என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

கதைகள்


அன்பார்ந்த நெஞ்சங்களே!

உங்களுடன் அடியேன் கதை பேசுப் போகிறேன், ஞானம், பக்தி, பஞ்சதந்திரம், பொதுநலம் குறித்த கதைகள். இந்த கதைகளை நீங்கள் பலரும் கேட்டிருந்தாலும் அடியேனின் நோக்கில் சற்று சுவையாக இருக்கும் என அடியேன் எண்ணுகிறேன், கதை சொல்லட்டுமா?     

குருவின் பிறப்பு

ஒரு குரு நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒரு முறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையை காண முடிவு செய்து ஒரு நதிக்கரையில் அமர்ந்து தவமேற்கொண்டார்.
     தவத்தின் பயனாக மறுபிறப்பில் தான் ஒரு பன்றியாக பிறப்பெடுப்பதை அறிந்தார்,  மிக உயர்ந்த நிலையில் உள்ள நாம் முன்வினை காரணமாக இப்படி ஒரு பிறப்பை எடுத்து சில காலம் வாழும் நிலை வந்ததை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தார்.
     தனது சீடர்களில் ப்ரியமானவனை அழைத்து தன் நிலையை சொல்லி அவன் கையில் ஒரு வாளைக் கொடுத்து இப்போதே புறப்படு, இன்னும் ஐந்து வருடங்களில் இந்த ஊரில் நான் பன்றியாக பிறந்திருப்பேன், என்னை கண்டவுடன் அந்த பன்றியுருவத்தின் நெற்றியில் என் உருவம் உனக்கு மட்டும் தெரியும் கண்டவுடன் "என்னை வெட்டிவிடு" என்று மிக உருக்கமாக அவனிடம் கேட்டுக்கொண்டார். அதனை கேட்ட சீடனும் சரி என்று சொல்லி புறப்பட்டு போனான்.
     கால் நடையாகத்தானே போகவேண்டும், சுற்றி அலைந்து குருநாதர் சொன்ன ஊரை வந்து சேர்ந்தான் சீடன். அந்த ஊரில் உள்ள பன்றிகளை ஒவ்வொன்றாக நெற்றியை பார்த்தவாறே அலைந்தான். ஆனால் அந்த பன்றியை காணவில்லை.
     அந்த ஊர்க்காரர்களிடம் இங்கே பன்றிகள் எங்கே அதிகம் இருக்கும் என கேட்டான், அவர்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு ஊரின் எல்லை தாண்டி ஒரு மலக்குவியல் உள்ள இடம் உண்டு,  அங்கே நிறைய இருக்கும் ஆனால் அங்கே போகமுடியாது. துர்நாற்றம் வீசும் என்றார்கள். சரி என்று சொல்லிவிட்டு அந்த இடம் நோக்கி நடந்தான் சீடன். நெருங்கநெருங்கவே இந்த இடம் இருப்பது தெரிந்துவிட்டது சீடனுக்கு. அந்த அளவு துர்நாற்றம். மூக்கை பிடித்துக்கொண்டு குருநாதரை தேடினான். ஒரு இடத்தில் மெகாசைஸ் பன்றி ஒன்று தனது குட்டிகளுடன் ஒரு பெரிய மலக்குழியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தான் அதன் நெற்றியில் குருநாதர் உருவம் தோன்றி மறைந்தது.

உடனே வாளை உருவி குருவே என்று கூவியபடி பாய்ந்தான். சடாரென்று திரும்பிய அந்த பன்றி ஒரு நொடியில் அவன் கையை எட்டிப்பிடித்து சீடா இந்த வாழ்வில் நான் ஆனந்தமாக உள்ளேன் கெடுத்து விடாதே என்று கெஞ்சியது.
விக்கித்து நின்றான் சீடன்

தத்துவம் : எந்த நிலை பிறப்பானாலும் அந்த நிலைக்கு அதன்
செயல்கள் சிறப்பே, உயர்வே.


அதாவது மனிதனாக இருந்தபோது கேவலமாக இருந்த பன்றிப் பிறப்பு பன்றியாக உள்ளபோது சொர்க்கமாக தெரிகிறது.

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.



