என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Sunday, September 22, 2013

பேசுங்கள் நிறைய பேசுங்கள்


அன்பு நண்பர்களே வணக்கம்.
பேசுங்கள் , நிறைய பேசுங்கள் என்கிற கருத்தினில் ஓர் ஆய்வு .

நிறைய பேசுவதனால் என்ன நடைபெறுகிறது ?.

பேசப்படும் செய்தியைப் பொறுத்துதான் மாற்றங்கள் உண்டாகும்.
பரிமாறப்படும் விஷயங்கள் என்று பார்க்கும் போது நிறைய உதாரணங்களை சொல்லலாம்.

சில விஷயங்களை மட்டும் பார்ப்போம் .

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள பேசுதல் முக்கியமான காரணமாகின்றது .

ஒருவரைப் புரிந்து கொள்ளாமலேயே அவரோடு ஒரு பகைமை உணர்வோடு பேசாமல் இருப்போம் , அவ்வாறான வேளைதனில் பேசுவது ஒருவர் மேல் மற்றவர் புரிதலுடன் , அன்பு கொள்ளும் வாய்ப்பினையும் தருகின்றது.

மேலும் ஒருவர் பேசும்போதுதான் மனம் அமைதியையும் , தெளிவையும் , மற்றவர்களிடமிருந்து பலவிதமான புதிய அறிதலையும் பெற முடிகிறது.

பேசாதவரையில் நமக்குள்ளேயே நாம் மடங்கித்தான் இருப்போம் , நமது எண்ணங்களும் , செயல்களும் , புத்தியும் , ஞானமும் விசாலமாக வேண்டுமானால் பேச வேண்டியது கட்டாயமாகின்றது .
 
குறிப்பாக மனம் வெதும்பிய நிலையில், குழம்பிய மனநிலையில்  உள்ளவர் தன் நிலையை , தனது நண்பர்களோடு பகிர்ந்து பேசும்போது அவரது மனம் அமைதியையும் , சாந்தமும் பெறமுடியும் .
ஒருவரது மனம் வேதனையில் வாடும்போது பேசப்படுகின்ற பேச்சானது அவரது வேதனையை தீர்த்து ஓரளவு சமாதானம் பெற வழி செய்கிறது .

குடும்ப கோர்ட்டுகளில் பிரிவினை கேட்கும் தம்பதிகள் இருவரையும் பேசச் செய்து மனமாற்றம் ஏற்பட செய்கிறார்கள், இதனால் பிரிந்துவிட எண்ணியவர்கள் தங்களை , தங்கள் நிலையை உணர்ந்து மீண்டும் இணைந்து வாழ்வதுண்டு , வாழ்கிறார்கள் .

தன்னை மாய்த்துக் கொள்ள எண்ணியவர்கள் கூட தனது நண்பர்களிடம் தனது சூழ்நிலையை பகிர்ந்து பேசி அவர்களின் ஆறுதலான வார்த்தையினை கேட்டு தனது உயிரை விட்டுவிடும் முடிவினை மாற்றிக் கொண்டதுண்டு.

ஆனால் பேசாமல் தன்னுள்ளேயே மனம் குமுறிக் கொண்டிருந்தால் நமது மனம் நம்மை சுய பச்சாதாபத்தில் தள்ளி “ யாருக்கும் தீங்கெண்ணாத எனக்கேன் துன்பம் தொடர்கதையானது ? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது ? எல்லோருக்கும் நல்லது நினைக்கும் எனக்கா இந்த நிலை ? அப்படி இப்படி என்று மனம் நம்மை குழப்போ குழப்பென்று குழப்பி , நம்மை ஒரு வழியாக்கி விடும் .

சமாதானப் பேச்சானாலும் , அன்பினை பகிர்ந்து கொள்ளும் பேச்சானாலும் அதனை மனம் திறந்து பேசியே அடைய முடியும் .

இருவர் கடுமையாக பேசி சண்டையிடும் போது மூன்றாமவர் குறுக்கிட்டு நிலையைப் பேசி பகிரும் போது அங்கே நிச்சயம் சாந்தமும் சமாதானமும் பிறக்கின்றது.

உண்மையிலேயே மனம் விட்டு பேசும்போது பலவிஷயங்கள் தெளிவாகும் வாய்ப்பு உண்டாகின்றது .

நம்மை வெல்ல வேறு யாரும் தேவையில்லை , நமது மனமே நம்மை வென்று விடுகின்றது .

வாழ்வியலில் துன்பமும் இன்பமும் கலந்தே இருக்கின்றது. 

இன்பத்தை முழு மனதோடு பிரியத்தோடு ஏற்று அனுபவிக்கும் நாம், துன்பத்தினை மனமின்றி ஏற்றுக்கொள்வதால் அது மிகவும் சிரமமான, நீண்டகால வேதனையாக தெரிகின்றது .

