்களும் .


அஷ்ட கர்மாக்களை என்னெவென்று அடுத்த பதிவினில் பார்ப்போம்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .

Monday, October 21, 2013

முடிவெடுக்கும் முன்னே


அன்பு நண்பர்களே வணக்கம்.
ஒருகதை சொல்லப் போகின்றேன் கேளுங்கள் .

ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .

மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்

“ வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான் .

நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் .

ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள் .
நமசிவாய என்றார் ஒருவர் .
ஓம் சக்தி என்றார் மற்றவர் .
உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.
ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .

எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .

அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்கவேண்டாம், பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது .

இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .

சில வருடங்களுக்குப்பின் . . .

திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.  

தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான் .

நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன்நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினை கண்டான் .

இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான் .

தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான் .

அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை   கண்டான்.

உடனே , அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.

“ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்க வேண்டாம்

இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.

மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான் , ஒரே ஒரு வாசகம்  ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான் . . . .

இந்த நிலை மாறும் அவ்வளவுதான்

வேறொன்றும் இல்லை .

முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான் .

தான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.

தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.

அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.

மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தவசமானார்கள்.

இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான் .

நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .

மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.

தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.

மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான் , எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .
மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .

இறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் .

அந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே “
மன்னன் : “ஆமாம் அது உண்மைதான் அன்பரே
அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .

ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.

சரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.

அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .

இந்த நிலை மாறும்

இதுதான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும்  சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .

நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.

இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் !

அன்பின் நண்பர்களே , உங்கள் சம்பந்தமான எந்த முடிவினையும் எடுக்கும் உரிமை உங்களுக்கே உள்ளது . சந்தேகம் வேண்டாம் , இதில் வேறு கருத்தில்லை , உங்களின் எந்த முடிவினையும் தடுக்கும் எண்ணமும் எமக்கில்லை .

ஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.

இந்த நிலை மாறும்


வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .
அன்புடன் கருணாகரன் .
  

  


Thursday, October 3, 2013

கால்பங்கு விதியும் , முக்கால்பங்கு மதியும்.



அன்பு நண்பர்களே வணக்கம்.
கால்பங்கு விதியும் , முக்கால்பங்கு மதியும்.

இந்த தலைப்பு எந்தகாலமும் பூமியில் வாழும் மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத, பொருட்செறிவான நடைமுறை செயல் காரண சொல்லாகும் .

விதியும் மதியும் எனபது நமது வாழ்வின் முக்யமான சொற்றொடர்கள் , இந்த வார்த்தைகளை  பயன்படுத்தாத மனிதர்களோ , ஞானிகளோ , சித்தர்களோ , ரிஷிகளோ , தேவர்களோ ஏன் தெய்வங்களோ கூட இல்லை என்றே கூறலாம்.

அந்தஅளவிற்கு விதியும், மதியும் அனைவரின் வாழ்விலும் பங்கெடுக்கின்றது.

கண்ணுக்கு புலப்படாத விதியின் பேரில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அளவில்லை , யாரேனும் விதியினை பார்த்து கேட்க போகிறார்களா அல்லது விதிதான் நம்மை நேரில் பார்த்து கேட்குமா என்னும் அசட்டு தைரியம்தான் .

எல்லாம் என் கிரக அமைப்பு , கர்மா , விதி , தலையெழுத்து , தலை விதி என்பதெல்லாம் ஒரே அர்த்தத்தைத் தரக் கூடிய அல்லது ஒரே செயலின் வெவ்வேறு பெயர்கள் ஆகும்.