அடுத்த கதை 




மகாவிஷ்ணுவின் ஒரு கேள்வி,

     

ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான ஒரு அரக்கனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் அந்த அரக்கனை பார்த்து கேட்டார், இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர்?


சற்றும் யோசிக்காமல் அரக்கன் சொன்னான், மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகாப் ப்ரபு.

மகாவிஷ்ணு, என்ன மூன்றுவிதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்றுவிதமான மக்கள்தானா உள்ளார்கள் என்று கேட்டார்.

ப்ரபோ, ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை?
     ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்றுவிதமான மக்கள்தான் உள்ளனர் என்று வினயத்துடன் கூறினான் அரக்கன்.

அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம் என்றார் மகாவிஷ்ணு.

அரக்கன் சொன்னான் ப்ரபோ:- 
ஒரு வகையினர் :  பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.

இரண்டாம் வகையினர் : பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.

மூன்றாம் வகையினர்  : கணவனும் மனைவியும் போல் உள்ளனர்.

அவ்வளவுதான் என்றான்.

மகாவிஷ்ணு விடுவாரா?
     சற்று விளக்கமாக புரியும்படி சொல் என்றார்.

சொல்ல துவங்கினான் அரக்கன்,

முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் என்றால், பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டுவிடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும்  தன வாயில் ஊட்டப்படும் உணவுதான் தெரியும், தன தாய் யார், தகப்பன் யார் போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்துபோன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவுதான், இந்த வகை மனிதர்கள் இதுபோலத்தான் ஏழ்மையுடன் போராட்டம், கூலி வேலை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள், அவர்களுக்கு உன்னைப்பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள், வாழும்வரை.  அவ்வளவுதான்.

இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால்..,

பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால்தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும். அது போல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும், உன் வழி தெரியும், உன்னால்தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும், ஆனாலும் உன்னிடம் வரமுடியாமல் பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னை பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கும்.

மூன்றாவது கணவனும் மனைவியும் என்றால்.,

     முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு அவனைக் கவர்ந்து தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள், முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான், பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு இவனும் பின்னாலேயே செல்கிறான்.

அது போல ஒரு சாரார் இறைவனை கண்டதில்லை, ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு இறைவனை காண முற்படும் வேளையில், நாங்கள் உனக்கு பிடித்த உடை, உணவு, அலங்காரம் என்று எங்களை மாற்றிக் கொள்கிறோம், முதலில் எங்களை வெறுக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகிறாய், எங்களோடு உறவாடுகிறாய், முடிவில் உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய் நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம்

ஆக மூன்றுவிதமான மனிதர்கள்தான் உலகில் உள்ளனர் என்றான்,

மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு அவனை தன்னுள் ஏற்றுக்கொண்டார். 

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி. 

அடுத்த கதை?



கயாசுரன் கதை



முன் காலத்தில் கயாசுரன் என்றொரு அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு தவசீலன், மகாவிஷ்ணுவின் அதிதீவிர பக்தன். அவன் பெருமானாரை கடுமையான தவம் இருந்தான். ஆண்டுகள் பல கடந்தன.

     தவத்தின் பலனாக இறைவனார் அவன் முன் தோன்றி, கயாசுரா என்ன வேண்டும் உனக்கு? ஏனிப்படி கடுமையான தவம் மேற்கொண்டாய்? என்றார்.