உதாரணமாக :

நமது வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு ஒரு வாகனத்தில் செல்வதாக வைத்துக் கொள்வோம் . செல்லும்போது ஒரு மணி நேரமாக இருந்த பயணம் திரும்பி வரும்போது குறைகின்றது , இதன் காரணம், நாம் போகும் போது இந்த பயணம் ஒரு கடமையாகவும் , திரும்பி வரும் போது இதே பயணம் வீடு நோக்கி வரும் ஆவலோடும் இருப்பதுதான்.

மனம் ஒரு செயலை பிரியமாக செய்யும் போது அந்த காரியம் இலகுவானதாகவும், அதே காரியத்தை பிரியமின்றி செய்யும் போது கடினமானதாகவும் உணர்கின்றது.

அடிப்படையில் . . . .

நாம் பெரும்பாலும் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்துகிறார்கள் என்றெண்ணியே மன உளைச்சலுக்கு ஆளாகின்றோம். அதனால் துன்பம் என்பதே நமக்கு மட்டும் வருவதாக எண்ணுகிறோம்.

எவ்வளவு செய்தாலும் நம்மை மதிப்பதில்லை , எவ்வளவு கொடுத்தாலும் நம்மேல் அன்பு காட்டுவதில்லை , ஏனோ தெரியவில்லை யாருக்குமே நம்மை பிடிப்பதில்லை என்றெண்ணும் மனோபாவம் இன்று எங்கும் பரவலாக பெருகிவிட்டது.

நாம் சிரிப்பதோ , துக்கிப்பதோ நமது செயலின் நிகழ்வேயன்றி வேறு ஒருவரால் நம்மீது திணிக்கப்பட்டதல்ல . இதனைத்தான் செய்வினை அதாவது நாம் முன்பு செய்த வினை என்றார்கள்.

நமது ஒவ்வொரு காரியங்களும் நம்மால் தீர்மானிக்கப்பட்டவையே என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் போதும் அடுத்து நடப்பது நன்றாகவே இருக்கும் . ஏனென்றால் தனக்கு தன்னாலேயே தீங்கு வரும் என உணர்ந்த மனிதன் தனக்கே தீங்கெண்ணுவானா ? 
என்ன ?
உண்மை நிலை அதுதானே.
ஆனால் எந்த மனிதனும் அதனை எண்ணுவதே இல்லை.

பலரின் கருத்து என்னவென்றால் . . .

என்னால் யாருக்கும் தொல்லையில்லை , எவருக்கும் நான் கெடுதல் நினைப்பதில்லை , எனது செயல் தீயதோ , நல்லதோ நானறியேன் , எனது கடமையைத்தான் செய்கிறேன் , அதில் நான் மாறுவதில்லை ,

மேலும் , நம்மால் நான்கு பேருக்கு நன்மை உண்டாகுமென்றால் எதுவுமே தீதில்லை என்போர் உலகில் உண்டு ,
ஆனால் இந்த தத்துவ வேதாந்த சித்தாந்தமெல்லாம் நடைமுறை வாழ்வில் சிதறுண்டு போனதைத்தான் வீரமாமுனிவரின் முற்காலம் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது .

“எம்மைக்காக்கும் பொருட்டு நீர் செய்த எந்த பாபங்களும் , தீய கார்யங்களும் எம்மை தீண்டாது, அதற்கு நீர் மட்டுமே பொறுப்பு என்ற மனையாளின் சொல்லும் , பிள்ளைகளின் வாக்கும் அந்த வழிப்பறிக் கொள்ளையனை ஒரு வீரமாமுனிவனாக்கியது .

குடும்பத்திற்காக நான் செய்வது நன்மையோ தீமையோ எதுவானாலும் அதில்  அவர்களுக்கும் பங்குண்டு எனும் வேதாந்த வாதம் பயனற்றது .

யாரையும் காக்கும் பொறுப்பு நமக்கென இருந்தால் அந்த பொறுப்பினை தூய்மையான, கபடற்ற, சத்யமான நெறியில் நின்றுதான் காக்க வேண்டு மென்பதனை மேலே சொல்லப்பட்ட ஸ்ரீ வீரமாமுனிவரின் வரலாறு மனிதர்களுக்கு தெளிவாக போதிக்கின்றது .
அன்று பேசியதால்தான் வீரமாமுனிவர் தெளிவானார் , பேசாமல் இருந்திருப்பாரேயானால் வாழ்வியலின் தெளிவற்றவராக இருந்திருப்பார் . பலவிதமான தீய செயல்களின் நாயகனாக வாழ்ந்திருப்பார் ,
ஆனால் நமக்கு ஒரு வீரமாமுனிவர் கிடைத்திருக்கமாட்டார் .