ஒருவன் அல்லது ஒருத்தி  இப்படித்தான் வாழ்வார்கள் , வாழவேண்டும்  என்பது தீர்மானிக்கப்பட்டு அதன்படி அவர்கள் வாழக்கூடிய அல்லது அவர்களை வாழ வைக்கக்கூடிய பெற்றோர் அமையப்பெற்ற குடும்பத்தில்  அவர்கள் பிறந்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட முறைமையோடு வாழ்வார்கள் என்பது ஜோதிட சாஸ்திர விதியாக உள்ளபோதும் ,

வல்லான் வகுத்த விதியினை மீறி எதுவும் நடக்க இயலாது , அதுவே தான் முடிவானது என்றபோதும்,

மனிதர்களுக்கு விதிக்கப்பட விதியினை மாற்றி எழுத, அதை எழுதிய பிரம்மனாலேயே முடியாது என்பது சத்யமான சொல் எனும்போதும் ,

முற்பிறப்பில் உயிரினங்கள் செய்த செய்கைகளின் விளைவே இப்பிறப்பின் உயர்வும் , தாழ்வும். ஆகவே அதனை ஒவ்வொரு உயிரினமும் அனுபவித்தே தீர வேண்டும் என்பது சரியான தீர்ப்பென்றபோதும் ,

ஒரு கர்ப்பவதியானவள் தான் கொண்ட கர்ப்பத்தினை தானேதான் பிரசவிக்க வேண்டும் ,. அதனை எவ்வளவு நெருங்கிய உறவானபோதும் யாருக்கும் மாற்றித் தர இயலாது என்பது போல , தனது வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை மனிதர்கள் தானேதான் அனுபவிக்க வேண்டும் என்பதனை மனிதர்கள் எல்லோரும் நன்குணர்ந்த போதிலும் கூட ,
       
அந்த விதி என்னவென்றே தெரியாமல், உலகில் வாழும் ஒருவன் அல்லது ஒருத்தி, தன்னுடைய எல்லாவகையான தோல்விகளுக்கு மட்டும் விதியின் பால் குறை சொல்வதை,

ஆமாம் விதிதான் காரணம் என்று ஏற்கமுடியுமா ?

இன்னதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று எந்த ஒரு மனிதரும் தெரிந்து கொள்ள முடியாது எனும் போது , விதியினை என்னவென்று அறியாதவரை , அது எப்படி விதியின் விதியாக இருக்க முடியும் ?

நமது அசாதாரண முயற்சிகள் தோல்வியை தழுவினால் , நாம் கடுமையான முயற்சியும் , அதனை செயலாக்க மிக அதிக உத்வேகமும் காட்டாமல் விதி சரியில்லை என கூறலாமா ?.

தான் செய்யும் தவறுகளுக்கும் , தப்புகளுக்கும் விதியின் சாயம் பூசப்படுவது தடுக்கப்படவேண்டும் அல்லவா !

பலமுறைகள் கடும் தோல்வியும் எதிர்ப்பும் கண்டவர்கள் பலரும் மகோன்னத வெற்றி கண்டுள்ளதை சரித்திரம் பாராட்டி பெருமைபடுகிறதே !!
முதல் முறையிலேயே வெற்றிக் கனியை சுவைத்தவர்கள் வெகு சிலரே !!
தெரியாத விதியை எண்ணி நமது முயற்சிகளை நாம் ஏன் நிறுத்திக்கொள்ள வேண்டும் ?

விதி மனிதர்களின் எந்தமுயற்சியையும் செய்யாதே என்று தடுப்பதில்லையே?


நமது முயற்சியில் அல்லது நமது செயலாக்கத்தில் நாம் முழுமையாக ஈடுபாடற்று இருப்பதும் ஒரு காரணமாகாதா ?

முயற்சி செய்யக் கூட முயற்சிக்காதது மனிதனின் முடியாமைதானே ?

இந்நிலையில் . . .

தனது முயற்சியை யாரோ தடுப்பதாக தானே நினைத்துக்கொண்டு அல்லது தனது முயற்சியை விதியே தடுத்து நிறுத்தி வைத்திருப்பதாக எண்ணிக் கொள்வது தவறல்லவா ?

உதாரணமாக :

தனக்கு நீண்ட ஆயுள் உண்டென்ற ஜோதிட நம்பிக்கை உள்ள ஒருமனிதன் ஓடுகின்ற கனரக வாகனத்தில் தலை வைப்பது எப்படி அபத்தமானதோ !