 ஸ்வாமீ ! என்வேண்டல் பெரியதாக இருக்கும்போது தவமும் சிறப்பாக அமைய வேண்டுமல்லவா? என்று பணிவுடன் சொல்லி மண்டியிட்டு தொழுதான்.
      என்ன வரம் கேட்கப்போகிறாய்? என்று ஒன்றும் தெரியாதவரைபோல் கேட்டார் இறைவனார். அவருக்கு தெரியாதா? பிறக்கும் ஒவ்வொரு உயிரும் என்ன கேட்கும்? என்ன செய்யும்? என்ன ஆகும்? என்று.
 தாய் குழந்தையிடம் ஒன்றும் ஒன்றும் எவ்வளவு  என்று கேட்டால் தாய்க்கு தெரியாமல் கேட்கிறாள் என்றல்ல பொருள், குழந்தை எந்த அளவு தெரிந்துள்ளது என்பதை அறிய விரும்புகிறாள் என்று பொருள்.
கயாசுரன் சொன்னான், ஸ்வாமீ, பூலோகத்தில் பாபங்கள் பெருகி புண்யங்கள் செய்வது குறைந்து விட்டன. அதனால் மக்கள் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாக நேர்கிறது ஆகவே என்னை வந்து யார் தீண்டினாலும் அவர்கள் செய்த பாபங்கள் உடனே தீர்ந்துவிடவேண்டும், அவர்கள் புண்யஆத்மாவாக மாறிவிட வேண்டும், இந்த வரம் ஒன்றை எனக்கு தாங்கள் தந்தருள வேண்டும் என வேண்டி தலை வணங்கி நின்றான்.
 இறைவனார் அவனை பார்த்து உனக்கு ஏதும் வரம் கேட்கவில்லையா? என்று கேட்டார்.
ஸ்வாமீ, எனக்கு எல்லாம் நீங்கள்தான், எனக்கென்று ஒன்றும் வேண்டாம், மக்கள் நலமாக இருந்தால் உங்களை சிந்திப்பார்கள் அது போதும் எனக்கு என்று கூறி பணிந்து நின்றான்.                         
  அவனுடைய பதிலில் சந்தோஷமடைந்த இறைவனார் அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து மறைந்தார்.
 அன்றிலிருந்து ஊர்ஊராக பறையறிவித்து எல்லோரும் மகாராஜா கயாசுரரை தொட்டு வணங்கி பாபம் போக்கிக் கொள்ள வரவேண்டும் என்று அறிவிக்க செய்தான் கயாசுரன்.
மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வரிசையில் நின்று காலை முதல் மாலை வரை கயாசுரனை தொட்டு பாபம் போக்கிச் சென்றார்கள்.
நாட்கள் கடந்தன, வாரங்கள் கடந்தன, மாதங்கள் கடந்தன, வருடங்கள் பறந்தன.
பாபங்கள் குறைந்து போயின, புண்யமிகுதியால் மரணங்கள் நேர்வது குறைந்து போயிற்று. ஜனப் பெருக்கம் மிகுந்தது.
 பூபாரம் மிகுந்ததால் எல்லோரும் யமனிடம் சென்று ஏன் யாரையும் உயிர் பறிக்காமல் இருக்கிறாய் என்று கேட்டார்கள்.
 யமன் இறைவனாரிடம் வரம் பெற்ற கயாசுரன் எல்லோரையும் புண்யாத்மாவாக மாற்றியதையும், அதனால் இறப்பு விகிதம் குறைந்ததையும் ஆதியோடந்தமாக எடுத்துரைத்தான், நானென்ன செய்யமுடியும் ? என்றான்.
எல்லோரும் இறைவனாரிடம் சென்று முறையிட்டார்கள்.

எல்லோரும் இறைவனாரிடம் சென்று முறையிட்டார்கள்.
தானளித்த வரம் இப்படி ஒரு நிலையை உருவாக்கும் என்று அறியாதவரா இறைவன். அவரின் நாடகம் நமக்கு தெரிந்தால் நாமும் பூமியில் வாழும் இறைவனாகிப் போவோம்.

