என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, November 22, 2014

பிறப்பும் இறப்பும் ஏன் ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பிறப்பும் இறப்பும் ஏன் ?

பிறப்பு எனும் பேரதியத்தை இன்னும் மானிடர் எவரும் புரிந்து கொண்டபாடில்லை எனும் போதிலும் பிறப்பு ஒரு புதிராகவேதான் உள்ளது.
எவ்வளவோ புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் பிறப்பின் பேருண்மையை இயற்கை (இறைவன்) இன்னும் தனது ஆதிக்கத்திலேயே வைத்துள்ளதை உணர்கின்றோம்.

எதனால் இந்த பிறப்புகள்? பிறப்பினால் யாருக்கு நன்மை ? ஒரு நொடியும் தவறாமல் தைல தாரையாக நடைபெறும் , இந்த பிறப்பெனும் நிகழ்வினால் விளையும் நன்மை யாது?

பிறப்புக்கும் இறப்புக்கும் யார் அல்லது எது காரணம் ? இதனால் அவர்களுக்கு அல்லது அதற்கு என்ன ஆதாயம் ?

விதிப்படி பிறப்பதும் , விதிப்படி மரணிப்பதும் தொடர்கதையானால் இதன் முடிவு எப்போது ?

இப்படியே போனால் பிறப்பின் மீதும் ,
இறப்பின் மீதும் வெறுப்பு ஏற்படாதா ?

ஒருவித அலுப்பும் சலிப்பும் ஏற்படுமானால் பிறப்பினாலும், பின் வரும் இறப்பினாலும் என்ன பயன் ?

எந்தவித காரணமுமில்லாமல் பிறப்பும் இறப்பும் இருக்குமா ?

அப்படியானால் . . . . . .

இந்த பிரபஞ்ச தோற்றத்தின் காரணமென்ன ? அதற்கும் ஜீவன்களின் பிறப்பிற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா ?

. . . . . . . . .என்பது போன்ற எண்ணிக்கையில் அடங்காத கேள்விகள் அலைஅலையாக மனக்கடலில் எழுந்தவண்ணமாக இருந்ததால் இந்த கட்டுரையை எழுத நேர்ந்தது.

இதனை அன்பு நண்பர்கள் முன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றேன்.

பிறப்பு என்பது என்ன என்பதை முழுமையாக அறியாத வரையில் பிறப்பின் இரகசியத்தினை அறிந்து கொள்ள முடியாது.

பிறப்பினை அரிதிலும் அரிது என்றனள் ஔவை .
பிறப்பினை எதற்கும் உவமை சொல்லமுடியாதென்றார் மேலோர்.
பிறப்பினை இறப்பாக மாற்றக்கூடாது என்பதில் சமர்த்தர்கள் சித்தர்கள்.

இப்படி பல வகையிலும் சிறந்ததான பிறப்பு ஏன் இறப்பாகவும் மாறுகின்றது?

பிறப்பு சிறந்ததென்றால் இறப்பு வேண்டாமே ?

உத்தமர்களும் மரணிக்கின்றனர் , உன்மத்தர்களும் மரணிக்கின்றனர்.

ஏன் இந்த நேர்தல் ?

உத்தமரும் இறப்பர் என்றால் நான் உன்மத்தனாக இருக்கின்றேன் எனும் மனோபாபம் மனிதர்களுக்கு ஏற்படாதா ?

பிறப்பினை அரிதென்ற ஔவை பிறிதோரிடத்தில் பிறவாமை வேண்டுகின்றார்.
ஏன் இந்த முரண்பாடு ? கேள்விகள் , கேள்விகள் ?!?!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு திரைப்படப்பாடலில் பள்ளிவரை நாங்கள் , படைக்கிறவன் இறைவன் என்கிறார்.
அதாவது பள்ளியறையில் ஒன்று கலப்பதோடு மனிதனின் முயற்சி முடிந்தது அதன்பின் பிறப்பினை அருள்வது இறைவனின் பேரருள் என்கிறார்.
அது உண்மைதான், பள்ளியறையில் ஒன்று கலந்தவர்கள் அனைவரும் புத்திரபாக்கியம் பெறுவதில்லை.

அப்படியென்றால் பிறப்பினை தந்தருள்வது இறைவன்தான் (இயற்கைதான்) என்பதில் வேறு கருத்தில்லை.

அவரவர் வம்சம் தழைக்கவும் , வம்சம் தடைபட்டு போகவும் இறைவனே (இயற்கையே) முன் நின்று வழி நடத்துகின்றார்.
எத்துணை பெண் குழந்தைகள் இருந்தாலும் வம்சாவழி தோன்றாது, ஆனால் ஒரு ஆண் குழந்தை இருந்தால் வம்சம் பல்கி பெருகும்.

