என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, April 19, 2013

கண்ணனும் வெண்ணையும்


அன்பின் உள்ளங்களே, வணக்கம்.

கண்ணனும் , கண்ணன் கவர்ந்த வெண்ணையும்.

கண்ண பரமாத்மாவின் சிறுவயது லீலைகளை படிக்கும் போது ஒரு விஷயம் எல்லோரும் படிப்போம் .அதாவது கண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணையை திருடி உண்டதாகவும் , அதற்காக அந்த நந்தன் கிராமத்து மக்கள் அந்த கிராமத்தின்  தலைவனான (கண்ணனின் வளர்ப்பு தந்தையான) நந்தனிடமும் , கண்ணனின் வளர்ப்புத் தாயிடமும் புகார் சொல்வதாகவும் , அதற்காக கண்ணன் தண்டிக்கப் படுவதாகவும் சம்பவங்கள் நிறைந்து காணப்படும் .

யோசித்துப் பாருங்கள் . . . . .

நந்தனுக்கு சொந்தமான பசுக்கள் ஏராளமாக இருக்க , நந்தன் வீட்டில் இருந்துதான் கம்சனின் அரண்மனைக்கே பால் தயிர் வெண்ணை போன்றவை கொண்டு செல்கின்றார்கள் என்றிருக்க தன் வீட்டில் வெண்ணை கிடைக்காமலா அயலார் வீட்டில் திருடி இருப்பான் கண்ணன்.

மேலும் வெண்ணையை எந்த குழந்தையும் விரும்பி உண்பதில்லை , நெய்யை வேண்டுமானால் குழந்தையின் உணவில் சேர்ப்பார்கள் .

இலகுவாக பிரசவிக்க உதவும் என்பதால் வெண்ணையை கர்ப்பிணி பெண்களுக்கு பிரவச காலத்தில் கொடுப்பார்கள் .

குழந்தைகள் வெண்ணையை விரும்பி உண்பதில்லை, ஆனால் குழந்தை கண்ணன் வெண்ணையை (தன்வீட்டில் இருப்பதை உண்ணாமல் பிறர் வீட்டில் சென்று அவர்கள் இல்லாதபோது திருடி) உண்டான் என்றால் எங்கோ இடிக்கின்றதே..
                                                          
என்று கொஞ்சம் ஆ.............ழ்ந்து யோசித்தபோது புரிந்தது,

அந்த மாயவனின் தெய்வ சூட்சுமம்.

வெண்ணையை காரணியாக்கிய கோபாலனின் பிரம்ம தத்துவம்.

பாலும் தண்ணீரும் இரண்டறக் கலந்தே உள்ளதாகும்.

பாலுடன் கலந்திருக்கும் தண்ணீரை என்ன செய்தாலும் பிரிக்க முடியாது பால் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் பிரிக்கும் ஆற்றலை அன்னம் எனும் பட்சி பெற்றிருந்ததாகவும் அது பாலை குடித்துவிட்டு தண்ணீரை அப்படியே விட்டுவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன ஆனால் நாம் கண்டதில்லை அல்லவா ?

நாம் பாலுடன் உள்ள தண்ணீரை பிரிக்க என்ன செய்யவேண்டும் ?

பாலுடன் இரண்டற கலந்துள்ள தண்ணீர், பாலை விட்டு பிரிய வேண்டுமானால் பாலை பதமாக காய்ச்சி பழைய தயிரை அதில் கொஞ்சம் கலந்து வைத்தால் பால் கெட்டி தயிராக மாறும். இந்நிலையிலும் இதனுடன் தண்ணீர் கலந்தேதான் இருக்கும்.

இப்போது மத்து கொண்டு அதனை கடைந்தால் வெண்ணை வரும் அல்லவா – அந்த வெண்ணையை தண்ணீரில் என்னதான் கலந்தாலும் வெண்ணையும் தண்ணீரும் ஒன்று சேரவே சேராது.

கண்ணன் இந்த வெண்ணெயைத்தான் தேடி இருக்கின்றான் .

சரி என்ன சொல்ல வருகிறீர்கள் , என்கிறீர்களா ? அதைத்தான் சொல்ல வருகின்றேன்.
        
இப்போது மனிதர்களின் சுபாவத்தைப் பார்ப்போம்

மனிதனும் ஆசையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதது!

பாலும் தண்ணீரும் போல அல்லவா !!!

மனிதன் தனது பிறப்பின் நிலையை கண்டுணர்ந்து தனது பிறப்பின்
ரகசியத்தை அறிய முற்படும்போது தனது நான் யார் நான் யார் என்றெழும்பும் 
மனக்கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு தன்நிலையில் உஷ்ணப்பட்டு பதமாகி ஒரு குருவைநாடி அவரது சிட்ஷையால், தான் மனமிருகி தன்னுள் ஆழ்ந்து தன்னை தீவிர பயிற்சியில் ஆட்படுத்தும் போது ஞானம் வெளிப்படும் , ஞானம் வெளியானால் மனிதன் பூரணமான நிலை அடைகின்றான் – இப்போது ஆசை அவனை ஆட்கொள்வதில்லை – இவனை ஆட்டிவைத்த ஆசையை இவன் ஆட்டிவைக்கின்றான் – ஆசையின் மேல் சவாரி செய்கிறான்.

இங்கே

பால்  என்பது, மனிதன்

தண்ணீர் என்பது, ஆசை

பதமாக காய்ச்சுதல் என்பது, தன்னுள்ளே எழும் நான் யார் எனும் கேள்விகள்

பழைய தயிர் என்பது, ஒரு குரு

தயிர் என்பது, தான் மனமிருகுதல்

மத்து என்பது, தீவிரமான பயிற்சி

வெண்ணை என்பது, ஞானம்

இப்போது புரிகின்றதா கண்ணன் தேடியது வெண்ணையைப் போன்று 

தண்ணீரின் மேலே சவாரி செய்யும், ஆசையை வென்ற ஞானவான்களை.

ஆசையின் மேல் அமர்ந்து, அதனை அடக்கி அல்லது அதன் பாதையை மாற்றி, இறைவனை நோக்கிய பயணமாக்கும் கலையை கற்றுணர்ந்தவர்களைத்தான்அந்த மாயக்கண்ணன் தேடியிருக்கின்றான் என்பதை நானுணர்ந்தபோது என் மனம் ஆகாயத்தில் மிதந்தது.       


நாம் பார்த்த அந்த கண்ண பரமாத்மாவின் ஞானம் என்பது மிக மேலான நிலை பற்றி சொல்வது.

அந்த நிலை காண்பதற்கு மிக நாளாகலாம்.

