என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, December 21, 2013

ஆசையின் திருமுகம்


அன்பு நண்பர்களே , வணக்கம்.
ஆசையின் திருமுகம்

ஆசையின் திருமுகம் என்பது எல்லோருக்கும் அறிமுகமானது , ஆசையின் விளைவினால் உருவாகும் கோரமுகம் என்பது எல்லோரும் உணர்ந்தது.

திருமுகம் என்பதற்கும் கோரமுகம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் அனுபவப்பட்டவர்களுக்கு மிக தெளிவாக விளங்கும்.

ஆசையின் ஆரம்பம் எல்லோருக்கும் சுகமாக இருந்தாலும் , ஆசையின் முடிவு பலருக்கு சுகமாக இருப்பதில்லை.

காரணம், ஆசையின் பின்னே பயணம் போகும்போது, மனிதர்கள் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி சிந்திப்பதில்லை . பின் விளைவுகளை சந்திக்கும் போது “அடாடா இப்படியாகிவிட்டதே இனிமேல் அம்மாதிரி நடக்கக்கூடாது என்று தீர்மானிப்பதும் இல்லை – மாறாக – “விடு விடு அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி மீண்டும் ஒரு கோர விளைவுக்கு தங்களை தயார் செய்து கொள்கின்றார்கள்.

ஆசையின் செயல் எவ்வாறு நிகழ்கின்றது ?
ஏன் நம்மை அது பாதிப்பது நமக்கே தெரிவதில்லை ?

ஆசையின் செயல் எவ்வாறு நிகழ்கின்றது ?
பார்ப்போமா !....

ஆசை என்பது எப்போதும் நம்மிடம் உள்ள எதன் மீதும் நமக்கு துளியும் வருவதில்லை (அதுதான் நம்மிடம் இருக்கின்றதே) எது நம்மிடம் இல்லையோ அதன் மீதே நாம் பெரும்பாலும் ஆசையுறுகிறோம்.
நமது ஆளுகைக்கு உட்பட்ட எதனையும் நாம் ஆசைப்படுவதில்லை . அதற்காக சிரமப்படுவதில்லை ஆனால் நம்மிடம் இல்லாத, மற்றவர்களிடம் உள்ள “எதையும் நாம் ஆசைப்பட கொஞ்சமும் தயங்குவதில்லை

இந்த பழக்கம் நமக்கு இப்போது வந்ததல்ல , மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் குழந்தையாக இருந்த போதே அவர்களுள் உருவானதாகும்.
குழந்தைகள் எப்போதும் தன்னிடமுள்ள விளையாட்டு பொருளைக்காட்டிலும் தனது சகோதரன் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் உள்ள விளையாட்டு பொருளையே கேட்டு அடம்பிடித்து அழும்.

அது மலிவுவிலை பொருளாக இருந்தாலும் அதனையே விடாமல் கேட்கும். அப்பாவோ , அம்மாவோ எவ்வளவு சமாதானம் சொன்னாலும் சமாதானம் ஆகாது. அதனை வாங்கித் தந்தோ அல்லது குழந்தையை அடித்தோ அதன் ஆசையை மறக்கச் அல்லது மாறச் செய்வார்கள்.

இந்த சிறுவயது ஆசை  எல்லா வயதிலும் விடாமல் துரத்தி இளமைக் காலம் , முதுமைக்காலம் என தொடர்ந்து பேராசையாக வளர்ச்சி பெற்று உருமாறி வருகின்றது.

மேலும் எளிதில் கிடைக்கக்கூடிய எதையும் மனிதர்கள் ஆசைப் படுவதில்லை, அது லௌகீகமாக இருந்தாலும் , ஆன்மீக , ஞான மார்க்கமாக இருந்தாலும் மனிதர்கள் ஆசைப்படுவது நடக்கவோ, கிடைக்கவோ, பெறமுடியாததாகவே இருப்பதைத்தான் ஆசைப்படுகிறார்கள்.

மனிதர்கள் ஆசைப்படுவதை தவறென்று சொல்லமுடியாது. ஆனால் கிடைக்க முடியாமல் போனால் ஏற்படும் மனவேதனையும் , மன உளைச்சலும் மனிதர்களின் எல்லாவித முன்னேற்றத்தினையும் தடுக்கும் பின்னாளில் மிகவும் பாதிக்கும்.

அடுத்து . .

ஏன் ஆசை நம்மை பாதிப்பது நமக்கே தெரிவதில்லை ?

ஒரு உதாரணம் பார்ப்போம் .

உலகம் உருண்டையாக இருப்பதாக விஞ்ஞானம் சொல்வதை எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கின்றோம் உண்மையும் அதுதான்.