நேரம் தனக்கு மிக நன்றாக இருப்பதாக கருதும் மனிதன் , தொழிலேதும் செய்ய முயற்சிக்காமல் , “ நேரம் நல்லா இருக்கு “ என்று சொல்லிக் கொண்டு  வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது எப்படி நன்மையை தராதோ அது போல ,

இது போன்ற தவறான நம்பிக்கைகளால் (கொள்கைகளால்), நமது எண்ணங்களோ , செயல்களோ நிறைவேறாதபோது , நமது மனம் சங்கடப்பட்டு , இறை வழிபாட்டில் நம்பிக்கையுடன் , முழுமன ஈடுபாட்டுடன் செயல்படாமல் சலனப்பட்டு போகும்.

காரணம், மனிதர்களின் இயல்பான சுபாவமே ஒன்றை உயிரினும் மேலாக நேசித்தல் அதன் பயன் தனக்கு உபயோகமில்லாவிடில் அதனை உடனடியாக வெறுத்துவிடும் என்பதாகும்.

மேலும் இதனை ஒரு சாரார் மூட நம்பிக்கை எனும் போது நம்மால் மறுத்து பேச இயலாது போகும் .

அதனால்தான் எதனையும் விதியின் மேல் ஏற்றிவிட்டால் “நான் என்னசெய்வேன் என்னால் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டேன் எல்லாம் விதி என்று நாம் சுகமாக இருக்கலாம் எனும் மனோபாவம் வளர்ந்து விட்டால், பின்னொருநாளில் இவ்வாறு மன மாற்றம் கண்டு மனிதர்கள் தன்னுடைய சுய தெய்வத்தன்மையை இழந்து விடக்கூடும் எனும் அச்சத்தினால் தான் இக்கட்டுரை பிறந்தது.

1.       விதி என்பது இதுதான் என்று யாருக்கும் தெரியாது

2.       விதியை மாற்றும் வலிமை யாருக்கும் கிடையாது.

3.       விதியை இறைவனின் கருணை இருந்தால் தெரிந்து கொள்ளலாம்

4. விதியை தெரிந்து கொண்டாலும் அதனை மீறி நடக்க மனிதர்களால் முடியாது

இந்த வலிமை மிகுந்த வார்த்தைகளில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் . இவை உண்மை மிகுந்துள்ள வாசகங்கள் .

ஆனால் அதற்காக நாம் முடங்க வேண்டிய அவசியம் என்ன?

சரி , இப்போது விதி எவ்வாறாக செயல்படுகிறதென்று பார்ப்போம்.

விதி என்பது மனிதனின் சுபநலம் அல்லது அசுப நலம் இரண்டிற்கும் பொதுக் காரணியாகும் .

நன்மையையும் தீமையையும் ஒரு விதியே தருகிறது – நன்மைக்கு ஒரு விதியும், தீமைக்கு ஒரு விதியுமாக செயல்படுவதில்லை.

அப்படியானால் நமது தீர்மானத்தில்தான் கொஞ்சம் (?) கோளாறு உள்ளது.

நாம் ஒரு செயலை செய்ய துவங்கும் வரை அமைதியாக காத்திருக்கும் விதி, நாம் செயலாற்ற ஆரம்பித்தவுடன் மளமளவென வரைபடம் தயாரிக்க துவங்குகிறது.

நமது செயல் திட்டம் சரியான இருந்து நமது உழைப்பும் சரியாக இருந்து நாமும் முழு நம்பிக்கையோடு இருந்தால் வெற்றி நமதாகின்றது.

நமது செயல் திட்டம் சரியாக இருந்து நமது உழைப்பும் , நம்பிக்கையும் முழு அளவில் இல்லாதபோது வெற்றி கிடைப்பதில்லை ,

இதனைத்தான் விதி எழுதுகிறது .

நட்டு வைத்தது முள் செடியாக இருந்தால் கங்கை நீர் ஊற்றினாலும் முள் செடிதானே முளைக்கும்.