நாம் முதலில் ஞானம் என்பதன் பொருள் காண்போம்

ஞானம் என்றால் ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை அல்லது ஒரு காரியத்தை அல்லது ஒரு நிலையை அதன் முழுமையை அறிதல் ஞானமாகும், அதற்குமேல் அதில் காண ஒன்றும் இல்லை என ஒரு முடிவில் நிலையாவது ஞானம் ஆகும். அதாவது அதனை இப்படியும் சொல்லலாம் பரிபூரணமான நிலை காண்பது எனலாம்.

     ஒரு நிலையின் ஞானம் என்பது அதன் பூரணம் காண்பதே.

பூரணம் காண்பவர்கள் முதன் முதலில் காண்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதில் அனுபவம் இல்லாத காரணத்தால் முன் வரும் நிலையையே அவர்கள் பூரண நிலை என கருதிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது.

     ஆதலால்தான் குரு ஒருவர் துணையுடன் நாம் எதையும் அறிய முயலவேண்டும் குரு என்றால் தற்போது நாம் செல்ல நினைக்கும் அல்லது செய்ய நினைக்கும் செயலில் முன்பே அனுபவப்பட்டவர்கள்.

     ஏனென்றால் நாம் ஒன்றை பூரணம் என்று எண்ணி அதை நாம் கண்டதாக நினைத்திருப்போம், நாளடைவில் அதன் பூரணநிலைக்கான பலன்களோ அல்லது அது பூரண நிலையில்லை என வேறு ஒருவரோ நம்மிடம் சொல்லும் போது நமது மனம் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் நாம் சங்கடப்பட நேரும்.

     ஞானம் என்பது ஒரு விஷயத்தின் முழு சாரமாகும். அதனை எல்லோரும் அடைய முடியும்.

என்னிடம் ஒருவர் கேட்டார் ஸ்வாமீ யாரெல்லாம் யோகநிலையின் முழுமையைக் காணமுடியும்?

நான் சொன்னேன், யாருக்கெல்லாம் உள் நாக்கு உள்ளதோ அவர்களெல்லாம் தகுதியானவர்களே ! உள் நாக்கின் உபயோகமே அதுதானே என்றேன்.

     நாமே நம்மை ஒவ்வொரு நிலைக்கும் உட்படுத்தி சோதித்து அதனை அறிந்து நாம் முழுமை அடைய வேண்டும். அதற்கு நமக்கு எதனையும் அறிந்த குரு ஒருவர் வேண்டும். அவரின் துணையோடு நாம், நாம் விரும்பும் நிலை அல்லது நாம் அறிய விரும்பும் விஷயம் அல்லது நாம் விருப்பப்படும் பூரணம் ஆகியவையை காண முற்பட வேண்டும்.

     இன்று எல்லா குருமார்களும் பணம் பண்ணும் கருவியாக, தான் கற்றுக் கொண்ட ஓரிரு வித்தைகளை வைத்துக்கொண்டு செயல் படுகிறார்கள், ஒரு முறை நான் சென்னைக்கு வந்திருந்தபோது ஒரு போஸ்டர் கண்டேன் அதில் ரூபாய் 250/- மட்டுமே! உங்களுக்கு குண்டலினியை ஆறு நிலைகளில் உயர்த்தும் யோகம் கற்றுத்தரப்படும் என்றிருந்தது.

எனக்கு பகீர் என்றிருந்தது. என்ன இது மளிகை கடை சரக்கா ஏற்றுவதற்க்கும் இறக்குவதற்கும். 

இந்த மலிவான விளம்பரங்களை கண்டு அங்கே போகும் அன்பர்களின் காசு மட்டுமே அந்த குருமார்களின் குறியாக இருக்கும். கற்றுக்கொள்பவரின் உயிர் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

     அது மட்டுமல்ல ஒரு குருதான் இந்த பூமியை காப்பாற்ற வந்ததாக சொல்வார், இன்னொருவர், தான் இந்த பூமியில் உள்ளவர்களை வழி நடத்த வந்ததாக சொல்வார், இன்னொருவர், தான்தான் அந்த          இறைவனென்று சொல்வார், இன்னொருவர், எனக்கு கோயில் கட்ட சொல்லி இறைவன் அனுப்பி உள்ளார் என்பார், இருபது அடி உயர லிங்கம் ,  அறுபது அடி உயர லிங்கம், எண்பது அடி உயர லிங்கம் என்று  சிவன் கோயில்களாக கட்டுவார்.

     நமது தேன் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் இருக்க அதிலே பல ஆயிரம் கோவில்கள் பராமரிப்பின்றி சிதிலமாகி வீணாகிப் போய் இருக்க இவர் புதியதாக கோவில் கட்ட என்ன அவசியமோ தெரியவில்லை, நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏழைகள், குழந்தைகள், ஊனமுற்றோர்கள், வாழ்விழந்தவர்கள், வாழ வழியற்றவர்கள் என இருக்க அவர்களின் தேவைகளுக்கு ஏதோ முடிந்ததை செய்யும்படி அவர்களுக்கு இறைவன் சொல்ல வில்லையா? கோவில்களாக குவிந்துள்ள நமது நாட்டில் புதிய கோவில் கட்ட சொல்லி கட்டளையிட்டார் என்றால் அந்த கோவில்களுக்கு எந்த நால்வர் பாடுவார்கள்? எந்த ஆழ்வார்கள் பாயிரம் பாடுவார்கள்.

இன்று அவர்களால் பாடப்பெற்ற ஸ்தலங்களே பராமரிப்பின்றி போகும் போது இவருக்குப் பின் இந்த கோவில்கள் நிலை என்னவாகும்?
    
     திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் உள்ள குளக்கரையில் ஒரு கல்வெட்டுண்டு அதில் கோவிலை நிர்மாணித்த மன்னன் எழுதி உள்ளான், என்ன தெரியுமா? இந்த கோவிலில் எங்கேனும் முளைத்துள்ள புல் பூண்டுகளை யாரேனும் அகற்றி சுத்தப்படுத்தினால் அவர்களின் பாதங்களை என் சிரம் தாங்குவதாக படிக்கும் போதே உடல் சிலிர்க்கிறதே!

அவன்தான் உண்மையான இறைவனின் தூதன்.
      
     ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரிகிறது. மக்கள் தேடல் துவக்கி விட்டார்கள். அவர்களின் ஞானத் தேடலை வைத்து இவர்கள் சுகவாழ்வுக்கான அஸ்திவாரம் போட்டுக் கொண்டார்கள். ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்த சாமியார்களெல்லாம் இப்போது கோடீஸ்வரர்கள், மிக எளிமையான பணம் சம்பாதிக்கும் வழி இன்று இரண்டு. ஒன்று சாமியார் ஆவது. இரண்டு. பள்ளிக்கூடம் கட்டுவது இரண்டிலும் நாம் ஏமாந்து போகத்தான் நிறைய வாய்ப்புண்டு.       