     அடடா இப்போது என்ன செய்வது என்று ஒன்றும் அறியாதவராக கேட்டார் இறைவனார். எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள் கயாசுரன் அழிந்தால்தான் இந்த நிலை மாறும், ஆகவே தாங்கள் கயாசுரனை வதம் செய்யவேண்டும் என்று முறையிட்டார்கள்.
     சரி என்று ஒப்புக்கொண்ட இறைவன் அனைவரையும் அழைத்துக்கொண்டு கயாசுரனை நோக்கி புறப்பட்டார். எல்லோரும் ஒன்றாக வருவதை அறிந்த கயாசுரன் பேரானந்த கடலில் மூழ்கி சொல்லவொண்ணா உணர்ச்சிப் பெருக்கில் அனைவரையும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி கண்ணீர் பெருக தொழுது, ஐயனே இந்த அடிமைச் சிறுவனால் என்ன     ஆகவேண்டும் என்று வினவி நின்றான். இவனையா வதம் செய்யச் சொன்னோம்? என்று எல்லோரும் மனவேதனையுடன் இறைவனைப் பார்க்க அவர் ஒன்றும் சொல்லாமல் கயாசுரனைப் பார்த்து, கயாசுரா உலக மக்களின் நன்மையின் பொருட்டு ஒரு யாகம் செய்யவேண்டியுள்ளது, அதற்கு ஒரு இடம் வேண்டும் அதை உன்னால்தான் தர முடியும் அதைக்கேட்கும் எண்ணத்தில்தான் உன்னிடம் நாங்கள் வந்தோம் என்றார். ஐயனே கட்டளையிட்டால் போதாதா நீங்கள் என்னை தேடி வரவேண்டுமா என்று மிகுந்த வேதனையுடன் கேட்டான். நமக்கு ஒன்று வேண்டும் என்றால் அது உள்ளவரிடம் கேட்க நாமே செல்வதுதானே முறை என்றார்.
எம்பெருமானே, இது என்ன முறையற்ற பேச்சு, இங்கே எது ஐயனே என்னுடையது, எல்லாம் உன்னுடையதல்லவா? கொஞ்சநாள் எனதாக்கி, கொஞ்சநாள் மற்றோருவருடையதாக்கி, மனிதர்களின் மனதில் மாயையை உருவாக்கி அவர்களை மனப் போராட்டத்திற்கு உள்ளாக்குவது போல் அசுரனான என்னை நினைக்கலாமா நான் உன்னை முழுவதும் அறிந்தவன், காரணம் நீ என்னை முழுவதும் அறிந்தவன் இந்நிலையில் எதற்கு இந்த முறையை பற்றிய பேச்சு, நீ தந்ததை கேட்டால் மறுக்கும் பேச்சுக்கே இடமில்லை, ஆகவே எந்த இடம் என்று சொன்னால் இந்த க்ஷணமே தருகிறேன் அது என் பாக்கியம் மேலும் உலக மக்களின் நன்மைக்கென்றால் எனது உயிரையும் தருவேன் என்று
இறைவனாரை வலம் வந்து வணங்கி நின்றான் கயாசுரன்.

     இடம் பற்றி பிறகு சொல்கிறேன் என்று கூறி எல்லோரும் அங்கிருந்து அகன்றார்கள்.

நானும் பிறகு சொல்கிறேன் என்ன !!!!!
அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி. 


இடம் பற்றி பிறகு சொல்கிறேன் என்று கூறி எல்லோரும் அங்கிருந்து அகன்றார்கள்.
    
பிரம்மதேவன் குறித்தநாளில் , முப்பத்து முக்கோடி தேவர்களும் புடை சூழ இறைவனார் கயாசுரனை நெருங்கி, கயாசுரா, நாளை யாம் யாகம் நடத்த திட்டமிட்டுள்ளோம், ஆகவே நீ தருவதாக சொன்ன இடம் சித்தம் தானே! என்று கேட்க, ஸ்வாமீ எந்த இடம் என்று சொல்லுங்கள் இப்போதே யாகத்துக்கு தயார் செய்து விடுகிறேன் என்றான் கயாசுரன்.
     இறைவனார் அவன் முகத்தைப் பார்த்தவாறே சொன்னார், கயாசுரா உன் மார்பின் மேலேதான் யாககுண்டம் அமைக்க வேண்டும். அதற்கு நீ உன் மார்பு பகுதி மேல் தெரியும் வண்ணம் மல்லாந்து படுக்கவேண்டும் உன்மார்பின் மேல் யாக குண்டம் அமைத்து யாகம் நடைபெறும். எதற்கு நீ சம்மதமா? என்று கேட்டார்.
     ஒரு சிறு மாற்றம் கூட அவன் முகத்தில் ஏற்படவில்லை, மாறாக ஆனந்தம் பீறிட அவன் ஐயனே, நான் தயார் உடனே யாகம் ஆரம்பிக்கலாம், எங்கே நான் படுக்கவேண்டும் என்று கேட்டான், அவனைப் பார்த்து இறைவனார் சொன்னார்,
கயாசுரா யாகம் முடியும் போது நீ மரணித்து விடுவாய், உனக்கு இது வேதனையாக இல்லையா? என்றார்.
இறைவா! உன் காரியமாக நான் மரணிப்பது என்பது நான் செய்த பாக்யமில்லையா? இதற்காக காலதாமதம் செய்தால் நியமனம் மாறி வேறு ஒருவருக்கு இந்த வாய்ப்பை தந்து விட்டால் நான் என்செய்வேன்? அதனால் பேச காலமில்லை உடனே யாகம் தொடங்கட்டும் என்றான்.

