அன்பு நண்பர்களே, வணக்கம்.
நமது அன்றாட வாழ்வில் நமக்கு ஏதாவது ஒரு கருவி உதவிக்கு
தேவையாகின்றது.
இன்று அன்னையரின் சமையல் வேலைகளுக்கு கூட பலவித கருவிகள் இருக்கின்றன.
அது எந்த வேலையாக இருந்தாலும் சரி ஒரு கருவி உதவியாக இருந்தால் நமது வேலைகள் சுலபமாக , சீக்கிரமாக
முடிகின்றதை காண்கிறோம் .
கருவியின் துணையால் நாம் செய்யும் பணிகளை நாமே செய்வதாகவும் ,
செய்ததாகவும் கூறுவோம்.
பொதுவாகவே கருவிகள் நமக்கு பலவிதமான உதவிகளை செய்கின்றன.
நமது உடலின் மேற்பகுதியில் உள்ள தசைகளையும் , உள்ளே உள்ள
எலும்புகளையும், உறுதியாகவும், அழகுறச் செய்யவும் சில ஜிம் அமைப்புகள் உள்ளன .
அங்கு நாம் சென்று நமக்கு விருப்பமான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றி நாம் நமது
உடலை கட்டுறுதி கொண்டதாகவும், கட்டழகு
மிக்க தாகவும் மாற்றலாம்.
இந்த பயிற்சி முறைகள் நம் உடலை அழகுபடுத்திக் காட்டும். இதற்கென
பலவிதமான கருவிகள் நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து தருவிக்கப்பட்டு
விற்பனை செய்யப்படுகின்றது. பலரும் அதனை வாங்கியும் , ஜிம்களுக்கு சென்றும்
பயிற்சி செய்வதை காண்கிறோம்.
நமது உடலின் மேற்பகுதிக்கு இவையெல்லாம் பயன்தரும்,
ஆனால் உடலின் உள்பகுதிக்கு உயர்வைத் தருவதற்கு எந்த வகை கருவிகளும்
இல்லை, மேலும் கருவிகளை உள்ளே செலுத்தி நம் உள் கட்டமைப்பை மாற்ற இயலாது.
நாம் நமது உள் கட்டமைப்பை மாற்றிட முடியும் பட்சத்தில் நோய் நொடியற்ற,
ஆரோக்யமான, அமைதியான, பேரானந்தமான, ஜோதிமயமான ஒளி பொருந்திய உடலையும், நீண்ட
ஆயுளுடன் கூடிய வாழ்வையும் பெறலாம்.
அப்படி என்றால் எப்படி நாம் நமது உள் கட்டமைப்புகளை மாற்றுவது ?
அதற்கு உரிய கருவிகள் எது?
அவை எங்கே கிடைக்கும் ?
அதனை பயன்படுத்துவது எப்படி?
அதற்குரிய மாஸ்டர் இருக்கின்றாரா ?
அதற்குரிய நம் தகுதிகள் என்ன ?
கருவிகள் என்ன விலையில் கிடைக்கின்றன ?
என்பது போன்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன.
கண்டிப்பாக இத்தனை வேலையையும் எளிதாக்க ஒரு கருவி இருக்கும். ஆனால்
ஏனோ அந்த கருவியை நாம் அறிந்திருக்கவில்லை அதனால் பயன்படுத்துவதில்லை.
அதனை அடைவதை எப்படி என்று தெரிந்துகொள்வதே சிறந்த காரியமாக இருக்கும்.
எந்த ஒரு பொருள், காரியம், காரணம் செயல், முயற்சி, சாதனை, வெற்றி என
எதுவாக இருந்தாலும் அதனை உண்டாக்க ஒரு உந்துதல், முன்னோக்கி, அடிப்படை இருக்கும்.
அடிப்படையின்றி எந்த செயலும் இல்லை. அதுபோலவே நமது எந்த செயலும் ஒரு
காரண காரிய அடிப்படையிலேயே நிகழ்கின்றதென அறிவோம்.