இப்போது நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும், ஏனென்றால் இறை நம்பிக்கை இல்லாமல் கூட இருந்துவிடலாம். நம்பிக்கையுடன் இருந்து ஏமாற்றப்பட்டால் அது அவர்களை மீண்டும் இறைவழிபாட்டில் ஈடுபடவே செய்யாது. மனம் மிகவும் நொந்துவிடும்.

இவர்களிடம் சிக்காமல் இருக்கவேண்டும், தற்போதைய குருமார்கள்
கிட்டத்தட்ட ஒரு குறுநில மன்னர்களாகவே செயல்படுகிறார்கள், இவர்களைக் காண கட்டணம் வசூல் செய்கிறார்கள், அவரிடம் பேசுவதற்கு பத்தாயிரம் ரூபாய் இருபதாயிரம் ரூபாய் வரை பில் செய்யப்படுகிறது.

     அவரவர்களுக்கு ஒரு யோகாமுறைகள், அவரவர்களுக்கு ஒரு இசைமுழக்கம், அவரவர்களுக்கு ஒரு பக்தர் கூட்டம். ஒரே தமாஷ்தான்.

ஆனால் எல்லாம் ஒரே பரம்பொருளைத் தேடித்தான். ஏனிந்த பேதங்கள். இவர்கள் (குருமார்கள்) ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது கூட இல்லை. ஆனால் இறை கொள்கையாளர்கள்.

ஏன் இவர்களுக்குள் இந்த பேதம்?

இறைவனின் கொள்கையாளர்களே இப்படி பேதப்பட்டால் சாதாரணமானவர்களின் கதி என்ன?    

உண்மையை (ஞானத்தை)உணர நாம் நம்மையே

உட்படுத்தாவிடில் இவர்களின் (இந்த குருமார்களின்)

ஞானப்பந்தாட்டம் தொடரும். 

தொடர விடுவதும் விடாததும் நமது கையில்தான் உள்ளது. அடையாளம் கண்டு. . . . . 

ஒதுங்குங்கள் அல்லது ஒதுக்குங்கள். 

வாழ்த்துக்கள்.

Wednesday, April 17, 2013

வெற்றியாளன் யார்


அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.

வெற்றியாளன் யார் ?

நண்பர்களே, வாழ்வியலில் நமது வெற்றிகள் பலவகையிலும் தீர்மானிக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றது.

நாம் குழந்தையாக இருந்தபோதே நமக்கு முன்பிறந்தவர்கள் , பின் பிறந்தவர் களோடு நம்மை ஒப்பிட்டு பேசி நமது செய்கைகளை கண்டு வியந்து நமது வெற்றியை தீர்மானித்தார்கள்.

“ இவனுக்கு ஒன்றரை மாசத்திலேயே தலை நின்னுடுச்சி ன்னு துவங்கி ...
“அந்த குழந்தை ஒன்றரை வருடமாச்சு பேச இவன் குழந்தையிலேயே பேச ஆரம்பிச்சுட்டான்

“அம்மான்னு இவன் கூப்புடர்தே புது தினுசுதான் “

“பாலுங்கரத பாவுன்னுதான் கேப்பான் அதுவே அழகா இருக்கும் “

ஏய் .. ஏய் .. யாரும் புடிக்காமலே நடக்கிறான் பார் “

“ஆனா ஆவன்னால்லாம் சொல்வான், எ பி சி டியே அவனுக்கு அத்துப்படி “
“இன்னும் ஸ்கூல்ல போடல- “அவுங்க அக்கா படிக்கிறத பாத்துக்கிட்டே இவன் கத்துக்கிட்டான் பிரில்லியண்ட் பையன்

“தாளம்ன்னு கேட்டுட்டாபோதும் ஒரே டான்ஸு தான் , யார்கண்டா இவன் அடுத்த பிரபு தேவாவா வந்தாலும் ஆச்சர்யப்படர்துக்கில்ல “

“ஒருதரம் சொன்னா போதுங்க! அப்பிடியே புடிச்சிக்கிறான், அப்புறம் எப்ப கேட்டாலும் அப்பிடியே சொல்றான்னு, அவுங்க டீச்சரே அதிசயமா சொல்றாங்கஎன்று சொல்லி சொல்லி படிப்படியாக நாம் வளர வளர நமது வெற்றி பலவழிகளிலும் கண்டு ஆராயப்பட்டது.

கல்வி கற்கையில் கல்வியோடு நமது ஒழுக்கமும் கணக்கிடப்பட்டு நமது வெற்றி தீர்மானமானது.

பணி தேடல் துவங்கியதும் , கல்வியுடன் , ஒழுக்கம், பணபலமும் சேர்ந்து நமது வெற்றியை தீர்மானித்தது.

திருமண வயதில் நமது வெற்றி என்பது கல்வி, ஒழுக்கம், தொழில், வருமானம், குடும்ப பின்னணி இவைகளைக் கருத்தில் கொண்டு நம்கையில் வந்து சேர்ந்தது.

திருமணத்திற்கு பின் மனைவிக்கு நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள், குழந்தைகள் , அவர்களின் கல்விக்காக சேர்த்துள்ள பள்ளி மற்றும் எதிர்காலத் திட்டங்கள், நமது  தொழில் முன்னேற்றம் , நமது வசதியின் பெருக்கம், நமது வாழ்வின் எதிர்காலத் திட்டம் போன்றவைகளை நாம் தீர்மானித்துள்ள முறைகளைக் கொண்டு நமது வெற்றி முடிவாகின்றது.

இறுதியாக நமது வாழ்வின் முடிவில், அதுவரை வாழ்வில் நாம் கடந்து வந்த பாதையில் நாம் செய்த நற்கர்மங்கள் , மற்றவர்களோடு நாம் வைத்திருந்த நல்ல பழக்கங்கள், எல்லோருக்கும் ஒரு மனிதனாக நாம் செய்த நற்பண்பு, தொண்டுகள் ஆகியவைகளைக் மனதில் கொண்டு - நாம் வாழ்நாள் முழுவதும் பெற்ற வெற்றிகளை கருத்தில் கொண்டு நமக்கு வெற்றிக்கனியாக “ அடடா ,ஒரு நல்லவனை இழந்தோமே என மற்றவர்கள் வருத்தப்ப்படும்போது “ அந்த வார்த்தைகளே நமது வெற்றிகரமான வாழ்க்கையின் சான்றாக நமக்கு தரப்படுகிறது.