இது என்ன குழந்தை ? இது என்ன வளர்ந்த மனிதன் ? இது என்ன வயோதிக தோற்றம் ? இது என்ன பிரேதம் என கேள்விகளை கேட்டதினால்தான் இளவரசனான சித்தார்த்தன் ஒரு கௌதம புத்தர் ஆனான்.

இன்றுள்ள மனிதர்களில் எத்துணையோ வீரமாமுனிவர்களும் , புத்தர்களும் சித்தர்களும் பொதிந்து இருக்கலாம் , அவர்களை மற்றவர்கள் அடையாளம் காண வேண்டுமானால் பேச வேண்டும் .
மௌனம கலையாமல் மௌனியாக இருக்கும் வரை முகவரியில்லாத கடிதமாக முடங்க வேண்டிய நிலை ஏற்படும் . வாழ்வு முடிந்தபின் அவருக்கு  இதெல்லாம் தெரியும் என்று பேசுவதால் பயனில்லை அல்லவா ?

இயற்கை மனிதருக்கு பல விஷயங்களை அறியத்தருவதே சக மனிதரிடம் பேசி பகிர்ந்து கொள்ளத்தான் , மனதிற்குள்ளேயே வைத்து புழுங்க அல்ல.

இன்பமோ துன்பமோ பகிர்ந்தால் . . . . நல்லது

பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகின்றது என்றும் ,
பகிர்ந்த துன்பம் பாதியாகின்றதென்றும் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

எந்த ஒரு விஷயத்திற்கும் மனம் திறந்து பேசுவதென்பது நல்ல பலன்களைத் தரும்.

துன்பத்தை பகிர்ந்து பேசி குறைப்போம்
இன்பத்தை பகிர்ந்து பேசி கூட்டுவோம்

சகாக்களோடு மனம் திறந்து பேசுங்கள் , பேசுங்கள் , நிறைய பேசுங்கள் .

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
அன்புடன் கருணாகரன் .
   
     


Thursday, September 12, 2013

சின்னத் தவறுதான் . . .

அன்பு நண்பர்களே , வணக்கம்.
சின்னத் தவறு எனும் ஒரு செயல்பாட்டு குறியீட்டினை பார்ப்போம் .

நாம் செய்யும் செயல் நமக்கோ , பிறருக்கோ பாதிப்பினை தருமேயானால் அதனை தவறு , தப்பு என்று சொல்கிறோம்.

அப்படி நேர்கின்ற பாதிப்பானது குறைவான பாதிப்பினை தருமேயானால் அதனை சிறு தவறு என்றும் , பெரிய அளவினில் பாதிப்பினை ஏற்படுத்து மானால் அதனை பெரிய தவறு என்றும் சொல்லப்படும்.
உதாரணமாக :
நமது செயல் அல்லது பொதுவாக ஒருவரது செயல், அவருக்கோ, மற்றவருக்கோ மனச் சங்கடத்தை தந்து மன உளைச்சலைத் தருமானாலும் , பெரும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பொருட்சேதத்தையும் தருமானால் அது சிறிய தவறு எனக் கொள்ளப்படுகின்றது.
நமது செயல் அல்லது பொதுவாக ஒருவரது செயல், அவருக்கோ , மற்றவருக்கோ பெருமளவு மன உளைச்சலுடன், பெருமளவு பொருள் , தொழில் என எல்லாவகையிலும் சேதம்  ஏற்படுமானால் அதனை பெரும் தவறு என்றும் சொல்கின்றோம்.
முன்னோர்கள், ஒருவரால் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு சிறிதாக இருக்குமானால் அதனை தவறு என்றும் , ஒருவரால் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு பெரிதாக இருக்குமானால் அதனை தப்பு என்றும் வகைப் படுத்தினார்கள்.

அதாவது ஒருவர், மற்றவருக்கு தன்னால் ஏற்படப்போகும் விளைவின் பாதிப்பினை உணராமல் இருந்திருப்பாரேயானால் அது தவறு (தவறென அறியாமல் செய்தது) என்றும்,
ஒருவர் , மற்றவரை தனது செயல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும் என நன்கு அறிந்தே செய்தாரென்றால் அது தப்பு என்றும் சொல்லி வைத்தார்கள்.
மேலும் நமது முன்னோர்கள், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல மன்னிக்கப்பட வேண்டியவர்கள், ஆகவே அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பினை தர வேண்டும் எனவும்,

