என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Wednesday, December 4, 2013

பாபங்களும் பரிகாரங்களும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பு நண்பர்களே , வணக்கம் .

பாபங்களும் பரிகாரங்களும் ( நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்)

இப்போதெல்லாம் எல்லா கோவில்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்திருப்பதை காணமுடிகிறது , பெரும்பாலும் பிரதோஷம் , அதிலும் சனி பிரதோஷம் , திங்கள் கிழமையன்று வரும் சோமவார பிரதோஷம் நாட்களிலும் , தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் , அமாவாசை , பௌர்ணமி , க்ரஹணம் , வாராந்தரி இராகு காலங்கள், குறிப்பாக வெள்ளி , ஞாயிறு இராகு காலங்கள் என்பது போன்ற நாட்களில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களை கோவில்களில் காண முடிகிறது.
பழம்பெரும் கோவில்களானாலும் , புதிதாக கட்டப்பட கோவிலானாலும் மக்கள் வழிபாட்டில் ஒரே மனதோடு வழிபடுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான சமாசாரம் .

இதற்கான மூல காரணம் என்னவென்றால் ,  
தனக்கோ , தனது குடும்பத்திற்கோ , தனக்கு தெரிந்தவர்களின் நலன் கருதியோ மக்கள், சில குறிப்பிட்ட நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபட்டால் தனது விருப்பம் நிச்சயம் நிறைவேறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.

நமது பாபங்களுக்கெல்லாம் நாமேதான் காரணம் ,  அதனால் நமது துன்பங்களுக்கெல்லாம் நாமே காரணமாகின்றோம் .

ஆனால் நான் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்கவில்லையே , எனக்கெப்படி பாபம் வரும் ? என்பது நமது கேள்வியாக இருந்தால் ! . . . .
பாபங்கள் என்பது  . . . . .என்ன ?

தாத்தா , பாட்டி , அப்பா, அம்மா, தம்பி , தங்கை , அண்ணன் , அண்ணி , நண்பன் , உற்றார் , உறவினர் என யாருடைய மனம் நோக , உடல் நோக நாம் நடந்தாலும் , நடந்திருந்தாலும் இவைகள் பாபம் தரும் செயல்களே . ஒருவன் செய்யாத தவறினை செய்தான் என சொல்லும் பொய்கள் கூட பாபங்களாகின்றன. பிச்சை இடுபவனை தடுப்பதுவும் பாபச்செயலே.

நாம் நமது கைகளின் பின் பக்கம் அதாவது புறங்கைகளை கழுவாததும் , கால்களை ஒன்றன்மேல் ஒன்றை தேய்த்து கழுவுவதும் , காது மடல்களை , மூக்கினை, பிறப்பு உறுப்பினை தினசரி சரியாக சுத்தம் செய்யாதது கூட பாபங்களாகும்.  ஆற்று நீரில் , கிணறுகளில் இறங்கி குளிக்கும் போது அதிலேயே சிறுநீர் கழிப்பதுவும் , மலம் கழிப்பதுவும் , வீட்டில் குளியலறையில் நிர்வாணமாக குளிப்பதும் ஒரு பாபச் செயலே!!

இவற்றைபோல இன்னும் ஏராளமாக சிறு சிறு பாபங்கள் பல உண்டு .
இவையெல்லாம் பாபங்களை நம்மோடு சேர்க்கும், அதனால் துன்பங்கள் விளையும். 
இதற்கான பரிகாரம் என்ன ?
இதுபோன்ற சிறு சிறு பாபங்களெல்லாம் தொடர்ந்து கோவில்களுக்கு சம்பந்தப்பட்டவரே சென்று வழிபடுவதாலும் , தாய் தந்தையரை வணங்கி வருவதாலும் , தனது நட்சத்திரத்திற்குரிய மரத்தை கோவில்களில் நட்டு தினசரி நீர் ஊற்றி வருவதாலும் , தனது நட்சத்திரத்திற்குரிய தானியத்தை தனது பிறந்த கிழமையன்று தானம் தந்து வருவதாலும் , குறிப்பிட்ட நாட்களில், தேர்ந்த பண்டிதர்களைக் கொண்டு நதிக்கரை ஓரங்களில் செய்யப்படும் பரிகாரங்களாலும் , இன்னும் பலவகை பரிகாரங்களாலும் தீர்வு காணலாம் .