இந்த தோன்றலையும் , தோன்றா நிலையையும் இறைவன் (இயற்கை) அவரவர் விதிப்படி மிகச் சரியாக அமைத்து தருகின்றது.
இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

ஆனால் இந்த பிறப்பினாலும் அதன்பின் வரும் இறப்பினாலும் 
என்னபயன் ?
ஒரு வம்சம் தழைப்பதனாலும் , வம்சம் அழிந்து போனாலும் யாருக்கு என்ன பயன் ?
பகவான் கிருஷ்ணனாக இருந்தாலும் , மகாத்மாவாக இருந்தாலும் பூமியிலேயே தங்கிவிட முடியாது .
ஹிட்லராக இருந்தாலும் , கொடுங்கோலனாக இருந்தாலும் இங்கேயே தங்கிவிட முடியாது என்றால் . . . . . .
பிறப்பு எதற்கு ? இறப்பு எதற்கு ?

இறந்துதான் போகும் என்றால் பிறப்பே இல்லாமல் இருக்கலாமே !!!!!!!
பிறந்து அதன்பின் ஏன் இறப்பு நேரவேண்டும் ?

1. பிறப்பின் பின் அடையும் நாவின் சுவை , தேக சுகம் , பதவி , புகழ் தரும் மயக்கம் .
மது , மாது என வருகின்ற போக சுகங்களும் . . . . . பின் மரணம்.

2. பிறப்பின் பின் மனிதன் , யோகி , ஞானி , தீர்க்கதரிசி , மகரிஷி பின் மரணம் .
என்ன இது ? ஏதோ ஒன்று இடிக்கின்றதே ? என்ன அது ?  

பிறப்பின் காரணம் புரியாத ஒன்றுதான். ஆனால் அதில் ஏதோ ஒன்று மறைந்திருக்கின்றது .

அது என்ன ?

பிறப்பு என்பதனை சற்று ஆழ்ந்து ஆய்ந்தால் ஒன்று விளங்குகின்றது , அதாவது ஜீவராசிகளின் பாப , புண்ணிய பலனாகவே பிறப்பு ஏற்படுகின்றது.
முற்பிறப்பிலும் , இப்பிறப்பிலும் செய்த பாப , புண்ணியங்களின் பலனாகவே இறப்பு நேர்கின்றது.
மீண்டும் பாப , புண்ணிய பலனாக பிறப்பு , மீண்டும் முற்பிறப்பின் , இப்பிறப்பின் பலனாக இறப்பு .
இதுவே தொடர்கதையாகி இன்றுவரை மட்டுமல்ல , இனி வரும் காலமும் தொடரும் கதை.
இதன் பொருளென்ன ? இதற்கு விடைதான் என்ன ?

இதோ விடை .....

ஒரு காரியத்தின் நிமித்தமாக நாம் வெளியூருக்கு சென்றால் , அந்த காரியம் நடைபெறவில்லையென்றால் என்ன செய்வோம் ? மீண்டும் அந்த ஊருக்கு சென்று அந்த காரியத்தினை செய்து முடிப்போம்.

அப்போதும் முடியாது போனால் மீண்டும் ஒருநாள் சென்று அந்த காரியத்தினை செய்வோம்.

இப்படி அந்த குறிப்பிட்ட காரியம் முடியும் வரை அந்த ஊருக்கு மீண்டும் மீண்டும் செல்வோம் அல்லவா ?

அது போலவே நாம் நமது ஒவ்வொரு பிறப்பின்போதும் அறிந்தும் , அறியாமலும் நாம் செய்த பாப , புண்ணிய காரியங்களின் தொகுப்பை கரைப்பதற்காக மீண்டும் புவியில் பிறப்பிக்கப்படுகின்றோம் ,

ஆனால் . . . .   

பிறப்பினை , அதன் சிறப்பினை உணராமல் மீண்டும் மீண்டும் பாபங்களையும் , புண்ணியங்களையும் செய்து மரணித்து மீண்டும் இறைவனின்(இயற்கையின்)பேரருள் கருணையால் பிறப்பிக்கப்படுகின்றோம்.

நாம் எதற்காக பிறப்பிக்கப்பட்டோமோ அதனை முற்றிலுமாக மறந்து , வெறும் கேளிக்கை , பதவி , புகழ் , பணபலம் , பெண் சுகம் அல்லது ஆண் சுகம் என புறச் சுக ஆவலிலேயே வாழ்நாளை கழிக்கின்றோம், மரணிக்கின்றோம்.

நாம் வந்த காரியத்தினை முடிக்காததினால் மீண்டும் ஒரு பிறவி தரப்பட்டு  இப்பிறவியிலாவது நாம் மாறுவோம் என எதிர்பார்க்கப்படுகின்றது .

ஆனால் மனிதன் அதைப்பற்றி கொஞ்சமும் கவலையின்றி மீண்டும் சிற்றின்ப வேட்கையில் சிக்கி சீரழிகின்றான் , மரணிக்கின்றான்.