ஆனால் உண்மையில் நாம் எப்போது வெற்றி பெற்றோம் தெரியுமா ?
கோடானுகோடி அணுக்களிலே ஒன்றாக இருந்த நாம் அத்தனை கோடி அணுக்களையும் பின்னுக்கு தள்ளி, ஒரு முழுவேகத்தை நம்முள் கொண்டு வந்து, அனைத்திற்கும் முன்னே சென்று வேறொரு அணு நம்மை பின் தள்ளி முந்துவதற்குள் , முட்டி மோதி உள் புகுந்து உயிர் பெற்றோமே ! அந்த புனித நாள் நினைவிருக்கின்றதா ? 

அன்றே நமது வெற்றியின் துவக்கம் துவங்கிய பொன்னாள், நன்னாள் .

அந்த நாளை நாம் எல்லோரும் மொத்தமாக மறந்துதான் போனோம் .

இல்லையென்றால் உப்புசப்பற்ற விஷயத்திற்கெல்லாம் “ நான் எடுத்த இந்த காரியமும் உருப்பட்டதே இல்லை என்று புலம்புவோமா ?

சின்ன சின்ன வெற்றி பெறாத நிகழ்ச்சிகளை கண்டு “ தோல்விதான் எனக்கென தரப்பட்டது “ என நம்மை நாமே அதைரியப்படுத்திக் கொள்வோமா ?

எதைப் பார்த்தாலும் பயந்து “ நான் தொட்டாலே எதுவும் சரியா வராது என்னை விடுங்க “ என்று சொல்லி நம்மையே நாம் தரம் தாழ்த்திக் விமர்சிப்போமா ?

நாலுபேர் நம்மைபற்றி பேசும்போது நம்மை முன்னிறுத்தி காட்டாமல் ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் பதுங்குவோமா ?

எல்லாம் என்தலையெழுத்து , நானென்ன செய்வேன் என்று விதியின் பின்னே ஒளிந்து கொள்வோமா?

இப்ப நேரம் சரியில்ல , நல்ல நேரம் வரட்டும் அப்ப நான் யாருன்னு காட்டறேன்னு ஜோதிடம் - ஜாதகத்தை துணைக்கு அழைப்போமா ?

சாமிக்கித்தான் கண்ணிருக்கா இல்லையா தெரியல, மோசமானவன்ல்லாம் நல்லாருக்கான், யாருக்கும் ஒரு தப்பும் நினைக்காத எனக்குதான் அடுக்கடுக்கா ப்ரச்சினைன்னு அங்கலாய்ப்போமா  ?

சரி , நாம் ஏன் தோல்வியை தேடவேண்டும் !

ஒரு பேருண்மை தெரியுமா?

நாம் எதனை அதிகம் நேசிக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம் என்பதே உண்மை.

நாம் நினைப்பது என்னவோ சுகமான , சந்தோஷமான , நிம்மதியான வாழ்வைத்தான்.

ஆனால் நாம் அதிகம் சிந்திப்பதும், பேசுவதும் , தோல்வியும் அதன் தொடர்பான வீழ்ச்சியையும்தான் . அதனாலேயே நமது தோல்விகள் நம்மை தொடர்ந்து வருகின்றன.

காரணம் நம்மை அறியாமலேயே நாம் அவற்றை அதிகம் நேசிக்கின்றோம். எந்த நேரமும் தோல்வி , முடியாது , எனக்கு அவ்வளவுதான், என இப்படியே தானே சிந்திக்கின்றோம்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நமது சிந்தனை இப்படியே தொடர்ந்து வீழ்ச்சியின் உருவகமாக இருந்தால் அதுவே தொடர்கதையாவது நம்மாலேயே உறுதியாக்கப்பட்டு விடும்.

ஆகவே முதலில் நம்மை புரிந்து கொள்வோம். 
     
நாம் வெற்றியின் வித்து , வெற்றியின் முழு வடிவம் , வெற்றிக்கு எடுத்துக்காட்டு , வெற்றியின் அடையாளம்.

உயிருள்ள ஒவ்வொரு மனிதனுமே வெற்றியின் சின்னம் என்பதும் , நாமே  சிறந்த வெற்றியாளன் என்பதையும் என்றுமே மறக்கவேண்டாம் .

Saturday, April 6, 2013

படிப்பதும் இடிப்பதும்


அன்பு நண்பர்களே, வணக்கம்.
இந்த தலைப்பின் பெயர் படிப்பதும் இடிப்பதும்

எதுகை மோனைக்காக எழுதப்பட்ட தலைப்பு என்று எண்ண வேண்டாம்.
இது கொஞ்சம் மனஆதங்கத்துடன் தேடி சூட்டப்பட்ட தலைப்பு.
பொதுவாகவே நம்மில் பலரும் தவறாமல்  செய்யும் ஒரு காரியம் என்னவென்றால் ..