ஆனால் நாம் நடந்தே உலகை சுற்றி வந்தாலும் எங்குமே வழுக்கிக்கொண்டு கீழே விழ முடியாது அல்லவா ? காரணம் என்ன ? நாம் அந்த உருண்டையின் மேலேயே நிற்கிறோம் – உலகை தாண்டி நின்றால்தான் உலகம் உருண்டையாக தெரியும் – அதனால்தான் நமக்கு உலகம் உருண்டை வடிவமாக எங்குமே தெரியாமல் ஒரு நீண்ட சதுரமாக தெரிகிறது.

அதுபோலவே முழுக்க முழுக்க ஆசையின் வடிவமாக நாமே மாறி விட்டதால் , அதீதமான ஆசையின்பால் நாம் ஈர்க்கப்படுவதை உணரவே முடியவில்லை. மேலும் நமக்கு ஆசையை முறைபடுத்துவதும் இயலாமல் போகின்றது.

நாம் ஆசையோடு இருப்பதையே நாம் உணராமல் இருப்பது அப்படித்தான்.
இதனைப் படிக்க நேரும் நண்பர்கள் தங்களது ஆசையை தங்களது கட்டுக்குள் வைப்பார்கள் எனும் அடியேனது எண்ணமும் ஒருவித ஆசைதானே . 
ஆசை என்பது ஒவ்வொரு உயிருள்ள ஜீவனுக்கும் கண்டிப்பாக வேண்டும்.
ஆசையில்லையேல் எதையும் சாதிக்கமுடியாது , ஆனால் ஆசையை வகைப்படுத்த தெரிந்தவர்கள் ஆசைப்படுவதே சிறந்ததாகும்.

மனம் எண்ணும் எதன்மீதும் ஆசையை வைத்தால் ஆசை நிறைவேறாததுடன் வாழ்வும் வளமற்று போகும்.

மனதில் உண்டாகும் ஆசையை வரையறைக்குள் வைப்பது நம் வாழ்வை வளப்படுத்த நாம் எடுக்கும் முயற்சி.

மனதில் தோன்றும் வரைமுறையற்ற ஆசையின் பின்னே போவது நம் வாழ்வை சீரழிக்க நாமே எடுக்கும் முயற்சி.

மண்ணாசை , பொன்னாசை , பெண்ணாசை மட்டுமல்ல , இறைவா, உன் பதம் தந்தருள்வாய் எனும் ஞானியின் வேண்டுதலும் ஆசையே அல்லவா?

ஆகவே , ஆசை எதுவானாலும் அதனை நெறியுடனும் , முறையுடனும் , யாரையும் , எந்த வகையிலும் , உடலோ, மனமோ பாதிக்காத வகையில் மனிதர்கள் ஆசைகொண்டு நடப்பார்களேயானால் , அவர்களது ஆசை நிறைவேறுவது மட்டுமல்ல , ஆசையின் விளைவு திருமுகமாக நிலைத்து நிற்கும் என்பது உண்மை.

முறையற்ற ஆசையின் விளைவுகள் கோரமுகம் காட்டுவது மட்டுமல்ல , மனித வாழ்வின் இறுதியை நாடச்செய்யும் பேராபத்தை விளைவித்து விடும் என்பதும் மாறாத உண்மையே.

ஆசைப்படுங்கள் , அது உங்கள் கட்டுக்குள் இருக்கட்டும். ஆசையின் கட்டுக்குள் நீங்கள் போகாதீர்கள் .

ஆசைப்படுங்கள் , அது உங்கள் அவசியமானதாக இருக்கட்டும். எதற்கும் இருக்கட்டுமே என்று ஆசைப்படாதீர்கள்.

ஆசைப்படுங்கள் , அந்த ஆசை குறைந்த ஆயுள் உள்ளதாக இருக்கட்டும் , ஆசை உங்கள் ஆயுளை குறைப்பதாக இருக்கவேண்டாம்.

ஆசைப்படுங்கள் , அது பொது நலமாக இருக்கட்டும் , ஆசை உங்கள் சுயநலமாக இருந்தால் கண்டிப்பாக அது கோரமுகத்தினை காட்டிவிடும்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .
அன்புடன் கருணாகரன்.

Monday, December 9, 2013

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6


அன்பு நண்பர்களே, வணக்கம்.
மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6

நாம் அறிந்து கொள்ள முற்படும் யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பயன்படுத்தும் விதம் பற்றிய பாகத்தை காணப் போகின்றோம்.