தப்பு எனத் தெரிந்தே செய்தவர்களுக்கு மன்னிப்பளிக்க கூடாது, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் , அவர்கள் செய்த தப்பை எண்ணி எண்ணி வருந்த வேண்டும் , ஆகவே அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை தர வேண்டும் எனவும் தீர்ப்பினை வகுத்தார்கள்.
இதனால் அன்றைய மனிதர்கள் தவறு செய்து மன்னிக்கபடுவதோ, தப்பினை செய்து தண்டனை பெறுவதையோ அவமானமாக கருதினார்கள்.
பின்னாளில் தனது சந்ததிகளைக் கூட யாரும் தன்னைக் காரணம் காட்டி பழிச்சொல்லை சொல்லி விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்.
உதாரணமாக :
இன்றுவரை புகழ் பெற்ற கட்டபொம்மனைப் புகழும் போதெல்லாம் அவரைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனை இழித்துப் பேசி வருகின்றோம்.
வாழ் நாளில் எட்டப்பன் செய்த ஒரே தப்பு மாமன்னன் கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தது தான் .
ஆனால், குறுநில மன்னனான எட்டப்பனின் நாட்டில் எட்டப்பனின் பெயரில் எட்டு என்று வருவதால் ஒன்றிரண்டு எண்ணும்போது எட்டு என்று சொல்லாமல் மன்னன் அதாவது ராஜா என்று சொல்வார்களாம், பதினெட்டு என்று சொல்லாமல் பத்து ராஜா என்பார்களாம், அவ்வளவு உயர்ந்த மனிதன் .
இயேசு பிரானின் புகழை பேசும் போதெல்லாம் அவரைக் காட்டிக்கொடுத்த சீடன் யூதாஸ் இன்றளவும் கிருத்துவ மக்களால் சபிக்கப்பட்டு கொண்டிருக்கின்றான் . வாழ்நாளில் அவன் செய்த முதலும் கடைசியுமான தப்பு அது ஒன்றுதான்.
நமது முன்னோர்கள் , இதனைபோல தமது குலமோ , குடும்பமோ இழிவாக பேசப்பட்டு விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதை உணர்வு மிகுதியாகக் கொண்டிருந்தார்கள்.   
அன்றைய மனிதர்களின் போக்கிலும் , இன்றைய மனிதர்களின் போக்கிலும் பெருமளவு மாற்றம் காணப்படுகிறது.
தற்கால நிகழ்வுகளில் சிறு தவறுக்கான மன்னிப்பினை பெற்ற மனிதன் , சிறு தவறினை செய்த தன்னுடைய முன்அனுபவத்தின் மூலமாக பெரும் தவறு ஒன்றிற்கு தன்னை தயார் செய்து கொள்கிறான்.
காரணம் தவறுகள் சிறியதாக இருக்கும் போது மன்னித்து விடுவதால்-
தவறு செய்த மனிதனுக்கு, தவறினால் ஏற்படும் விளைவினால், மற்றவர்கள் படும் துயரமோ , துன்பமோ அறியாத காரணத்தினால்,
தவறுகள் செய்தவரை அது மேலும் பல தவறுகள் செய்திட தூண்டுதலாக அமைந்து விடுகின்றது.
இந்த முறையினால் தவறு செய்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போக வழியாகின்றது. இதனால் உலகில் அதிகமாக தவறிழைப்போரின் எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதன்படி ஒருநாள் உலகின் மக்கள் தொகைக்கு சரியாக தவறிழைப்போர் எண்ணிக்கையும் கூடும் .
அதாவது தவறிழைப் போரால் , தன்மேல் திணிக்கப்படும் பாதிப்பினை தாங்கித் தாங்கி நொந்துபோன நல்ல மனிதனும் , பொறுமை தனை இழந்து தானும் தவறுகள் செய்ய துணிந்து விடுவான்.
வசதி இல்லாமல் , வாழ்வின் வழியறியாமல் , வேறுவழியின்றி தவறிழைப் போர்களின் எண்ணிக்கையைவிட , எல்லாவிதமான வசதி வாய்ப்புகளோடு, இராஜ போகத்தோடு , அதிகாரமான பதவியில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளின் பாதிப்புகள்தான் அதிகமாகிப் போனது.
காரணம் , தன்மீது யாரும் பழி சுமத்தவோ , தண்டிக்கவோ முடியாது எனும் எண்ணமே ஒரு மனிதனை மென்மேலும் தவறுகள் செய்ய தூண்டுகிறது.
இந்த நிலை மனிதர்களின் மத்தியில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டுக்கு இடையிலும் காணப்படுகின்றது , உயர்நிலையில் உள்ள நாடுகள் , தாழ்நிலை நாடுகளை மேல் தனது ஆதிக்கத்தினை செலுத்துகின்றன.
