ஓம் நமசிவய
அன்பிற்குரியோர்களே,
மகனின் கேள்வி
Prasah JM :
அந்த மூலவித்துவுக்கு தெரியுமல்லவா நான் என்பது யார் என்று..
அப்படி எனில் என் தவறுகளை என்னிடமிருந்தே மறைக்கின்றேனா..
என் தவறுக்களுக்கான காரணங்களை நானே உருவாக்கி நியாயப்படுத்திக்கொள்கின்றேனா..
என் தவறுகளும் தெரிந்தே செய்த தப்புகளுமே மனதில் தோன்றுகின்றது அப்பா..
தெளிவில்லாமல் தவிக்கின்றேன் அப்பா.
பதில் :
மகனே , இதில் குழப்பம் கொள்ள எதுவுமில்லை , மனிதனின் நற்செயலோ , தீயசெயலோ அவனால் ஏற்படுவதில்லை,
இயற்கையின் நீதியில் மனிதமனத்தின் ஆசைகள் எதுவாயினும் அது நிறைவேற்றப்படவேண்டும் .
ஒரு மனிதனோ வேறு ஜீவனோ ஏதேதோ ஆசைகளை உள்ளடக்கி வைத்திருக்கும்.
அவைகள் நிறைவேறாமலே அந்த ஜீவனின் ஆத்மா அதனிடமிருந்து பிரிந்திருக்கும்.
அவ்வாறான ஆத்மாக்களின் மறு பிறப்பில் அவைகளை நிறைவேற்றவேண்டிய கட்டாயத்தில் இயற்கை இருக்கின்றது.
ஆதலால்,
அந்த ஆத்மா தனது தீராத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பூரண வாய்ப்பையும் உருவாக்கித் தருகின்றது.
தனது ஆசையானது இறைவழியைச் சார்ந்ததாக இருந்து அந்த ஆத்மா அந்த வாய்ப்பினை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னை உயர்த்திக்கொண்டாலும்,
அல்லது
தனது ஆசையானது காம க்ரோத மார்க்கமாக இருந்து அதனை கடுமையை கையாண்டு நிறைவேற்றிக் கொண்டாலும் இயற்கை எவ்விதத்திலும் தடுக்காமல் நிறைவேற்றி வைக்கும் .
ஆனால் அதற்குண்டான மன சங்கடங்களையும், வேதனைகளையும், துன்பங்களையும், பிரிவையும் அந்த ஆத்மாவிற்குரிய மனிதன்,
மனைவி, குழந்தைகள், பெற்றோர், உற்றார், நண்பர்கள் மூலமாக கட்டாயம் அனுபவித்தே தீரவேண்டும்.
உதாரணமாக :
நாம் நமக்கு ஆசையாக இருக்கின்றதற்காக சில உணவுவகைகளை அவை நமக்கு ஒவ்வாது என்று தெரிந்தே உண்டுவிடுகின்றோம்.
ஆனால் அந்த செயலை நமது வயிறு எக்காரணம் கொண்டும்- செய்யாதே!! என்று நம்மை தடுப்பதில்லை – நம்மை நம் போக்கிலேயே விட்டு விடுகின்றது.
ஆனால் நாம் உண்டதின் பலனாக நமக்கு வரும் வயிறு சம்பந்தமான அல்லது உடல் சம்பந்தமான வலிகளையும் வேதனைகளையும்
நம்மோடு சேர்ந்து நமது வயிறும் அனுபவிக்கின்றதைப் போல என சொல்லலாம்.
பார்த்தது கண்கள்,
ஆசை கொண்டது மனது,
எடுத்தாண்டது கைகள்,
உண்டது வாய்,
அனைத்தையும் செயலாக்கம் செய்தது மூளை ,
ஆனால் வேதனை அவைகளுக்கில்லை.
வேதனை முழுவதும் உடலுக்கு மட்டும் அல்லவா ?
இதைபோலவே இயற்கை நம்மை நம்போக்கில் விட்டு நம்மோடு சேர்ந்து அதுவும் துன்பப்படுகின்றது.
மாற்றம் காண்பது மனிதனிடமே உள்ளது. சீரிய சிந்தனைத்திறன் கொண்ட மனிதன் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொள்ளமுடியும்.
நாம் நமது மனதினை எக்காரணம் கொண்டும்
காம க்ரோத மதமாச்சர்யங்களில் சிக்கிகொள்ளாமல்
சிந்தையை சிதறவிடாமல்
எதுவரினும் சத்யமான பாதையை
நோக்கியே பயணித்தால்
எல்லாம் நலமாகவே முடியும் .
ஓம் நமசிவய.
No comments:
Post a Comment