இப்படியே பிறந்து இறந்து , பிறந்து இறந்து தொடர்கதையாகி போகின்றான்.
ஆக
பிறப்பு என்பது மீண்டும் ஒரு சந்தர்ப்பம்.
பிறப்பு என்பது மீண்டும் ஒரு வாய்ப்பு ,
பிறப்பு என்பது மீண்டும் ஒரு வரம் ,
பிறப்பு என்பது மீண்டும் ஒரு அருள்கொடை ,
பிறப்பு என்பது மீண்டும் தரப்படும் இறைவனின் (இயற்கையின்) பேரருள்.
பிறப்பின் வாய்ப்பினை பயன்படுத்தி பிறப்பற்ற நிலையை ஜீவன்கள் பெற கொடுக்கப்படும் இறைவனின் பெருந்தயை.

இதனை ஸ்ரீ நாரத மகரிஷி கண்ட ஒரு சம்பவம் விளக்குகிறது .

நாரத மகரிஷி ஒருமுறை ஒரு பன்றி குட்டி போடுவதை காண்கின்றார்.
இவரைக் கண்டதும் பன்றியின் குட்டி ம்ரணிக்கின்றது.
பதறிப்போன மகரிஷி வேறுபக்கம் போகின்றார் , அங்கே ஒரு ஆடு குட்டி போடுகின்றது அதனைக் காணுகின்றார் மகரிஷி , பிறந்த அந்த ஆட்டுக்குட்டி இவரைக் கண்டதும் இறந்து போகின்றது , மேலும் பதறிப்போன நாரதர் வேறொரு இடத்தில் காராம்பசு கன்று போடுவதை பார்க்கின்றார் , அந்த கன்றும் பார்க்கின்றது , பார்த்தவுடன் கன்று மரணம் அடைகின்றது .

மிகவும் கவலை அடைந்த நாரத மகரிஷி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகின்றார் , அவரை சமாதானப்படுத்தும் 

மகாவிஷ்ணு , நாரதா ,   “ நீ சென்று அதோ அந்த நாட்டு மன்னனுக்கு ஒரு மகன் பிறக்கப் போகின்றான் அவனை சென்று கண்டுவா  என்கின்றார்.
ஸ்வாமீ , ஏதும் விபரீதம் நடைபெறாதே என வினவுகின்றார் , நாரதர். கவலைப்படாதே சென்று பார் என்கின்றார் மகாவிஷ்ணு.

நாரத மகரிஷி சென்றார் அந்த குழந்தையை கண்டார் , கண்டவுடன் சட்டென்று திரும்பினார் , 
அப்போது அந்த குழந்தை பேசியது “ மகரிஷி அவர்களே , கொஞ்சம் நில்லுங்கள்.
நான் பன்றியின் குட்டியாக பிறந்தேன் தங்களின் திருப்பார்வை என்மீது பட ஆட்டின் குட்டியாக மறுபிறப்பெடுத்தேன், மீண்டும் தங்களின் பார்வையை என்மீது செலுத்தி என்னை காராம்பசுவின் கன்றாக பிறக்கச் செய்தீர்கள் , மறுபடியும் தங்களின் திவ்ய திருஷ்டியைப் பெரும் பாக்கியம் பெற்ற நான் இன்று மன்னனின் வாரிசாக பிறக்கும் வாய்ப்பினை பெற்றேன் தங்களின் நற்கருணைப் பார்வையைப் பெற்ற நான் புவியில் நல்லவனாக வாழும் பேற்றினை அருள்வீர்களாக என வேண்டிக் கொண்டது.

இதிலிருந்து புரிவது என்னவென்றால் ஒவ்வொரு ஜீவனின் பிறப்பும் மேன்மையை நோக்கிய பயணமாக அமையவேண்டியது , ஆனால் மன மாயையினால் கீழ்மையை நோக்கிய பயணமாக மாற்றம் கண்டு இன்று பல்லாயிரம் கோடி உயிரினங்களாக பல்கி பெருகி நிற்கின்றது .
பிறப்பின் அவசியமும் , பெருமையும் ஜீவராசிகளை மேல்நிலையை அடையச் செய்வதற்காக இறைவன்(இயற்கை) தரும் சந்தர்ப்பம்.

பிறப்பு ஜீவன்களுக்குத்தான் ஆதாயம்.

ஆகவே பிறப்பினை கேவலப்படுத்தி வாழ்ந்து மரிக்காமல் , பிறப்பினை உணர்ந்து மேன்மையான வாழ்நிலையை அடைந்திட பயன்படுத்தினால் , நிச்சயம் , மீண்டும் பிறக்கும் நிலை அற்றுபோகும் வாய்ப்பினை பெறலாம் என்பது சர்வ நிச்சயம்.

இல்லையானால் மீண்டும் மகாபாரதம் போல ஒரு பேரழிவினை காண்பது திண்ணம்.
கொத்துகொத்தாக ஜீவன்கள் கொல்லப்படும் , சுனாமி, பெருந்தீ போன்ற அதனை இறைவனே (இயற்கையே) முன் நின்று நடத்தும் என்பதும் நிச்சயம்.

பிறந்து பிறப்பினை உயர்த்துவோம், இறந்து பிறப்பினை தவிர்ப்போம்.

அன்புடன் கருணாகரன்.

ஓம் நமசிவய.  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...