இன்றைய சூழலில் உலகில் இதுபோன்ற நிகழ்வு சர்வ சாதாரணமாகிப் போனது
பாதிக்கப்பட்ட மனிதரின் நிலையை , வேறு ஒரு மனிதரால் உணர முடியாது.
அது பாதிப்புக்குள்ளான மனிதரால் மட்டுமே உணரத்தக்கதாகும்.
அதனால்தான் அதை பற்றி மற்றவர் சிந்தித்து அபிப்ராயம் சொல்வதோ , தண்டிக்கவேண்டிய தண்டனை குறித்தோ பேசும்போது அது பாதிப்புக்கு உள்ளான மனிதருக்கு திருப்தியளிப்பதில்லை .
பாதிப்புக்குள்ளான ஒரு மனிதரின் நிலையை , தீர்ப்பு சொல்பவர் தானே ஒருநாள் அடையும் போது அவரது பேச்சும் , தண்டனை குறித்த பார்வையும் நிச்சயமாக அப்போது மாறுபடுகிறது. காரணம் , தனக்கு ஒரு நீதியும் , மற்றவருக்கு ஒரு நீதியுமாக செயல்பாடு உண்டாகி விடுகிறது .
இதுதான் தப்பின் ஆரம்ப நிலை .
இப்படியான தவறான நீதி வழங்கப்படுவதால்தான் தவறுகளின் தொடக்கத்தினை தவிர்க்க முடிவதில்லை , ஒவ்வொருவரும் தனக்கென பாதிப்புகள் வரும்போதெல்லாம் மாற்றப்பட்டுவரும் தவறான நீதியானது இன்று மெகா மாற்றத்துடன் தவறு செய்வதே சரியான செயல் என்றாகி விட்டது.
சின்ன வயதினில் ஆரம்பித்த சின்னச் சின்ன விதிமீறல்கள் இன்று மாற்றம் காண முடியாததாகி அதுவே முடிவும் ஆனது . பள்ளிக்கு செல்வதிலிருந்து துவங்கிய விதிமீறல், போக்குவரத்து , வேலை செய்தல், குடும்பம் என அனைத்து வகையிலும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களை விதிகளை மீறவைத்து ஆட்சி செய்கிறது.   
விதிகளை மீறவே மனித மனம் பெரிதும் விரும்புவதால் தப்பினைச் செய்வது தவிர்க்க முடியாததாகிப் போனது. இப்படியாக .,
இந்த எண்ணம் சிறிது சிறிதாக பெருகி இன்று, சின்னதப்பு , பெரிய தப்பு எல்லாம் ஒரே தப்பாகி அது பெரிய விஷயமில்லை எங்கும் நடப்பதுதான் , பாதிக்கப்பட்ட மனிதன் பொறுத்துத்தான் போகவேண்டும் வேறு வழியில்லை என்று ஒருசாரார் சொல்வதையே சட்டமாக்கி விடும் அபாயத்தை நோக்கி நமது வாழ்க்கைப் பயணம் தடுமாற்றமின்றி ஜோராக செல்வதை காண முடிகிறது.
மனிதர்களின் நெடுநாள் மன வக்கிரம் இன்றைய செயல்பாடாகி உள்ளதைத்தான் இந்த நிலை காட்டுகிறது.
மற்றவர்களின் வாய்ப்பை எதையேனும் தந்தாவது தனதாக்கிக் கொள்ளும் மனோபாவம் விஸ்வரூபம் எடுத்தாடுவதை எல்லோரும் காண்கிறோம் .
ஒளிவு மறைவின்றி பிறர் உரிமையை தனதாக்கும் காட்சிகள் நீக்கமற நிறைந்து எங்கும் காண முடிகின்றது.
யாருக்கும் இதில் வெட்கம் இல்லை , அவமானம் இல்லை, அசிங்கம் இல்லை, கேவலம் இல்லை.
இது ஒருவகையான சாமர்த்தியமாக கருதப்படுகின்றது , இதனை புத்திசாலித்தனமாக எண்ணும் பாவனை நம்முள் வ்ருக்ஷமாக வேரூன்றி வளர்ந்து விட்டது.
“அவன்ல்லாம் புத்தியா பொழைக்கிறான் பார் , நீயும் இருக்கியே என்று நல்லவனையும் கெடவைக்கும் தீய செயலுக்கான முயற்சி எங்கும் ஜோராக நடந்தேறி வருகின்றது. சொந்த வீட்டிலேயே இதற்கு தனிப் பயற்சியும் தருகின்றார்கள் .  
“இந்த வேலையை தேர்ந்தெடுத்தா நல்ல காசு என்று சேவையை விட பணத்தினை குறிவைக்கும் நோக்கிலேயே அரசு வேலையைத் தேடும் படலம் இனிதே துவங்குகிறது.
பணம் சம்பாதிப்பதைவிட நல்லவனாக இருக்க நினைப்பவர்கள், பிழைக்கத் தெரியாதவர்களாகவும், யாரையும் வாழ விடாதவர்களாகவும் , கொஞ்சம் முட்டாளாகவும் மற்றவர்களின் பார்வையினால் முத்திரை குத்தப்படுவதை தவிர்க்க முடியவில்லை.
அடிப்படையில் சின்ன தவறுக்கான மன்னிப்புதான் இதன் மூல காரணம்.