சரி என்று யாகத்துக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் உடனே தொடங்கட்டும் என்று உத்திரவிட்டார் இறைவனார். இப்போது இறைவனை நெருங்கிய கயாசுரன், ஸ்வாமீ ஒரு சந்தேகம், இதுவரை இப்படி ஒரு யாகம் நான் கேட்டது கூட இல்லை, அதுஏன் என் மார்பின் மேல் யாககுண்டம் அமைக்க வேண்டும் என்றீர்கள் என் சந்தேகம் தீர்க்கவேண்டும் என்று வேண்டி நின்றான். ஸ்வாமி சொன்னார், கயாசுரா, உலகம் முழுவதும் தேடியதில் மக்கள் நன்மைக்காக ஒரு இடம் உன் இதயம் போல் கிடக்கவில்லை, இது பல யாகங்கள் ஆனாலும் மாறாத நிலையில் இருக்க வேண்டும் மக்கள் பூரணமாகப் பயன்பட வேண்டும் என்று நினைத்ததால் உன் மார்பகத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறி உனக்கு பிரியம் இல்லை என்றால் வேண்டாம் என்றார்.
ஸ்வாமீ, இப்போது என் சந்தேகம் தீர்ந்தது, மனதில் ஒரு நெருடலோடு நான் இதற்கு ஒப்புதல் தந்தால் நான் தந்தும் பயன் இருக்காது அதனால்தான் கேட்டேன் மற்றபடி இப்போது நான் பரிபூரணமாக தயாராகி விட்டேன், இந்த யாககுண்டம் தயார் நீங்கள் என்னை பயன் படுத்துங்கள் என்று கூறி பணிந்தான் கயாசுரன்.

தேவர்கள் சூழ எல்லோரும் ஒரு விழா போல கூடி நிற்க பூமி சுத்தம் செய்யப்பட்டு கயாசுரன் படுக்கவைக்கப்பட்டு அவன் மார்பில் யாக குண்டம் அமைக்கப்பட்டது.

பிரம்மா, சிவன், விஷ்ணு, முப்பெருந்தேவியர் எல்லோரும் அருகில் இருக்க பிரம்மா யாகத்தை துவக்கினார்.

யாகம் துவங்கிய உடன் கயாசுரனின் உடல் மெல்ல அசைந்தது.
உடன் யாகம் நிறுத்தப்பட்டு ஏன் உடல் அசைகின்றது என்றார்கள், தெரியவில்லை, நான் அசைக்கவில்லை என்றான் கயாசுரன். மீண்டும் யாகம் துவங்க மீண்டும் அசைந்தது உடல். உடனே விஷ்ணு தள்ளி நின்று எல்லோரும் கயாசுரனை இறுக்கி அணைத்தபடி உட்காருங்கள் என்றார். எல்லோரும் அப்படியே அமர மீண்டும் யாகம் வளர்க்கப்பட்டது. இப்போதும் மெல்ல உடல் அசைய பிரம்மா, கயாசுரனுக்கு விருப்பம் இல்லையென்றால் விட்டு விடலாம் என்றார்.

     உடன் கயாசுரன் பெருமானே, எல்லோரையும் நெருக்கி அமரச் செய்துவிட்டு தாங்கள் தள்ளி நிற்பது முறையா? எல்லோரும் எனது அர்ப்பணிப்பை தவறாக புரிந்துகொள்கிறார்களே, தாங்கள் தங்கள் ஒரு திருவடியை என் மார்பில் வைத்தால் போதும் என்று வேண்டினான்.

     அவனது கோரிக்கையை ஏற்ற மகாவிஷ்ணு தனது ஒரு திருவடியை அவனது மார்பில் வைக்க சாந்தமானான் கயாசுரன், யாகம் இனிதாக முடிந்தது.
    
     மகாவிஷ்ணு எல்லோருக்கும் சம்பாவனம் வழங்கும் போது இடம் தந்தவன் என்ற முறையில் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அரூப வடிவில் இருந்த கயாசுரன், ஸ்வாமீ, நீங்கள் கேட்டீர்கள், என்னை தந்தேன் அது போதும் எனக்கு என்றான்.