சென்ற பதிவின் இறுதியில் நாம் கண்டது . . . .
ஒவ்வொரு மூலிகைக்கும் அதனை நாம் எடுத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட நாளும் , நட்சத்திரமும், மந்திரமும் உண்டு .

மூலிகை சாபம் நீக்கவும் , எடுக்கவும் என்ன செய்ய வேண்டும் , எப்போது செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் என்பதனை விரிவாக பார்ப்போம். “ . . .

ஸ்ரீ ஸ்ரீ மகா குருவான கருவூரார் மூலிகைகளையும் `அதற்குரிய மந்த்ரங்களையும் தெளிவாக குறிப்பிடுகின்றார்.

அவையாவன :

வசிய மூலிகையில் ஒன்றான சீதாதேவி செங்கழுநீர் எனும் மூலிகையை பறிக்கும் முன் “ஓம் ஸ்ரீம் லட்சுமி தேவி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான பொன்னூமத்தை எனும் மூலிகையை பறிக்கும் முன் “கிறீணி வருணியாரே மதர்நாமி சீவி வசியம் பவ் வே  “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான கரும் செம்பை எனும் மூலிகையை பறிக்கும் முன் அதற்கு தாமரை அல்லது கற்றாழை நூலில் காப்புக்கட்டி பூஜைகள் செய்து “ஓம் ஓம் சியாமள ரூபி சாம்பவி கிறீங்கி விலிங் கிறிஞ்சாதகி “ என்ற மந்திரம் உருவேற்றி மூன்றாம் நாள் அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான வெண் குன்றிமணிக் கொடி எனும் மூலிகையை பறிக்கும் முன் அமாவாசையன்று காப்புக்கட்டி பூஜை செய்து “வம்மம் வசவிச நிறை மிருக வசீகரி ஓம் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான மஞ்சள் கரிசலாங்கண்ணி எனும் மூலிகையை பறிக்கும் முன் ஒரு வெள்ளிக்கிழமையன்று காப்புக்கட்டி மறு வெள்ளிகிழமை     “ ஓம் கிலியுஞ் சவ்வு மஹி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

******

மோகன மூலிகையில் ஒன்றான வெண் ஊமத்தை எனும் மூலிகையின் இலையை  பறிக்கும் முன் “ மா இதான் மத்தம் தொன்மத்தி ஓம் ஆம் இலீஞ் சத்திசன மோகினி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

மோகன மூலிகையில் ஒன்றான மருளுமத்தை எனும் மூலிகையை  பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

மோகன மூலிகையில் ஒன்றான ஆலம் விழுது எனும் மூலிகையை  பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

******

உச்சாடன மூலிகையில் ஒன்றான நரி மிரட்டி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு வியாழனன்று காப்புக்கட்டி “ சடாய் சடாய் தும்ம சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

உச்சாடன மூலிகையில் ஒன்றான மான் செவி கள்ளி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு மன மகிழ்வுடன் வாசனை மலர்கள் தூவி தூபமிட்டு , தீபம் காட்டி  “ அருணகிரி ஆங்கார சத்தி சத்தி தாய் உச்சாடி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

உச்சாடன மூலிகையில் ஒன்றான ஆரண முரி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ ஓம் கோர கோர ரூபி மாயி சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

*******

ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான கட்டுக் கொடி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ சீலிகிளால் பேத்துலால் பேத்து சிவசிவா“ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜலஸ்தம்பனம்)


ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான பால்பிரண்டி (பாற் குரண்டி)  எனும் மூலிகையை  பறிக்கும் முன் ,  “ நீலகண்டி விசைய விசைய உயர்திற அத்திற் அகலந் தோபா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(சுக்லஸ்தம்பனம்)

ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான நத்தை சூரி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ ஓம் வச்சிர ரூபி சூரி சூரிம, காவீரி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜெயஸ்தம்பனம்)

*******


ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறு முன்னை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ சர்வ ஆகமுஷ்ணி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறியா நங்கை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு கரி நாளில் காப்புகட்டி ,  “ சர்வ பிசாகர்ஷனி சர்வ மோகினி சூழ் கிருஷ்ணி வா வா  “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.


ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான அழுகண்ணி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி ,  “ சர்வ சித்த மோகினி , சர்வா கிருஷ்ணி சாம்பஷ சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

*******

பேதனம் மூலிகையில் ஒன்றான கோழியவரை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி சித்திரை நட்சத்திரத்தன்று  “ அரி அர தேவி , பிரம தேவி சர்வ தேவியே தீர் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான செம்பசலை கீரை எனும் மூலிகையை  திருவாதிரை அன்று காப்பு கட்டி,  “ சீறியுங்  கீறியுங் சீறியும் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான கீழாநெல்லி எனும் மூலிகையை  புதன் கிழமை  அன்று காப்பு கட்டி வியாழன் அன்று தேங்காய் உடைத்து அளமை பெறும் ,       “ பூமி வித்தேஷணி அஞ்சணி மூலி சகல சர்வ பழமை பல பதார்த்தத் தெரிய சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

*******

மாரணம் மூலிகையில் ஒன்றான கார்த்திகை கிழங்கு எனும் மூலிகையை  கார்த்திகை நட்சத்திரத்தன்று மஞ்சள் நூல் காப்பு கட்டி ஆடு பலி கொடுத்து ,      “ சரவணபவா நமா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.


மாரணம் மூலிகையில் ஒன்றான காஞ் சொறி வேர் எனும் மூலிகையை  பௌர்ணமிக்குப் பின் வரும் முதல் திதியில் காப்பு கட்டி மறுநாள் மத்தியானம்  அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து நீரில் ஆட்டி சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (மந்திரமில்லை)

மாரணம் மூலிகையில் ஒன்றான நச்சுப்புல் எனும் மூலிகையை  மன மகிழ்வுடன்  பூஜை செய்து காப்பு கட்டி , “ விருகனீ விஷதரி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

சில காரணங்களுக்காக எல்லாவித  மூலிகைகளுக்கும் மந்திரங்கள் சொல்லப் படவில்லை.
முழு விபரமும் அறியவும் , பயன்படுத்தும் முறை தெரியவும்  தகுந்த குரு வேண்டும்.
பயிற்சியில் முழுமை கண்டால் குருவே உங்களை வந்தடைவார் .


ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய கிழமைகளை சொல்லும் போது ...

வசியம் – ஞாயிறு , மோஹனம் – திங்கள் , பேதனம் – செவ்வாய் , ஸ்தம்பனம் - புதன் , உச்சாடனம் – வியாழன் , ஆக்ருஷ்ணம் – வெள்ளி , மாரணம் – சனி உகந்ததென்கிறார்.

ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய திக்குகளை குறிப்பிடும் போது ...

வசியம் – கிழக்கு , மோகனம் – வடக்கு  , பேதனம்  - வடகிழக்கு , ஸ்தம்பனம் – தென்மேற்கு , உச்சாடனம் – வடமேற்கு , ஆக்ருஷ்னம் – மேற்கு , மாரணம் – தெற்கு என உபதேசிக்கின்றார்.

·         மேலும் எல்லாவித கர்மங்களுக்கும் ஈசான்யம் சிறந்ததெனவும் அருள்பாலிக்கின்றார். 

தீபங்களையும் , மந்த்ரங்களையும் குறிப்பிடும்போது :

கிழமை : ஞாயிறு , வஸ்திரம் : சிவப்பு பட்டு , திசை : கிழக்கு நோக்கி  வில்வ மரப் பலகையில் அமர்ந்து , திரி : தாமரை நூல் ,நெய் : காராம் பசு (கருத்த நிற முள்ள பசு ) நெய் : தீபம் ஏற்றி யநமசிவ என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய வசியம் சித்திக்கும் .

கிழமை : திங்கள்  , வஸ்திரம் : மஞ்சள் பட்டு , திசை : வடக்கு நோக்கி  மான் தோலில் அமர்ந்து , திரி : கன்னி நூல் , எண்ணை : நல்லெண்ணெய் : தீபம் ஏற்றி மசிவயந என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு சொல்லி முறைகள் ஜபம் செய்ய மோகனம் சித்திக்கும் .

கிழமை : செவ்வாய் , வஸ்திரம் : சாதாரண வெள்ளை  , திசை : வடகிழக்கு நோக்கி  பளிங்கு கல்லினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து , திரி : கந்தல் துணி  , எண்ணை : புன்னை எண்ணை : தீபம் ஏற்றி யவசிநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய பேதனம் சித்திக்கும் .

கிழமை : புதன் , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : தென்மேற்கு நோக்கி  ஆல மர பலகையில் அமர்ந்து , திரி : எவ்விதமான திரியும் , எண்ணை : ஆதளைக் கொட்டை  எண்ணை : தீபம் ஏற்றி நமசிவய என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய ஸ்தம்பனம் சித்திக்கும் .

கிழமை : வியாழன் , வஸ்திரம் : பச்சை பட்டு  , திசை : வடமேற்கு நோக்கி பலா மர பலகையில் அமர்ந்து , திரி : இலவம்பஞ்சு , எண்ணை : புங்க எண்ணை : தீபம் ஏற்றி வயநமசி என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய உச்சாடனம் சித்திக்கும் .