அடுத்து . . .  

கொலை , களவு , பிற பெண்டிரை இச்சை கொள்ளுதல் , பசுவை கொல்லுதல் , பசுவின் இறைச்சியை உண்ணுதல் , முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல் , நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல் , செய்வினை செய்தல் , செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல் , திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை மணம் புரிதல் , திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல் , தாயிடம் உறவு கொள்ளல் , தங்கை , அக்காள் போன்ற பெண்களோடு உறவு கொள்ளல் , மகளோடு , மருமகளோடு உறவு கொள்ளல் , கணவனை இழந்த பெண்களை ஆசைகாட்டி உறவு கொண்டு மோசம் செய்தல் , விருப்பம் இல்லாத நபர்களை மிரட்டி தனக்காக வேலை செய்யும்படி இம்சித்தல் , நம்பிக்கை துரோகம் செய்தல் , நன்றாக வளர்ந்து வரும் மரம் செடி கொடிகளை வெட்டி எறிதல் , அரச மரம் , வேப்ப மரங்களை வேரோடு வீழ்த்துதல் , கருவை கலைத்தல், கருவைக் கலைக்க துணை போகுதல் , தற்கொலை செய்து கொள்ளல் , தற்கொலைக்கு தூண்டுதல் போன்றவையும் கடுமையான பாபங்களாகும்.
இதற்கான பரிகாரம் :
இவைகளை போக்க தோஷத்தின் தன்மையை அறிந்து திருக்கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொள்வதும், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடுதலும் , ஆயுஷ் ஹோமம் , சங்கு ஹோமம் , ஸ்ரீ சுயம்வர பார்வதி ஹோமம் ,  ஸ்ரீ காலபைரவ ஹோமம் ,  ஸ்ரீ அஷ்ட பைரவ ஹோமம் , ஸ்ரீ சண்டி ஹோமம் , ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் ,          ஸ்ரீ மகா சுதர்சன மாலா மந்த்ர ஹோமம் , ஸ்ரீ துர்கா ஹோமம்,           ஸ்ரீ பிரத்யங்கரா ஹோமம் , ஸ்ரீ சரப ஹோமம் , ஸ்ரீ ருத்ர மகா ஹோமம், ஸ்ரீ ஏகாதச ருத்ர ஹோமம் போன்ற ஹோமங்களாலும் , யந்த்ரப் ப்ரதிஷ்டை செய்து நித்ய பூஜைகள் முறைப்படி செய்தும் இன்னும் உள்ள பலவிதமான  ஹோமங்களில் ஏதேனும் சிலவற்றை செய்தும் , பலவிதமான தானங்களும் செய்தும் சாந்தி பெறலாம் . 

அடுத்து . . .  