காரணம் , முதல் தவறிலேயே கடுமையான தண்டனையை தந்திருந்தால் இன்றைய மெகா பாதிப்பிலிருந்து உலகம் தப்பித்திருக்கும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனிதர்களின் சுயநலம் மிக்க ஆரம்பகால மன்னிப்புகள்தான் இன்றைய உலகின் மோசமான அழிவு நிலைக்கு காரணமாகி விட்டது.
தவறு, சின்னதோ , பெரிதோ தண்டனை கடுமையாகாத வரையில் மனிதர்களுக்கு பயம் வராது. மனிதர்களுக்கு பயம் வராத வரையில் தவறோ, தப்போ குறையாது , தவறோ, தப்போ குறையாத வரையில் உலகம் பாய்ந்து செல்லும் அழிவின் வேகத்தை தடுக்க யாராலும் முடியாது.
ஆரம்பம் . . . . . சின்னத் தவறுதான் . . . . . . .

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.
அன்புடன் கருணாகரன்                 


Friday, September 6, 2013

வாழ்வென்பது . . .

அன்பு நண்பர்களே, வணக்கம்.
வாழ்வென்பது என்னென்று கொஞ்சம் பார்ப்போம்.

மனித வாழ்வை ஞானிகளும் , ரிஷிகளும் , முனிவர்களும் மாயம் (மாயை) என்றும், சித்தர்கள் மனித வாழ்வை கிடைத்தற்கரிய பொக்கிஷமாகவும் சொன்னார்கள். (அதனால்தான் சித்தர்கள் இறவாநிலை காண விழைந்தார்கள்) 

அதற்கு முக்கியமான வேறு ஒரு காரணமும் இருந்தது அதனை கட்டுரையின் இறுதியில்  பார்ப்போம் .

வாழ்வென்பது என்ன ?

வாழ்வென்பது மனிதர்கள் உயிரோடிருக்கும் காலத்தை குறிக்கும் ஒரு சொல்.
உயிரோடிருக்கும் போது மனிதர்கள் வாழும் நிலையைத்தான் வாழ்வென்று நாம் குறிப்பிடுகின்றோம்.
வாழ்வெனும் ஒரு சொல்லுக்குள் மனிதர்களின் வாழ்நாள் முழுமையும் அடங்கி விடுகின்றது. அதனாலேயே வாழ்வென்பது மிகச்சிறந்ததாக அமைய எல்லோரும் விரும்புகின்றோம்.
வாழ்வென்பது சிறந்ததாக அமைந்திட விரும்புவது உயிர்களின் உரிமை, கடமையும் கூட.
உலகில் காணப்படும் அனைத்து உயிரினங்களிலும் வாழ்வெனும் ஒரு இயலில் பன்முகச் சிறப்பினை காணமுடிகிறது.
பிறப்பிற்கேற்ப ஒவ்வொரு உயிரும் தங்களது வாழ்வினை சிறப்பித்துக் கொள்கின்றன.
ஓரறிவு என்று நம்மால் சொல்லப்படும் மரங்கள் மனிதர்களால் வெட்டப்பட்டு உயிரிழந்தாலும், உயிரிழக்கும் அந்த நொடிவரை நிழலைத் தருவதையோ, கனிகளைத் தருவதையோ நிறுத்துவதில்லை.
மிருகங்கள் நம்மால் கொன்று புசிக்கப்பட்டாலும் , நம்மை மனிதர்கள் கொன்று புசிக்கத்தான் போகின்றார்கள் எனத் தெரிந்தும் , மனிதர்களோடு (அவர்களின் வஞ்சகம் உணர்ந்தும்) நட்புடனேயே பழகி மரிக்கின்றன.
நம்மால் வளர்க்கப்படும் பறவையினங்கள் நமக்காக , நமது உறவினர்களுக்காக தமது அரும் உயிரை ஈந்து நமக்கு விருந்தாகின்றன.
ஒருநாள் வாழ்வினைக் கொண்ட மலர்கள் கூட மனிதர்களின் பூஜைக்கும் , கூந்தலுக்கும் மணம் தந்து தனது பிறப்பினை பயனுள்ளதாக்கிக் கொள்கின்றன .
இப்படி ஏதாவது ஒரு வகையில் பிற உயிரினங்கள் வாழ்வென்பதை, வாழ்ந்து அல்லது மரித்து தன்னால் முடிந்த அளவில் சிறப்புடையதாக்கிக் கொள்கின்றன.

ஆனால் மனிதர்கள் ?????????