கிழமை : வெள்ளி , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : மேற்கு நோக்கி  சண்பக மர பலகையில் அமர்ந்து , திரி : வெள்ளெருக்கு நார் , எண்ணை : ஏரண்டத்தெண்ணை : தீபம் ஏற்றி வசியநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய ஆக்ருஷ்ணம் சித்திக்கும் .

கிழமை : சனி , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : தெற்கு நோக்கி  அத்தி மரத்தால் ஆன பலகையில் அமர்ந்து , திரி : வேலிப்பருத்தி , எண்ணை : வேப்ப எண்ணை : தீபம் ஏற்றி யசிவநம என்ற மந்த்ரத்தை லட்சத்திஎட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய மாரணம் சித்திக்கும்.

சில சூட்சும வார்த்தை விளக்கங்கள் :
கன்னி நூல் காப்பு கட்டி  என்பது தாமரை மொட்டு உள்ள (பூ பூக்கும் முன் )  தண்டினை எடுத்து அதிலிருந்து எடுக்கும் (மகரந்த இழை) நூலினால் குறிப்பிட்ட மூலிகையில் மூன்று முறை சுற்றுவது .

மஞ்சள் நூலால் காப்பு கட்டி என்றால் விரலி மஞ்சளை முனை முறியாமல் எடுத்து அறைத்து , அதில் மேற்படி கன்னி நூலை புரட்டி எடுத்து  பின்னர் உலர்த்தி வைத்துக் கொண்டு பயன்படுத்துவதாகும்.

பொதுவான மூலிகை சாப விமோசன மந்திரம் .

 "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாசய நாசய, சித்தர் சாபம் நாசய நாசய , தேவ முனி , அசுர முனி சாபம் நாசய நாசய, ஸர்வ ஸர்ப்ப சாபம் நாசய நாசய ஹூம்பட் ஸ்வாஹா , என்பதாகும்.

அன்பிற்குரிய நண்பர்களே ,

யோகமும், சித்தும், மந்த்ரமும் , மாந்த்ரீகமும் நம் நலனுக்காக இறைவனால் உருவாக்கப்பட்டதேயன்றி பிறருக்கு தொல்லை கொடுக்க அல்ல என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.

“ இன்றைய விதைப்பு நாளைய அறுவடை என்பதை
எப்போதும் , எந்த நிலையிலும் மறக்கவேண்டாம்

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி முடிவுற்றது .

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன்.

Wednesday, December 4, 2013

பாபங்களும் பரிகாரங்களும்


அன்பு நண்பர்களே , வணக்கம் .

பாபங்களும் பரிகாரங்களும் ( நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்)

இப்போதெல்லாம் எல்லா கோவில்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்திருப்பதை காணமுடிகிறது , பெரும்பாலும் பிரதோஷம் , அதிலும் சனி பிரதோஷம் , திங்கள் கிழமையன்று வரும் சோமவார பிரதோஷம் நாட்களிலும் , தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் , அமாவாசை , பௌர்ணமி , க்ரஹணம் , வாராந்தரி இராகு காலங்கள், குறிப்பாக வெள்ளி , ஞாயிறு இராகு காலங்கள் என்பது போன்ற நாட்களில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களை கோவில்களில் காண முடிகிறது.
பழம்பெரும் கோவில்களானாலும் , புதிதாக கட்டப்பட கோவிலானாலும் மக்கள் வழிபாட்டில் ஒரே மனதோடு வழிபடுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான சமாசாரம் .

இதற்கான மூல காரணம் என்னவென்றால் ,  
தனக்கோ , தனது குடும்பத்திற்கோ , தனக்கு தெரிந்தவர்களின் நலன் கருதியோ மக்கள், சில குறிப்பிட்ட நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபட்டால் தனது விருப்பம் நிச்சயம் நிறைவேறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.

நமது பாபங்களுக்கெல்லாம் நாமேதான் காரணம் ,  அதனால் நமது துன்பங்களுக்கெல்லாம் நாமே காரணமாகின்றோம் .

ஆனால் நான் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்கவில்லையே , எனக்கெப்படி பாபம் வரும் ? என்பது நமது கேள்வியாக இருந்தால் ! . . . .
பாபங்கள் என்பது  . . . . .என்ன ?