நாம் எல்லாவிதமான நல்ல விஷயங்களையும், அரிதான தகவல்களையும், பெரியோர் சொன்ன அமுதமான வார்த்தை நிறைந்த வாழ்வியல் சித்தாந்தத்தையும் ஊன்றி படிக்கின்றோம்.
படித்தவுடன் அதனை அப்படியே மனதில் வாங்கி அந்த தகவல்கள் எல்லாம் நமக்கெனவே எழுதப்பட்டதாக மனதினில் ஒரு தாக்கம் ஏற்பட்டு “அடடா , இந்த தகவல் நமது மனதினில் இருக்கும் கேள்விக்கான பதிலாகவே அமைகிறதே என்ன இயற்கையின் கருணை, எப்படியெல்லாம் இயற்கை நம்மை ஆட்கொள்கிறது என்று பலவாறாக சிந்தித்து இனி நாம் இதன்படிதான் நமது நடவடிக்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் சந்தோஷித்து அன்றுமுதல் நமது பழக்க வழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள முயற்சி மேற்கொள்வோம்.
ஆனால் ஓரிரு நாட்களில் நமது நண்பர்களோ அல்லது நமது மனமோ நம்மைப் பார்த்து சிரித்து “ நீயென்ன இந்த உலகை மாற்றி அமைக்கவந்த மகானா ? இல்லை நீ ஒருவன் சொல்லிதான் எல்லாம் மாறப்போகிறதா ? என்னமோ நூறு வருஷம் வாழப் போறவனாட்டம் , போடா..போ..இருக்கும் வரை நல்லா இரு! யாருக்கும் தீங்கு நினைக்காதே! அது போதும் சும்மா என்னவோ பேசறான், இப்பத்தான் ஞானம் வந்தவனாட்டம் என்று நம்மை கொஞ்சம் லேசாக அசைத்தவுடன் ...
நாம் உடனே சிந்திக்கின்றோம் , ஆமாம் , இவர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது ? அவுங்க சொல்றது சரிதானே ! ஏதோ நாம் சொன்ன உடன் எல்லோரும் திருந்தி உலகமே மாறப்போவது போல நாமே கற்பனையில் நினைச்சிக்கிட்டு அதுக்காக நம்மையும் வருத்தி நம்மைச் சேர்ந்தவர்களையும் வருத்தறோமே ! யாருக்கும் தீங்கு நெனைக்காம இருந்தா இதுவே பெருசு என நம்மேல் நமக்கே பரிதாபமாகி ஒரு சுய பச்சாதாபத்துடன் நம்மை நாமே பார்த்து, ஏண்டா! உனக்கு இந்த வேண்டாத வேலை , போடா போ என்று சொல்லிக் கொண்டு அன்றுடன் நாம் அதுவரை கடைபிடித்த பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபட்டு எப்போதும் போல் இருக்கத் துவங்குவோம்.
ஏன் இந்த மாறுதல் , அன்று படிக்கும் போது நல்லவைகளாகவும், நமக்கெனவே சொல்லப்பட்டதாகவும் தெரிந்த வாக்கியங்கள் எல்லாம் இப்போது என்னவாயிற்று ? எதனால் இந்த மாறுதல்? இதற்கான காரணம் என்ன ? வாக்கியங்களில் எந்த மாறுதலும் இல்லை, மாற்றம் நம்மிடம் வந்ததின் காரணம் என்ன ?
எந்த ஒரு செயலையும், காரியங்களையும் நாம் அதனைக் கேட்டோ, படித்தோ கடைபிடிக்கத் துவங்கினோமானால் அதனை நாம் கடைபிடிக்க என்னதான் முயன்றாலும் இயலாது போகும். காரணம் நமக்கு அது அப்போது தேவையில்லாததாகும். அதுமட்டுமல்ல, இது நமது ஆழ்மனத்தேடல் அல்ல.
சில வேளைகளில் சில நோய்களின் அறிகுறிகளை மருத்துவர்கள் சொல்லி  இதுபோன்ற அறிகுறிகள் ஒரு குறிப்பிட்ட நோயின் அறிகுறி என்று சொன்னால் அந்த அறிகுறிகள் நம்மிடம் நிறைந்துள்ளதாகவே நமக்கு தோன்றும், ஆனால் உண்மையில் நமக்கு நோயே இல்லை, அதுபோல அந்த குறிப்புகள் படிக்கும் போது நமக்கென வந்ததாக நாமே ப்ரேமித்தோம் அவ்வளவே. ஆனால்.....
நாம் வாழ்க்கையில் அடிபட்டு , வாழ்வில் மிக நொந்து , சோர்ந்து போய் நமக்கென ஒரு பிடிப்பும் இல்லை என வரும்போது நாம் அதற்கான விடிவை உயிரைத் தேடுவதைப்போல் தேடுவோம். அப்போது நமது புறக்கண்கள் காணாது அகக்கண்களால் பார்ப்போம் , இதயம் திறந்து வைத்து காத்திருப்போம் , அதுவரை இலகுவாக கிடைத்ததெல்லாம் அப்போது கடினமாக கஷ்டப்பட்டும் கிடைக்காது , சும்மா சும்மா கண்ணில் படும் இப்ப தேடறேன் கிடைக்கலியே என புலம்புவோம், ஆனாலும் கிடைக்காது , மிக சோர்ந்து இனி தேடி பயனில்லை நமக்கு கிடைக்காது என்று சாயும் போது பாலைவன நீராய் கிடைக்கும், அது நமக்கு பானகமாய் இனிக்கும். அப்போது அதனை பின்பற்றத் துவங்கினால் அது நம்மையும் விடாது , அது விட்டாலும் நாம் அதனை விடமாட்டோம்.
லௌகீக வாழ்வில் நமக்கு பிரியமான பல பட்சணங்களை வாங்கி உண்டு மகிழ்கிறோம். அவைகளை நம்மால் அவ்வளவு எளிதில் விட்டுவிட முடிவதில்லை , காரணம் அவைகளின் மேலிருக்கும் தணியாத அவா.
ஆனால் அவைகளை நிறைய, நிறைய உண்டு விட்டால் பிறகு அவற்றை பார்த்தாலே சலித்துவிடும். அப்புறம் நாமே அதனை விரும்பி உண்டாலும் அது குமட்டிக் கொண்டு வெளியேறி விடும். இரண்டுமுறை, மூன்றுமுறை இப்படி ஆகிவிட்டால் பிறகு நாமே அதனை உண்ணாமல் விட்டு விடுவோம்.
நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு பயிற்சி அல்லது மாற்றமாக இருந்தாலும் நாம் அதற்காக துவக்க நினைக்கும் பழக்க மாற்றத்தை, தடுக்கும் நமது வேண்டாத பழக்கங்களை விட்டுவிட வேண்டுமானால், நாம் அதனை தற்காலிக நிறுத்தமாக இல்லாமல், நிரந்தர தீர்வாக நிறுத்தி விடவேண்டும், அப்படியானால் நாம் நிறுத்த நினைக்கும் விஷயத்தில், நாம் நிறைவான மனநிலையில் இருக்கவேண்டும்.
நிறைவான மனநிலையில் இல்லாமல் நீங்கள் துவங்கும் எந்த நல்ல பழக்கங்களையும் கண்டிப்பாக நீங்கள் பாதியிலேயே நிறுத்தி விடும் அபாயம் உண்டு.
காரணம் அந்த விஷயத்தில் நமது மனம் இன்னும் ஆசையை உள்வைத்து இருக்கும். அப்போது யாராவது உனக்கேன் இந்த வேலை என்று சொன்னால் உடனே நமக்குள் நம்மைப் பற்றிய சுயபச்சாதாபம் ஏற்பட்டு நம்மை மாற்றம் கொள்ளச் செய்துவிடும்.
ஏனென்றால் நாம் வலியனாக ஏற்றுக் கொண்ட நிலையில் இருந்து பழைய நிலையை எப்போது அடையலாம் என காத்துக் கொண்டிருக்கும் நமது மனம் உடனடியாக அதிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடும்.  
எனது நண்பர்கள் பலருக்கும் புலால் உண்ணலை நிறுத்தும்படி நான் எவ்வளவோ எடுத்துச் சொன்ன போதும், அதனை அவர்கள் சற்றும் சிந்தித்துக் கூட பார்க்காமல் இருந்தார்கள், இப்போது அவர்களாகவே அதனை நிறுத்தி விட்டார்கள், அவர்கள் இப்போது புலால் உண்ணுவதால் உள்ள கெடுதல்களை என்னிடம் வந்து சொல்கிறார்கள் , அப்படியா! எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இனி அவர்கள் யார் சொன்னாலும் புலாலை உண்ணமாட்டார்கள், காரணம், இது அவர்களே அவர்களுக்காக எடுத்த முடிவு. நான் சொன்ன சமயத்தில் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பார்களேயானால் மீண்டும் அவர்கள் ஒருக்கால் மாறியிருக்கலாம், காரணம் என் சொல்லுக்காக மாறியிருப்பார்கள். ஆனால் இந்த முடிவு என்பது அவர்கள் அதில் உள்ள திருப்தியில் மாற்றம் கண்டுள்ளார்கள் அல்லது மருத்துவர்களின் ஆலோசனையினால் மாற்றம் கண்டுள்ளார்கள், எதுவான போதும் இது அவர்களின் முடிவு , இது கண்டிப்பாக மாற்றம் காண முடியாதது, மாற்றம் காணாது. இது ஏற்றத்தில் ஏற்றம் காணும்.
ஒரு பழக்கடைக்காரர் எந்த நேரமும் ஏதாவது ஒரு பழத்தை தின்றுகொண்டே இருப்பதை யாராவது பார்த்துள்ளீர்களா ?
இந்த பழம் சாப்பிடுங்கள் நன்றாக இருக்கும் என்று நமக்கு ஒரு பழத்தை எடுத்து தந்துவிட்டு நாம் உண்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பார் ! அவருக்கு பழம் பிடிக்காதா என்ன ? பழத்தில் உள்ள நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர் புரிந்துகொண்டு தான் உள்ளார் , ஆனால் ஆரம்ப காலத்தில் அவர் பழங்களை சமயம் கிடைத்த போதெல்லாம் ஆசையாய் உண்டு உண்டு வந்ததனால் இன்று அவற்றின் மீது அவருக்கு ஒரு சலிப்பு வந்து விட்டது .
அதனால்தான் இன்று அவர் பழங்களைப் பார்க்கும்போதே, இந்த பழமா? இது இப்படியிருக்கும், அந்த பழமா? அது அப்படியிருக்கும் என பார்க்கும் போதே அதன் ருசி , அதன் தன்மை , தரம் எல்லாமே அவரது மனதில் வந்துவிடும், அதனால் அதன்மேல் அவருக்கு முன்பு போல பழங்களின் மீது ஆசை வருவதில்லை.
அதுபோலவே நாம் ஒன்றின் மேல் வைக்கும் அசாத்தியமான பற்றுதல் ஒருநாள் இல்லை ஒருநாள் குறைந்து போய் நாம் ஒரு அதன்மீது பற்றற்ற நிலையைக் கண்டிப்பாக காண்போம், அதுவரை யார் சொன்னாலும் , ஏன் அந்த இறைவனே நேரில் வந்து சொன்னாலும் கேட்போம்; ஆனால் செயல் படுத்தமாட்டோம். கேட்பதுபோல் கேட்டு அதனை விட்டுவிடுவோம்.
உள்ளார்ந்த நிலையில் மாற்றம் வராமல் யாரோ சொன்னார்கள் என்பதற்காக மாறும், வெளி பூச்சுக்காக பாவனையாக செய்யப்படும் மாற்றங்கள் என்றுமே நிலைக்காது.
அதனால்தான் உள்ளார்ந்து மாறுவோம்; அதுவே பூரணமான மாற்றத்தையும் அதனால் உயர்வையும், ஒளி பொருந்திய மேனியையும், பொலிவையும், முக அமைப்பையும் தரும், வாழ்வினில் பெரும் மாற்றம் நேரும் , அதனால் நமது மனநிலையும் , அதன் காரணமாக வாழ்வியல் சூழ்நிலையும் ஆனந்த நிலை காணும்.
அது இல்லாவிடில் நாம் படிப்பதும் இடிப்பதும் ஒன்றாகி நம்மை பெரும் பாபத்தில் தள்ளி விடுவதாக அமைந்துவிடும் வாய்ப்புள்ளது . உஷார்.
இது இராமாயணத்தை படித்துக்கொண்டே பெருமாள் கோயிலை இடிப்பதாக ஆகிவிடும், உஷார், உஷார் .                  