பிதுர் தோஷம், பிதுர் சாபம் , மாதுர் தோஷம் , மாதுர் சாபம் , குலதெய்வ தோஷம், குலதெய்வ சாபம் , கன்னிப் பெண் சாபம் , சுமங்கலி சாபம் , விதவையின் சாபம் , தாய்மாமன் சாபம் , புத்திர தோஷம், புத்திர சாபம், நாக தோஷம், நாக சாபம் , நவக்கிரக தோஷம் , நவக்கிரக சாபம் என்பது போன்ற தோஷங்களும், சாபங்களும் இன்னும் நிறைய உள்ளது. இவைகள் தலைமுறை தலைமுறைகளாக தொடர்பவை , மனித  இல்வாழ்வின் முன்னேற்றங்களை எல்லா வகையிலும் தடுப்பவை .
(நவக்கிரக தோஷம்-சாபம் என்பது மிக அரிதானது – பெரும்பாலும் ஜோதிடர்களுக்கு ஏற்படக்கூடியது)
மேலும் ஜோதிடர்களும் – சாதாரண மக்களும் கூட சில பல பரிகாரங்களை பலருக்கும் சொல்லி அவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் உண்டு , மேலும் சிலர் ஜோதிடர்களையே கூட புகழ்வதும் இகழ்வதும் உண்டு , இதுபோன்ற தோஷங்களும் பாபங்களும் டாக்டர்கள், வக்கீல்கள் நடிகர்கள் , நடிகைகள் அரசியல்வாதிகள் என பொதுநலம் நாடுவோர்களுக்கும் தோஷங்களும், சாபங்களும் , கண்ணேறு தோஷம் ஏற்படும் நிலை உள்ளது .
இவையெல்லாம் கூட தோஷங்களை சாபங்களை உருவாக்கும் வல்லமை படைத்தாகும். 
இவைகளை தீர்த்துக்கொள்ள , 
அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம்,  ராமேஸ்வரம் , காசி , காசியில் பஞ்ச கர்னிகா,  கயா , கங்கோத்ரி , யமுனோத்ரி , மந்தாகினி , அலகானந்தா , ருத்ரப் பிரயாகை , பல்குணி , திருஇடைமருதூர் , விருத்தாசலம் , தொழுதூர் , பம்பா போன்ற ஊர்களிலும் , நதிகளிலும் வேத விற்பன்னர்களைக் கொண்டு முறையான தோஷ நிவர்த்தி சாப நிவர்த்தி பரிகாரங்கள் செய்ய நிவாரணமாகும்.

மேலே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிகவும் கொஞ்சம் – இதுவும் பாபம் என்று தெரிந்து கொள்ள உதவும் . . . இவை சாம்பிள்தான் – சிறு சிறு உதாரணம்தான் . இவை போன்ற இன்னும் நிறைய பாபங்கள் உண்டு . அதற்கு பரிகாரங்களும் உண்டு .

சரி . சரி  . . . . .
சின்ன சின்ன பாபங்களுக்கு, தினசரி கோவில்களுக்கு செல்வதும் , கோவில்களில் ஹோமங்களும் , நதிக்கரை ஓரங்களில் பரிகாரமும் செய்தால் போதும் ,

கடுமையான தோஷங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வதும் , வேதமறிந்த ஆச்சாரியர்களைக் கொண்டு பலவிதமான ஹோமங்களாலும் , யந்த்ர ப்ரதிஷ்டையும் , பலவிதமான தானங்களும் செய்து பரிகாரம் காணலாம் ,

பல தலைமுறைகளாக தொடரும் தோஷ , சாபங்களை பெரிய க்ஷேத்திரங்களில் வேத விற்பன்னர்களைக் கொண்டு தோஷ நிவர்த்தி, சாப நிவர்த்தி பரிகாரங்கள் , யந்த்ரப் ப்ரதிஷ்டை போன்றவைகளை செய்து நிவாரணம் காணலாம் .

இவையெல்லாம் உலகெங்கிலுமுள்ள மனிதர்களுக்கு உரியதாகும் . 

ஆனால் தோஷங்களையும் , சாபங்களையும் தீர்க்கும் மகா புண்ய க்ஷேத்திரங்களான ராமேஸ்வரம் , காசி , காசியில் பஞ்ச கர்னிகா,  கயா , கங்கோத்ரி , யமுனோத்ரி , மந்தாகினி , அலகானந்தா , ருத்ரப் பிரயாகை , பல்குணி , திருஇடைமருதூர் , விருத்தாசலம் , தொழுதூர் , பம்பா போன்ற புண்ய க்ஷேத்ரங்களில் வாழ்பவர்களால் , அங்கேயே உண்டாக்கப்படும் பாபங்களை எங்கு தீர்ப்பது , அங்கும் கொலை , கொள்ளை, கற்பழிப்பு போன்ற தகாத செயல்கள் நடைபெறுகின்றதே , கங்கைக்கு அருகில் வாழ்பவர்கள் அங்கேயே ஓடும் கங்கையிலோ அல்லது மற்றவர்கள் அவர்கள் வாழும் ஊரிலோ , அங்கு பாயும் நதிகளிலோ நீராடி தங்களின் பாபங்களை நீக்கிக்கொள்ள முடியுமா ? என்றால் . . . .