தாத்தா , பாட்டி , அப்பா, அம்மா, தம்பி , தங்கை , அண்ணன் , அண்ணி , நண்பன் , உற்றார் , உறவினர் என யாருடைய மனம் நோக , உடல் நோக நாம் நடந்தாலும் , நடந்திருந்தாலும் இவைகள் பாபம் தரும் செயல்களே . ஒருவன் செய்யாத தவறினை செய்தான் என சொல்லும் பொய்கள் கூட பாபங்களாகின்றன. பிச்சை இடுபவனை தடுப்பதுவும் பாபச்செயலே.

நாம் நமது கைகளின் பின் பக்கம் அதாவது புறங்கைகளை கழுவாததும் , கால்களை ஒன்றன்மேல் ஒன்றை தேய்த்து கழுவுவதும் , காது மடல்களை , மூக்கினை, பிறப்பு உறுப்பினை தினசரி சரியாக சுத்தம் செய்யாதது கூட பாபங்களாகும்.  ஆற்று நீரில் , கிணறுகளில் இறங்கி குளிக்கும் போது அதிலேயே சிறுநீர் கழிப்பதுவும் , மலம் கழிப்பதுவும் , வீட்டில் குளியலறையில் நிர்வாணமாக குளிப்பதும் ஒரு பாபச் செயலே!!

இவற்றைபோல இன்னும் ஏராளமாக சிறு சிறு பாபங்கள் பல உண்டு .
இவையெல்லாம் பாபங்களை நம்மோடு சேர்க்கும், அதனால் துன்பங்கள் விளையும். 
இதற்கான பரிகாரம் என்ன ?
இதுபோன்ற சிறு சிறு பாபங்களெல்லாம் தொடர்ந்து கோவில்களுக்கு சம்பந்தப்பட்டவரே சென்று வழிபடுவதாலும் , தாய் தந்தையரை வணங்கி வருவதாலும் , தனது நட்சத்திரத்திற்குரிய மரத்தை கோவில்களில் நட்டு தினசரி நீர் ஊற்றி வருவதாலும் , தனது நட்சத்திரத்திற்குரிய தானியத்தை தனது பிறந்த கிழமையன்று தானம் தந்து வருவதாலும் , குறிப்பிட்ட நாட்களில், தேர்ந்த பண்டிதர்களைக் கொண்டு நதிக்கரை ஓரங்களில் செய்யப்படும் பரிகாரங்களாலும் , இன்னும் பலவகை பரிகாரங்களாலும் தீர்வு காணலாம் .

அடுத்து . . .  

கொலை , களவு , பிற பெண்டிரை இச்சை கொள்ளுதல் , பசுவை கொல்லுதல் , பசுவின் இறைச்சியை உண்ணுதல் , முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல் , நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல் , செய்வினை செய்தல் , செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல் , திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை மணம் புரிதல் , திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல் , தாயிடம் உறவு கொள்ளல் , தங்கை , அக்காள் போன்ற பெண்களோடு உறவு கொள்ளல் , மகளோடு , மருமகளோடு உறவு கொள்ளல் , கணவனை இழந்த பெண்களை ஆசைகாட்டி உறவு கொண்டு மோசம் செய்தல் , விருப்பம் இல்லாத நபர்களை மிரட்டி தனக்காக வேலை செய்யும்படி இம்சித்தல் , நம்பிக்கை துரோகம் செய்தல் , நன்றாக வளர்ந்து வரும் மரம் செடி கொடிகளை வெட்டி எறிதல் , அரச மரம் , வேப்ப மரங்களை வேரோடு வீழ்த்துதல் , கருவை கலைத்தல், கருவைக் கலைக்க துணை போகுதல் , தற்கொலை செய்து கொள்ளல் , தற்கொலைக்கு தூண்டுதல் போன்றவையும் கடுமையான பாபங்களாகும்.
இதற்கான பரிகாரம் :
இவைகளை போக்க தோஷத்தின் தன்மையை அறிந்து திருக்கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொள்வதும், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடுதலும் , ஆயுஷ் ஹோமம் , சங்கு ஹோமம் , ஸ்ரீ சுயம்வர பார்வதி ஹோமம் ,  ஸ்ரீ காலபைரவ ஹோமம் ,  ஸ்ரீ அஷ்ட பைரவ ஹோமம் , ஸ்ரீ சண்டி ஹோமம் , ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் ,          ஸ்ரீ மகா சுதர்சன மாலா மந்த்ர ஹோமம் , ஸ்ரீ துர்கா ஹோமம்,           ஸ்ரீ பிரத்யங்கரா ஹோமம் , ஸ்ரீ சரப ஹோமம் , ஸ்ரீ ருத்ர மகா ஹோமம், ஸ்ரீ ஏகாதச ருத்ர ஹோமம் போன்ற ஹோமங்களாலும் , யந்த்ரப் ப்ரதிஷ்டை செய்து நித்ய பூஜைகள் முறைப்படி செய்தும் இன்னும் உள்ள பலவிதமான  ஹோமங்களில் ஏதேனும் சிலவற்றை செய்தும் , பலவிதமான தானங்களும் செய்தும் சாந்தி பெறலாம் . 