Tuesday, April 2, 2013

வழிச்செலவும் , கையிருப்பும்


அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.
வழிச்செலவும் கையிருப்பும்.

நாம் செல்லும் பயணத்தின் தன்மைக்கேற்ப வழிச்செலவு மாறுபடுகிறது. நீண்டகால பயணமாக இருந்தால் நிறைந்த அளவும், குறுகியகால பயணத் திட்டமாக இருக்குமானால் குறைந்த அளவும் வழிச்செலவுகள் அமைகின்றன.

பெரும்பான்மையான பயணங்களில் நமது வழிச்செலவு நமது திட்டத்தை மீறியதாகவும் அமைந்துவிடும் , ஒரு சில பயணங்களில் நமது வழிச்செலவு குறைந்ததாகி மிச்சப்படுவதும் நேர்வதுண்டு, ஆனால் இது அடிக்கடி நேர்வதல்ல.

முன்பெல்லாம் வழிச்செலவு கையிருப்பை மீறும் போது நமது மதிப்புமிக்க பொருட்களை விற்பனை செய்து கையிருப்பை அதிகரிக்கச் செய்து சரிசெய்து கொள்வோம் .

கையிருப்பு என்பது நாம் நமது வாழ்நாளில் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் செலவுகளை குறைத்தும், செலவுகள் செய்யாமலும் மீதப்படுத்தியதாகும் . இதனை எழுதுவது இலகுவாக இருந்தாலும் எத்தனை கடினமானது என்பது கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும் .

ஆனால் தற்போது வழிச்செலவானது நமது கையிருப்பை காணாமல் செய்யும்போது ATM, Credit Card , Debit Card  என்று ஏதேதோ வந்து விட்டதால் கையிருப்பைப் பற்றி கவலைப்படாமல் வழிச்செலவு செய்யலாம் எனும் ஒரு நிலை வந்துவிட்டது.

முன்னிருந்த நிலையில் கையிருப்பை எண்ணி வழிச்செலவு செய்யும் போது கொஞ்சம் யோசனையுடன் வழிச்செலவை செய்வோம் , ஆனால் மேலே சொன்ன சில புது யுக்திகளால் மனிதர்கள் கொஞ்சமும் கவலையின்றி வழிச்செலவும் , வாழ்க்கைச் செலவையும் செய்து மகிழ்கின்றனர்.