முடியாது .

அவர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோவில்களிலோ , நதிகளிலோ சென்று எந்த பரிகாரம் செய்தாலும் அவர்களின் பாபங்கள் போகாது ,
அவர்களுக்கு ஏன் இந்த கடுமையான தண்டனை ?
அப்படியென்றால் அவர்களுக்கு என்னதான் வழி என்கிறீர்களா?
அவர்களுக்கும் பாபம் போக்கிக் கொள்ள வழி ஒன்று உண்டு .

அதாவது மேலே சொல்லப்பட்ட புண்ய க்ஷேத்ரங்களில் வாழும் அற்புதமான வாய்ப்பினை பெற்ற மனிதர்கள் , தங்களின் வாழ்வில் பாபங்களை செய்யும் போது கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள் .
காரணம், அவர்கள் முற்பிறப்பில் தாங்கள் செய்த நற்செயலின் பயனாக  அவர்கள் புண்ய க்ஷேத்ரங்களில் வாழும் நற்பேறு எனும் வாய்ப்பினை இப்பிறப்பில் பெற்றிருக்கின்றார்கள் .
ஆனால் அந்த நன்நிலையை மறந்து , அங்கேயே பாபங்களிழைக்க அவர்கள் துணிந்ததனால் இயற்கையின் (இறைவனின்) கடும் சீற்றத்திற்கு ஆளான அவர்கள், 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக பெருவிழாவில் 10 நாட்கள் பங்கேற்று , ஆரம்பம் முதல் மகாமகம் இறுதிநாள் வரை , தினசரி மகாமக குளத்தில் நீராடி , அர்ச்சனை , அபிஷேகம், அன்னதானம் , வஸ்திரதானம் , மாங்கல்ய தானம் ரத்தின தானம் என பலவிதமான  தானங்கள் செய்து தன்வினையை தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என தர்ம பரிபாலன நூல் விரிவாக சொல்கிறது .

அதாவது அவர்கள் , தங்களது பாபங்களை போக்க நினைத்தாலும் உடனே போக்கிக் கொள்ள முடியாது.

எவ்வளவு பதவி , பணமிருந்தாலும் , எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் அதிக பட்சமாக 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் . ஒரு மகாமக இடைவெளி 12 ஆண்டுகள் அல்லவா ?

இயற்கை தனது தீர்ப்பினை எங்கே வைத்திருக்கிறது பார்த்தீர்களா?

முறையான உணவு வகைகளும் , முறையான வாழ்க்கை முறைமையும் கொண்டு , தெய்வம் உண்டு (அதாவது மனிதத்தை மீறிய சக்தி ஒன்று உண்டு – அதனிடம் ஒரு நாள் நமது செய்யும் செய்கைகளுக்கு எல்லாம் நாம் பதில் சொல்லியே தீர வேண்டும்) எனும் பய உணர்வோடு வாழ்வோமானால் இப்பிறப்பில் நாம் வாழும் வாழ்வும், வரும் பிறப்பில் நாம் வாழும் வாழ்வும் நேர்த்தியாக அமையும் .
அதுமட்டுமல்ல நமது குழந்தைகளும் , பின் வரும் சந்ததிகளும் நோய் நொடியின்றி , நல்ல குணமும் , உயர்ந்த சிந்தனையுமுள்ள மனதோடு எல்லாவகை நலமும் பெற்று நீடுழி வாழ்வார்கள் என்பது சர்வ நிச்சயம் .


வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம். 
அன்புடன் கருணாகரன்.  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...