அடுத்து . . .  

பிதுர் தோஷம், பிதுர் சாபம் , மாதுர் தோஷம் , மாதுர் சாபம் , குலதெய்வ தோஷம், குலதெய்வ சாபம் , கன்னிப் பெண் சாபம் , சுமங்கலி சாபம் , விதவையின் சாபம் , தாய்மாமன் சாபம் , புத்திர தோஷம், புத்திர சாபம், நாக தோஷம், நாக சாபம் , நவக்கிரக தோஷம் , நவக்கிரக சாபம் என்பது போன்ற தோஷங்களும், சாபங்களும் இன்னும் நிறைய உள்ளது. இவைகள் தலைமுறை தலைமுறைகளாக தொடர்பவை , மனித  இல்வாழ்வின் முன்னேற்றங்களை எல்லா வகையிலும் தடுப்பவை .
(நவக்கிரக தோஷம்-சாபம் என்பது மிக அரிதானது – பெரும்பாலும் ஜோதிடர்களுக்கு ஏற்படக்கூடியது)
மேலும் ஜோதிடர்களும் – சாதாரண மக்களும் கூட சில பல பரிகாரங்களை பலருக்கும் சொல்லி அவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் உண்டு , மேலும் சிலர் ஜோதிடர்களையே கூட புகழ்வதும் இகழ்வதும் உண்டு , இதுபோன்ற தோஷங்களும் பாபங்களும் டாக்டர்கள், வக்கீல்கள் நடிகர்கள் , நடிகைகள் அரசியல்வாதிகள் என பொதுநலம் நாடுவோர்களுக்கும் தோஷங்களும், சாபங்களும் , கண்ணேறு தோஷம் ஏற்படும் நிலை உள்ளது .
இவையெல்லாம் கூட தோஷங்களை சாபங்களை உருவாக்கும் வல்லமை படைத்தாகும். 
இவைகளை தீர்த்துக்கொள்ள , 
அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம்,  ராமேஸ்வரம் , காசி , காசியில் பஞ்ச கர்னிகா,  கயா , கங்கோத்ரி , யமுனோத்ரி , மந்தாகினி , அலகானந்தா , ருத்ரப் பிரயாகை , பல்குணி , திருஇடைமருதூர் , விருத்தாசலம் , தொழுதூர் , பம்பா போன்ற ஊர்களிலும் , நதிகளிலும் வேத விற்பன்னர்களைக் கொண்டு முறையான தோஷ நிவர்த்தி சாப நிவர்த்தி பரிகாரங்கள் செய்ய நிவாரணமாகும்.

மேலே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிகவும் கொஞ்சம் – இதுவும் பாபம் என்று தெரிந்து கொள்ள உதவும் . . . இவை சாம்பிள்தான் – சிறு சிறு உதாரணம்தான் . இவை போன்ற இன்னும் நிறைய பாபங்கள் உண்டு . அதற்கு பரிகாரங்களும் உண்டு .

சரி . சரி  . . . . .
சின்ன சின்ன பாபங்களுக்கு, தினசரி கோவில்களுக்கு செல்வதும் , கோவில்களில் ஹோமங்களும் , நதிக்கரை ஓரங்களில் பரிகாரமும் செய்தால் போதும் ,

கடுமையான தோஷங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வதும் , வேதமறிந்த ஆச்சாரியர்களைக் கொண்டு பலவிதமான ஹோமங்களாலும் , யந்த்ர ப்ரதிஷ்டையும் , பலவிதமான தானங்களும் செய்து பரிகாரம் காணலாம் ,

பல தலைமுறைகளாக தொடரும் தோஷ , சாபங்களை பெரிய க்ஷேத்திரங்களில் வேத விற்பன்னர்களைக் கொண்டு தோஷ நிவர்த்தி, சாப நிவர்த்தி பரிகாரங்கள் , யந்த்ரப் ப்ரதிஷ்டை போன்றவைகளை செய்து நிவாரணம் காணலாம் .

இவையெல்லாம் உலகெங்கிலுமுள்ள மனிதர்களுக்கு உரியதாகும் . 