நமது இந்த ஸ்தூல உடலானது முழுக்க முழுக்க நமது உண்ணும் உணவின்
அடிப்படையிலேயே தன்னை வ்டிவமைத்துக் கொண்டுள்ளது.
சாத்வீகமான உணவுகள், அமைதியான, பொறுமையான, அன்பான, பொறுப்பான, தெளிந்த
சிந்தனையாளனாக, எதிலும் ஆனந்தம் காண்பவனாக, உயர்ந்த நோக்குள்ளவனான மனிதனை உருவாக்குகின்றன.
சாத்வீகமற்ற (இறைச்சி போன்றவைகள்) உணவுகள், நம்மை மந்தனாக,
பிடிவாதக்காரனாக, சண்டைப்ரியனாக, விதண்டாவாதம் புரிபவனாக, யாரையும் மதியாதவனாக,
தான் கருத்தினையே வலியுறுத்தி பேசுபவனாக, பொறுமையற்றவனாக, பயந்த உள்மனம்
கொண்டவனாக, பொறுப்பற்றவனாக, தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக, உண்பதில் ஆர்வம்
உள்ளவனாக, நிறைந்த அபிப்பிராய பேதமுள்ளவனான மனிதனை உருவாக்குகின்றன.
இப்போது நமக்கு தேவையான கருவி எங்குள்ளது ?... என்றால் நம்மிடமே
உள்ளது, அதனை நாம்தான் பராமரிக்காமல் விட்டிருக்கிறோம் என்பது புரிகிறதா?
அதாவது நமது உடலே நமக்கு கிடைத்துள்ள மாபெரும் கொடை என்பதும் , நமது
மூச்சுக் காற்றுதான் நமது இந்த ஸ்தூல உடலை மாஹாத்மியம் கொண்ட மாபெரும் சக்தியாக
மாற்ற உதவும் ஒப்பற்ற கருவி என்பதும் புரிந்ததா?
நாம் வெளியில் இருந்து எந்த ஒரு கருவியையும் உள்ளே செலுத்தி உள்
அமைப்புகளை மாற்றியமைக்க முடியாது.
உடலின் உள்ளே இயல்பாக செல்லுகின்ற பொருட்களின் மூலமாகவேதான் மாற்ற முடியும்.
உள்ளே செல்லும் பொருட்களில் உணவும் , நீரும் , காற்றும் அத்தியாவசியமான (அதி முக்கிய)
பங்கு வகிக்கின்றன.
இயற்கை நம்மிடமே நமது உடலின் அமைப்புகளை மாற்றியமைக்கக் கூடிய
அனைத்தையும் தந்து விட்டது. ஆனால் நாம்தான் அதனை உணராமல் கண்டதையும் உண்டு இந்த
அதியற்புதமான உடலை வீணாக்கி விட்டோம்.
சரி , சாத்வீக உணவு என்றால் என்ன ?
அரிசி சாதம் , பச்சைப்பயிறு (பாசிப்பயறு) குழம்பு, கீரை வகைகள், காய் கனிகள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளல், மிகக்குறைந்த புளி,
உப்பு, காரம், சர்க்கரை உபயோகித்தல்,
கறிமசாலா பொருட்களை தவிர்த்தல், மிதமான உணவு உண்ணல் , வாய்வு உண்டாக்கும்
பொருள்களை உண்ணாமல் தவிர்த்தல்.
மேலும் இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் இருத்தல் , இறைவனை –
இயற்கையை விரும்புதல் , அதனை உயிரினும் மேலாக நம்புதல், நேசித்தல்.
இவைகளை
மனிதன் கடைபிடித்தாலே, மனிதனுக்கு அதியற்புதமான சக்திகளுடன் மேலே சொல்லப்பட்ட
அனைத்து அம்சங்களும் தானாகவே மனிதனை அடைந்துவிடும். வேறு எந்த பயிற்சியும் தேவையே
இல்லை. அன்புடன்