     மகாவிஷ்ணு உனக்கு ஏதும் தரவில்லையென்றால் இந்த யாகத்தினால் யாருக்கும் பயன் இருக்காது ஆகவே ஏதாவது கேள் என்றார், ஸ்வாமீ, ஏன் நீங்கள் திருவடி வைக்கவில்லை காரணம் யாது என வினவினான், இது கேட்பது ஆகாது, ஆனாலும் பத்தி சொல்கிறேன், நான் முதலிலேயே என் பாதம் வைத்திருந்தால் முப்பெருந்தேவியர், மகாசிவன், ப்ரம்மமூர்த்தி, முக்கோடி தேவர்கள் உன்னை அனைத்துப் பிடித்திருப்பார்களா, அவர்களின் அருளும் உன்னை அடையவே யாம் அப்படி செய்தோம் என்றார்.

     கருணையின் வடிவே, உன் கருணையே கருணை, என்று தொழுது நின்றான் கயாசுரன்.

     சரி உனக்கு வேண்டுவன கேள் என்று துரிதப்படுத்தினார் பெருமான்.
    
     ஸ்வாமீ, எனக்கென ஒன்றும் வேண்டாம், எத்தனை பெரிய உலகில் இந்த இடம் யாருக்கு தெரியுமோ தெரியாதோ, இங்கே வரமுடியுமா முடியாதோ, அப்படி வருபவர்கள் கையில் செல்வம் இருக்குமோ இருக்காதோ, என் ஐயனே இங்கு வருபவர்கள் தனது கையில் ஒரு வில்வமோ, ஒரு துளசியோ எடுத்து நீ எனது மார்பில் வைத்த உனது ஒரு திருவடியின் மீது போட்டால் அவர்கள் கேட்டுக்கொள்ளும் ஆன்மாக்களுக்கு மூவேழு தலை முறைக்கும் பாபம் நீக்கி அவர்களை ஸ்ரீ வைகுண்டத்திற்கோ,                        ஸ்ரீகைலாயத்திற்கோ அனுப்பி வைக்கவேண்டும் என்று வேண்டினான்.

     அரூப நிலையிலும் மக்களை நினைக்கும் உன் அன்புக்கு மெச்சினோம், இன்று முதல் இந்த ஸ்தலம் உன் பெயரால் கயா என்றே விளங்கும் என வாழ்த்தியருளினார்.

     இன்றும் அங்கே பெருமானின் ஒரு திருவடி காணலாம்,
அதில் தனது மறைந்த உறவினர்களின் பெயர்களை கூறி பிண்டமிடுவதை காணலாம். நான் கண்டு வந்துள்ளேன்.

ஒரு முறை நாமும் செல்லலாமே,

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.

3 comments:

Unknown said...

ithanal thangal solla virumpuvathu

Unknown said...

Jothida sasthiram enpadu miga sirantha valviyal valigatti agum sirantha jothidan enpathai pamara makkal eppadi therinthu kolla mudiyum agave sirantha jothidan kidaippathu avaravar punniya (5 veedu)palan agum.

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

அன்பிற்குரிய நண்பரவர்களுக்கு, உங்கள் கடிதம் கண்டேன், நமக்கு நன்மை நடக்குமா எனப் பார்க்கவே புண்யபலன் இருக்க வேண்டும் என்ற உங்கள் மனவேதனையை புரிந்துகொண்டேன்,

நீங்கள் உங்கள் ஜாதகத்தை கொடுத்து விட்டு பேசாமல் அமர்ந்திருக்கவேண்டும். அந்த ஜோதிடரே உங்களுக்கு பலன்கள் சொல்லவேண்டும் அப்படி ஒரு ஜோதிடரை தேடுங்கள். கண்டிப்பாக கிடைப்பார்கள்.

உங்களை தெரிந்தவர்களிடம் போகாதீர்கள். நீங்கள் ஏதும் சொல்லாதீர்கள்.

இந்த வலைத்தளம் வாருங்கள், பிறந்ததேதி, நேரம், இடம் சொல்லுங்கள் உங்களை சொல்வார்கள்.

http://janiyaa.freeforums.org

அன்புடன் கருணாகரன்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...