இதன் வழியாக இந்த உயிரினங்கள் உலகில் வாழும் சக உயிரான மனிதர்களுக்கு என்ன சொல்கின்றன ?
வாழ்வியலின் மாபெரும் உன்னதமான ஒரு செய்தியை மனிதர்களுக்கு அவைகள் மௌனமாக மரணித்து தெரிவிக்கின்றன !
கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் இந்த உயிரினங்கள் , ஒவ்வொரு மனித உயிரும், மகோன்னத நிலையை அடையும் ஒரு எளிமையான உபாயத்தை , மாபெரும் தத்துவத்தை , உயர்ந்த ஞானத்தை , இறைவனை எளிமையாக அடையும் வித்தையை நமக்கு சொல்லாமல் சொல்வது புரியும் ,
ஆனால் துரதிஷ்டவசமாக அவைகளை நாம் பார்க்கும் பார்வையில் கருணை இல்லை , அதனின் ருசி மிகுந்த பாகங்கள் தெரிகின்றன. காலையில் நாம் பார்த்த அந்த உயிரினம் இப்போது உணவாக நாம் முன்னே உயிரற்று கிடக்கின்றதே ! ஐயகோ . . என்ற கொஞ்சமும் பரிதாப உணர்வின்றி நாவினில் நீர் ஊற்றெடுக்க அதனை சுவைப்பதில் தானே ஆர்வம் காட்டுகின்றோம்.
நமது உறவினரும் நண்பர்களும் நம்மை வாழ்த்தும்படியும் , புகழும்படியும்  செய்த அந்த தியாக உயிர் சடலமானதைக் கண்டு நாமே வருந்துவதில்லை, பின்னர் வேறு யார் கவலை கொண்டு பார்க்கப் போகின்றார்கள்.
வாழ்வென்பது என்னவென்று ஒவ்வொரு உயிர்களும் உணர்ந்துதான் இருக்கின்றன ..... மனிதர்களைத் தவிர .
மரங்கள் தன்னை முழுமையாக வெயிலில் நிறுத்திக் கொண்டு மனிதர்களுக்கு நிழலைத் தந்து மகிழ்கின்றது.
சிறு செடிகளும் கொடிகளும் , பழங்களையும், பூக்களையும் மனிதர்களுக்கு தந்து மகிழ்கின்றது.
அப்பாவி விலங்குகள் முழுமையாக தன்னுயிர் ஈந்து மனிதர்களை வாழச் செய்கின்றது.
பறவை இனங்கள் தனது சந்ததி (முட்டை) யையும் மனிதர்களுக்கென  தந்து மரித்துப் போகின்றது .
மனிதர்களாகிய நாம் யாருக்காக எதனை விட்டுக் கொடுத்தோம், பெற்றெடுத்த தாய்க்கும், தகப்பனுக்கும் , உடன்பிறந்த சகோதர , சகோதரிகளுக்கும், நண்பர்களுக்கும் , செய்த சிறு உதவியைக் கூட வாய்ப்பு கிடைத்தால் சொல்லிக் காட்டி அவர்களை கூனிக் குறுக வைக்கின்றோம்.
ஒரு பேச்சரியாத உயிரினம் கொண்டுள்ள உயரிய பண்பு கூட இல்லாத நமக்கா ஆறறிவு என்று சொல்லிக் கொள்கின்றோம்?
யாரையும் மதிக்கமாட்டோம், யாருக்கும் எந்த பயனும் என்னால் கிடைக்க விடமாட்டேன் , எவ்வளவுதான் கெஞ்சினாலும் பெற்றோரானாலும்  உறவினரானாலும் யாருக்கும் எதுவும் தர மாட்டேன் என்று பிடிவாதிப்பது ஆறறிவாகுமா என்ன ?.

யார் சொல்லி தந்தது மனிதர்களுக்கு இந்த நாகரீகத்தை ?
யார் சொல்லி மாற்றமுடியும் இந்த மனோபாவத்தை ?

இதனால் எந்த பயனும் இல்லை எனத் தெரிந்துமே விடாப்பிடியாக வறட்டு வேதாந்தம் பேசி நாமும் தொலைந்து நமது சந்ததியையும் தொலைக்க ஆயத்தப்பட்டு விட்டோமே? ஏன் இப்படி ?

வாழ்வென்பது நாம் வாழ்வதில் இல்லை என்பதையும் பிறரை வாழவைப்பதிலும் , வாழ விடுவதிலுமே ஆழ்ந்துள்ளது என்பதனை எப்போது புரிந்து கொள்வோம் ?

வாழ்வென்பது உலகியலில் பணம் நிறைந்தவனாக வாழ்வதில் இல்லை , சக மனிதர் மேல் அன்பு மனம் நிறைந்தவனாக வாழ்வதில்தான் என்பதை யார் சொல்லித் தரப் போகின்றார்கள் ?.