அவநம்பிக்கையோடு , எனக்கு இதெல்லாம் நடக்காது , என் தலைஎழுத்து , கர்மா , விதி என்கிற தீர்மானமான முடிவோடு நாம் செய்யும் எந்த காரியமும் நடைபெறுவது நிச்சயமில்லைதான் . காரணம் நாம் எதனை அதிகமாக நம்பிக்கையோடு முயற்சிக்கின்றோமோ அதுதான் நடக்கும்

வெற்றி பெறவேண்டும் என்கிற சாதாரண எண்ணமும் ,

நமக்கு தோல்விதான் என்கிற தீவிரமான, நிச்சயமான நம்பிக்கையும் நம்மிடம் வேரூன்றியும் நின்றால் ,

அதுவே நமது வெற்றியின்மைக்கு முழுக் காரணமாகும்.

இப்போது புரிகிறதா ?

ஆக விதியை எழுதுவதே நாம்தான் , ஆனால் ஒவ்வொரு மனிதரும் தனக்கான விதியை தானே எழுதி விட்டு அதனை வேறு யாரோ எங்கிருந்தோ எழுதுவதாக கற்பனையும் செய்து கொண்டால் . . . .

இருட்டில் காற்றில் அசையும் துணியின் நிழலைக் கண்டு பயப்படும் குழந்தையைப் போல . .

மனிதர்கள், இல்லாத விதியினை , - இனிமேல்தான் தன்னால் உருவாக்கப்பட போகின்ற விதியினை – இப்போதே இருப்பதாக எண்ணி பயம் கொள்ளுவதும், அந்த விதிதான் தன்னை இப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது என்றெRண்ணுவதும்  அப்படித்தான் இருக்கின்றது.

விதி என்று ஒன்று உண்டு , ஆனால் அதனை தீர்மானிப்பது மனிதர்கள்தான் , இறைவன் அல்ல , கிரகங்கள் அல்ல .

இறைவனுக்கு இதுவல்ல வேலை , கிரகங்கள், நன்மை தீமை என இரண்டு விதமான கார்யங்களுக்கும் பொதுவானவை .

நன்மையை அல்லது சரியான வழியை தேர்ந்தெடுத்தால் அதன்படியும் , தீமையை அல்லது சரியற்ற வழியை தேர்ந்தெடுத்தால் அதன்படியும் நம்மை வழி நடத்தும் அவ்வளவே . அதைத் தவிர அப்படி செய்யாதே , இப்படி செய்யாதே என்றெல்லாம் கிரகங்கள் தடுக்காது .

விருப்பம் மனிதர்களது , அதனை நிறைவேற்றுவதும் மனிதர்களே , நிறைவேறாமல் செய்து கொள்வதும் அவர்களே .

கால்பங்கு விதியினை , மனிதர்கள் தங்களது முக்கால்பங்கு மதியினால் முழு பங்கு விதியாக்கும் வேடிக்கைதான் இன்றைய நடைமுறையில் காண்கிறோம்.

மனிதர்கள் விதியை சரியாக வகுத்து அதன்படி நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் , நன்மையையும், தீமையையும் பகுத்தறியும் பகுத்தறிவு எனும் பேராயுதம் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது .

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள் பெரியோர்.

விதியை மதியால் வெல்லலாம் என்பது விதியாக இருந்தால் வெல்லலாம் என்போரும் உண்டு .

இல்லாத விதியை உருவாக்கி வென்றவன் அர்ச்சுனன் , இருந்த விதியை இல்லாமல் செய்து சென்றவன் கர்ணன் .

கடுமையான தவத்தின் மூலமாக எல்லாவற்றையும் மாற்றி அமைக்கலாம் என்றாலும் அதுவும் அந்த மனிதனேதான் தவம் செய்து மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் தவம் செய்து மாற்றித் தர முடியாது ,

அப்படி எனும் போது . .

முழு மன நம்பிக்கையோடு , தீவிர முயற்சியோடு , வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்துடன் செயல்பட்டால் எல்லாவித முயற்சிகளும் ஜெயம் பெறும் என்பதே விதியாகும்.

விதியை உருவாக்குவது மனிதர்களே அன்றி வேறுயாரும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வோம் .

சரியான விதியை உருவாக்குவோம் 
வெற்றியை நமதாக்குவோம் , வாழ்வில் அனைத்து நலனும் பெறுவோம் .

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன் .
Related Posts Plugin for WordPress, Blogger...