ஆனால் தோஷங்களையும் , சாபங்களையும் தீர்க்கும் மகா புண்ய க்ஷேத்திரங்களான ராமேஸ்வரம் , காசி , காசியில் பஞ்ச கர்னிகா,  கயா , கங்கோத்ரி , யமுனோத்ரி , மந்தாகினி , அலகானந்தா , ருத்ரப் பிரயாகை , பல்குணி , திருஇடைமருதூர் , விருத்தாசலம் , தொழுதூர் , பம்பா போன்ற புண்ய க்ஷேத்ரங்களில் வாழ்பவர்களால் , அங்கேயே உண்டாக்கப்படும் பாபங்களை எங்கு தீர்ப்பது , அங்கும் கொலை , கொள்ளை, கற்பழிப்பு போன்ற தகாத செயல்கள் நடைபெறுகின்றதே , கங்கைக்கு அருகில் வாழ்பவர்கள் அங்கேயே ஓடும் கங்கையிலோ அல்லது மற்றவர்கள் அவர்கள் வாழும் ஊரிலோ , அங்கு பாயும் நதிகளிலோ நீராடி தங்களின் பாபங்களை நீக்கிக்கொள்ள முடியுமா ? என்றால் . . . .

முடியாது .

அவர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோவில்களிலோ , நதிகளிலோ சென்று எந்த பரிகாரம் செய்தாலும் அவர்களின் பாபங்கள் போகாது ,
அவர்களுக்கு ஏன் இந்த கடுமையான தண்டனை ?
அப்படியென்றால் அவர்களுக்கு என்னதான் வழி என்கிறீர்களா?
அவர்களுக்கும் பாபம் போக்கிக் கொள்ள வழி ஒன்று உண்டு .

அதாவது மேலே சொல்லப்பட்ட புண்ய க்ஷேத்ரங்களில் வாழும் அற்புதமான வாய்ப்பினை பெற்ற மனிதர்கள் , தங்களின் வாழ்வில் பாபங்களை செய்யும் போது கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள் .
காரணம், அவர்கள் முற்பிறப்பில் தாங்கள் செய்த நற்செயலின் பயனாக  அவர்கள் புண்ய க்ஷேத்ரங்களில் வாழும் நற்பேறு எனும் வாய்ப்பினை இப்பிறப்பில் பெற்றிருக்கின்றார்கள் .
ஆனால் அந்த நன்நிலையை மறந்து , அங்கேயே பாபங்களிழைக்க அவர்கள் துணிந்ததனால் இயற்கையின் (இறைவனின்) கடும் சீற்றத்திற்கு ஆளான அவர்கள், 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக பெருவிழாவில் 10 நாட்கள் பங்கேற்று , ஆரம்பம் முதல் மகாமகம் இறுதிநாள் வரை , தினசரி மகாமக குளத்தில் நீராடி , அர்ச்சனை , அபிஷேகம், அன்னதானம் , வஸ்திரதானம் , மாங்கல்ய தானம் ரத்தின தானம் என பலவிதமான  தானங்கள் செய்து தன்வினையை தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என தர்ம பரிபாலன நூல் விரிவாக சொல்கிறது .

அதாவது அவர்கள் , தங்களது பாபங்களை போக்க நினைத்தாலும் உடனே போக்கிக் கொள்ள முடியாது.

எவ்வளவு பதவி , பணமிருந்தாலும் , எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் அதிக பட்சமாக 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் . ஒரு மகாமக இடைவெளி 12 ஆண்டுகள் அல்லவா ?

இயற்கை தனது தீர்ப்பினை எங்கே வைத்திருக்கிறது பார்த்தீர்களா?

முறையான உணவு வகைகளும் , முறையான வாழ்க்கை முறைமையும் கொண்டு , தெய்வம் உண்டு (அதாவது மனிதத்தை மீறிய சக்தி ஒன்று உண்டு – அதனிடம் ஒரு நாள் நமது செய்யும் செய்கைகளுக்கு எல்லாம் நாம் பதில் சொல்லியே தீர வேண்டும்) எனும் பய உணர்வோடு வாழ்வோமானால் இப்பிறப்பில் நாம் வாழும் வாழ்வும், வரும் பிறப்பில் நாம் வாழும் வாழ்வும் நேர்த்தியாக அமையும் .
அதுமட்டுமல்ல நமது குழந்தைகளும் , பின் வரும் சந்ததிகளும் நோய் நொடியின்றி , நல்ல குணமும் , உயர்ந்த சிந்தனையுமுள்ள மனதோடு எல்லாவகை நலமும் பெற்று நீடுழி வாழ்வார்கள் என்பது சர்வ நிச்சயம் .


வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம். 
அன்புடன் கருணாகரன்.  
Related Posts Plugin for WordPress, Blogger...