இந்த ATM மற்றும் Debit Card ல் உள்ள ஒரு வசதி என்னவென்றால் நம்மிடம் கையிருப்பு இருந்தால்தான் நமது வழிச்செலவை நாம் செய்துகொள்ள இயலும். கையிருப்பு இல்லாமல் போனால் செலவு செய்ய முடியாது .

ஆனால் Credit Card - உள்ளதே அது நம்மை மீண்டும் மீண்டும் அதன் பக்கமாகவே இழுக்கச் செய்து நம்மை ஒரு மீளாத சிக்கலில் சிக்கவைத்து விடும், நமது கையிருப்பு இல்லாத போதும் நமக்கு வழிச்செலவுக்கு வேண்டியவை கிடைப்பதால் நாம் கையிருப்பைப் பற்றி துளியும் கவலையின்றி Credit Card- ல் எடுத்துக் கொள்ளலாம் என்று பலவகையிலும் வேண்டியவை, வேண்டாதவை என பாகுபாடின்றி எல்லாவற்றையும் இந்த Credit Card -டினை பயன்படுத்தி பெற்றுக் கொள்வதால் அது ஒரு நாளில் பூதாகரமாக உருவெடுத்து நிற்கும்போது செய்வதறியாது திகைத்துப் போய் திண்டாடுகிறோம்.
காரணம் நமது கையிருப்பென்பது நமது கடின உழைப்பின் வெற்றியாகும்.

இந்த Credit Card என்பது நமது திறமையை முன் நிறுத்தி அதன் அடிப்படையில் கிடைப்பது மாயயை போன்றது . அதனால்தான் நாம் பெற்ற பணம் அவர்களுக்கு திரும்ப கிடைக்க தாமதம் ஆகும் போது அங்கே நமது திறமை, மதிப்பு, பெயர், பதவி எல்லாம் போய் கடனாளியாக மட்டுமே நாம் பார்க்கப்படுகின்றோம்.

இப்படி நமது கையிருப்பு எவ்வளவாக இருந்த போதிலும் , நமது வழிச்செலவுகளால் அது குறையும் என்பதையும் , மேலேகண்ட Credit Card மூலமாக நமது வழிச்செலவை செய்துகொள்ள முற்பட்டால் அது நமது பிற்கால வாழ்வின் போக்கினை மாற்றும் வல்லமையை கொண்டுள்ளதையும் அறிகிறோம்.

குறையாத கையிருப்பு கொண்டுள்ளவர்கள் யாரும் இல்லை என்பதை மிக தெளிவாக புரிந்து கொண்டோம்.

சரி இந்த பூலோக வாழ்வில் வாழும் போதே நமக்கு கையிருப்பு இல்லாத நிலை உருவாகின்றதே!
கையிருப்பென ஒன்றுமே கொண்டுபோக முடியாத பயண நிலையை அடைவோமே`; அப்போது நம்மால் எதையுமே கொண்டு போக முடியாதே அப்போது நம் கையிருப்பும், மனைவியும், குழந்தைகளும், உற்றாரும் ,பெற்றோரும் , நண்பர்களும் , பதவியும், அந்தஸ்தும், கார்களும், பங்களாக்களும் , நிலங்களும் இங்கேயே விட்டுவிட்டு ஏதுமற்ற அனாதையைப் போல் வழிச்செலவிற்கு ஏதுமின்றி ஒரு பிச்சைக்காரனைப் போல் பயணம் செல்வோமே! அதை நினைத்துப் பார்த்தோமா ? நமக்கு அந்த நிலை வராதா என்ன ?

ஒரு கதை ஒன்று நினைவில் வருகிறது , சொல்கிறேன் .

ஒரு பெரிய பணக்காரன் இருந்தான் , அவன் ஒரு சாதாரணமானவன் . ஆனால் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டான், யாரேனும் உதவி கேட்டால் உன் தலையெழுத்து அனுபவி நான் ஏதும் தரமாட்டேன் என்று அனுப்பிவிடுவான் .அவனிடம் ஒரு கார் இருந்தது , அதற்கு காரோட்டியை வேலைக்கு வைத்திருந்தான் , அவனுக்கு மிக சொற்பமாக ஊதியம் தந்து அவனை வேலைக்கு வைத்திருந்தான். அந்த காரோட்டி மிக குறைவான சம்பளம் பெற்ற போதும் அதில் ஒரு சிறுபகுதியை தானம் செய்து வந்தான்.

இந்நிலையில் ஒருநாள் அந்த பணக்காரனிடம் ஒரு ஏழைக்குழந்தை நோட்டு புத்தகம் வாங்குவதற்காக “ஐயா ஐயா , ஒரு நோட்டு புத்தகம் வாங்கணும் ஏதாவது காசு தாருங்கள் எனக் கேட்டது. பணக்காரன் என்ன நினைத்தானோ தெரியவில்லை கொஞ்சம் காசுகளை அந்த ஏழைக் குழந்தைக்கு கொடுத்தான்.

இதனைப் பார்த்த அந்த காரோட்டி , முதலாளி அந்த குழந்தைக்கு ரூபாய் தந்ததற்கு மிகவும் நன்றி என்று கூறினான் , அதற்கு முதலாளி, டேய் , அதெல்லாம் ஒன்றுமில்லை அந்த புள்ள சோத்துக்கு கேக்கல , நோட்டு புத்தகம்னுச்சி , மனச என்னமோ பண்ணுச்சி அதான் என்றான்.

இதெல்லாம் முடிந்து கொஞ்ச நாளில் ஒரு ஆக்சிடெண்ட்டில் இருவரும் சேர்ந்தே இறந்து போனார்கள் . இருவரையும் அழைத்து சென்ற தேவதூதர்கள் ஓரிடத்தில் நிற்க சொல்லி சென்றார்கள் . இருவரும் அங்கே இருந்த இடத்தை சுற்றிப் பார்வையை கொண்டு சென்றார்கள். அங்கே ஒரு மாளிகையும் , அதன் அருகே ஒரு சிறு கொட்டகையும் இருந்தது. அந்த இடமே நல்ல காற்றோட்டமாகவும், அழகாகவும் இருந்தது.

சற்று நேரத்தில் சென்றிருந்த தேவதூதர்கள் திரும்பி வந்து நீங்கள் தங்கும் இடம் இதுதான், இதற்குரிய சாவிகளை வாங்கிவரத்தான் சென்றோம் என்று சொல்லியபடி இருவரையும் அழைத்துப் போனார்கள். சிலர் பணக்காரனையும், சிலர் காரோட்டியையும் அழைத்து சென்றனர் .