வாழ்வென்பது பொருள் கொண்டவனாக வாழ்வதில் இல்லை பிற உயிர் மேல் அருள் கொண்டவனாக வாழ்வது என்பதனை எப்போது உணரப் போகின்றோம்?

வாழ்வென்பது வாழும் காலத்திலேயே மறக்கப்படுவது அல்ல – வாழ்வின் பின்னும் நினைவில் நிற்பது என்பதை என்றைக்கு புரிந்து கொள்ளப் போகின்றோம்?

வாழ்வென்பது வாழ்ந்து மரிப்பதல்ல , மரித்து வாழ்வது என்ற உண்மையைத்தான் சிறிய உயிர்களும் (மரம்,செடி,கொடிகளும்), பெரிய உயிர்களும் (ஆடு,மாடு,கோழிகளும்) நமக்கு இரத்தமாகி நமது நாளங்களில் ஓடி நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

வாழ்வென்பதை வாழ்வாங்கு வாழ வேண்டும் எனும் ஆவலில்தான் சித்தர் பெருமக்கள் இறவாநிலை வேண்டினார்கள் என்பதை மனிதர்கள் உள்ளார்ந்து உணர்ந்தால் இந்த நிலையை அடியோடு மாற்றிக் கொள்ளலாம்.

இந்த பிறப்பில் மனிதர்கள் செய்யும் சுப , அசுப மற்றும்  பாப, புண்ய காரியங்கள் மனிதர்களின் பிறிதொரு பிறப்பிற்கு வழியாகின்றது,

இந்த பிறப்பில் இல்லாவிட்டால் என்ன , அடுத்த பிறப்பு தான் உண்டே அதில் பார்க்கலாம் என்று இன்றைய மனிதர்கள் நினைக்கலாம். (அன்றைய மனிதர்கள் நினைத்ததில்லை)

ஆனால் . . . .  

மறு பிறப்பு உண்டு என்பதினை நன்கு அறிந்த போதிலும் கூட சித்தர் பெருமக்கள் இந்த பிறப்பிலேயே இறவாநிலை ஏன் வேண்டிட வேண்டும் ?
இந்த பிறப்பில் மனிதர்கள் கண்ட , அல்லது காணும், செய்த, அல்லது செய்யும் யாவும் மறுபிறப்பினில் முழுமையாக மறக்க வைக்கப்படும் அல்லது மறைத்து வைக்கப்படும் .

மேலும் மீண்டும் இந்த பிறப்பில் இப்போது உள்ள நிலையை மறு பிறப்பினில் அடைய முடியாமலே கூட போகக் கூடும்.

அப்படி என்றால் இந்த பிறப்பில் அடைந்த உயர்ந்த , உச்சநிலை எல்லாமே இந்த பிறப்போடு போய்விடும் .

வரும் பிறப்பில் நாம் யார் என்பதே நாம் அறியாத நிலையில் , 

நான் சென்ற பிறப்பில் சித்தன் , புத்தன் என்றால் நம்மை எங்கே கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்பதை நாமறிவோம் .

மீண்டும் பிறப்புண்டு ஆனால் அது புதியது , மேகங்களற்ற நிர்மலமான வானம் போல.

முன் பிறப்பின் எந்த ஒரு நினைவும், சிறு துளியும் இல்லாமல்.

அதனால்தான் மீண்டும் பிறக்கும் போது மனிதர்கள் முன் பிறப்பின் நிலையை நினைத்துப் பார்க்கவே முடியாமல் போகலாம் என்பதனை சித்தர் பெருமக்கள் உணர்ந்ததாலேயே தாங்கள் தற்போது இருக்கும் இந்த பிறப்பிலேயே இறவா நிலையினை அடைய கடுமையான தவங்களையும் , யோகங்களையும் , இரசவாதங்களையும் மேற்கொண்டனர்.

ஆனால் நாமோ கிடைத்ததற்கறிய மனித பிறப்பினைக் கொண்டிருந்த போதிலும் அதனை முறையாக பயன்படுத்தாமல் சுய உயிர் வளர்க்கவே பிரயத்தனப்பட்டு வாழ்வென்ற ஒன்றின் உண்மைத்தன்மையை  மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இறுதியாக . . .

வாழ்வென்பது மனிதனாக வாழ்ந்து இறப்பதல்ல , இறந்த பின்னும் சக மனிதர்களின் நினைவில் வாழ்வதாகும்.
மனிதரில் இந்நிலையை கண்டவர்கள் கொஞ்சம்தான் – அந்த கொஞ்சத்தில் நாமும் இணையலாமே .

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம் .

என்றும் அன்புடன் கருணாகரன்   


Related Posts Plugin for WordPress, Blogger...