மாளிகை இருக்கும் இடத்தை நோக்கி காரோட்டியையும் , சிறு கொட்டகை இருக்கும் திசையை நோக்கி பணக்காரனையும் அழைத்துச் செல்ல பதறிப் போனான் பணக்காரன் , அவனைவிட அதிகமாக பதறினான் காரோட்டி.

பணக்காரன், அவன் எனது காரோட்டி, நான்தான் செல்வந்தன், எனக்குத்தான் மாளிகைவாசம் , இவன் கூலிக்காரன் ,இவனுக்கு இது போன்ற மாளிகையில் வாழவே தெரியாது ஆகவே, என்னை மாளிகைக்கு அழைத்துச் செல்லுங்கள் என உறுதியான குரலில் உத்திரவிட்டான் தேவ தூதர்களுக்கு.

காரோட்டியும், ஐயா அவர் எனது முதலாளி , அவர் சுகபோகமாக வாழ்ந்தவர் அவர்க்கு மாளிகையை தந்துவிடுங்கள், எனக்கு இந்த கொட்டகையே போதும் மேலும் எனக்கு இது ஒன்றும் புதிதல்ல , எனது வீடு இதனின்றும் மிகச் சிறியது இதுவே எனக்கு போதும் என்று தேவதூதர்களிடம் கெஞ்சினான்.

இல்லையில்லை, இது எங்களுக்கு இடப்பட்ட ஆணை , இதனை மீற முடியாது என உறுதியாக கூறினார்கள்  தேவதூதர்கள்.

நியாயம் இல்லாத இந்த ஆணையை பிறப்பித்தவரை நான் உடனே காண வேண்டும் , ஏன் இந்த தவறான ஆணை என நான் கேட்கவேண்டும். என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என பணக்காரன் கூற, இருவரையும் நியாயவாதியிடம் அழைத்துச் சென்றனர் அந்த தேவதூதர்கள்.  

இப்படி ஒரு அநியாயமான ஆணையை எப்படி உங்களால் பிறப்பிக்க முடிந்தது ?  இதுதான் உங்கள் நீதியா ? என்று நியாயவாதியைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான் அந்த பணக்காரன்.

மிக அமைதியாக நியாயவாதி பதில் தந்தார் , அய்யா, பணக்காரரே, கேளும் .

இங்கே எந்தவிதமான பொருட்களும் கிடையாது , நாங்கள் வாங்கி வரவும் முடியாது , பூமியில் நீங்கள் செய்கின்ற தானங்கள் இங்கே வரும்போதே உங்களுக்கேற்றவாறு வந்து விடுகின்றன. இதோ இந்த காரோட்டி நிறைய தானங்கள் செய்திருக்கிறார் , அவரது தானங்கள் முதலில் இப்படி ஒரு கொட்டகையாக இருந்து, அவர் தானங்கள் செய்ய செய்ய கொஞ்சம் கொஞ்சமாக அதுவாகவே மாற்றம் கண்டு இன்று நீங்கள் காணும் பெரும் மாளிகையாகி நிற்கின்றது , ஆனால் நீங்கள் ஒரு ஏழைக்கு செய்த ஒரே ஒரு தானம் இங்கு ஒரு கொட்டகையாகி இருக்கிறது, நீங்கள் மேலும் ஏதாவது தானம் செய்திருந்தால் இது மாற்றம் கண்டிருக்கும், ஆனால் நீங்கள் எதுவும் செய்யவில்லை, அதனால் இது இன்னும் கொட்டகையாகவே இருக்கின்றது. இதில் எங்கள் பங்கோ, பணியோ ஒன்றுமில்லை. நீங்கள் வரும்போது அதற்குரிய சாவிகளை தந்து உங்கள் இருப்பிடத்தை உங்களுக்கு காட்டுவதுதான் எங்கள் பணி , இனி அவரவர்கள் இருப்பிடம் செல்லுங்கள் என நியாயவாதி மிகக் கண்டிப்புடன் கூற தலையை குனிந்து கொண்டே தேவ தூதர்களின் பின் சென்றான் அந்த பணக்காரன், அவர்களைப் பின் தொடர்ந்தான் காரோட்டி.

இன்னும் ஒரு நிகழ்வு :

எல்லாவித போகங்களையும் , செல்வங்களையும் , பதவியையும் , புகழையும் தனதாக்கிக் கொண்ட மாவீரன் நெப்போலியன், தனது உடல் அடக்கம் செய்யப்பட போகும்போது, தனது இரண்டு கரங்களையும் சவப்பெட்டியின் வெளியே தெரியும்படி கொண்டு செல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான், காரணம் பல நாடுகளையும் , செல்வங்களையும் உரிமையாக்கிக் கொண்ட மாவீரன் நெப்போலியன் தன்னுடன் எதையும் கொண்டு செல்லவில்லை , இங்கிருந்து எதையும் யாரும் கொண்டு செல்ல முடியாது என மக்களுக்கு புரிய வைக்கவேண்டும் என ஆசைப்பட்டான் என மாவீரன் நெப்போலியனின் சரித்திரம் கூறுகிறது .
எல்லாவற்றையும் படிக்கத்தான் செய்கிறோம் ஆனால் எதையும் உள் வாங்குவதில்லை , அனைத்து விஷயங்களுக்கும் நாம் மட்டும் விதிவிலக்கு என்பதாக நினைத்துக் கொள்கிறோம். மற்றவர்களின் வாழ்வு நமக்கான பாடம் என்று நினைவில் கொள்ளவேண்டும்.

வாழ்வின் எல்லா விபரத்தையும் நாம் அனுபவித்துத்தான் ஒப்புக்கொள்வது முடியாததாகும்.

அனுபவச்சொல் மாத்திரையைப்போல் கொஞ்சம் கசக்கும். ஆனால் நாமே அனுபவிப்பது என்பது அறுவை சிகிச்சையைப்போல வலியும் இருக்கும் , சில அவயங்களை இழக்கவும் நேரும்.

வாழும்போது நாம் சேர்த்து வைக்கும் கையிருப்பு என்பது இங்கேயே காணாமல் போய்விடும் – ஆனால் நமது புண்ணியங்களும் , நல்லோரின் ஆசீர்வாதமும் நம்மை என்றும் எங்கும் தொடர்ந்து வந்து காக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இனி உங்கள் கையிருப்பை கூட்டுங்கள் , வழிச்செலவு சுகமாகும். வாழ்த்துக்கள் .

             
Related Posts Plugin for WordPress, Blogger...