அன்பு நண்பர்களே , வணக்கம்.
மீண்டும் ஒரு தலைப்புடன் உங்களை
சந்திக்கின்றேன்.
மாற வேண்டும்
என்பதே தலைப்பு.
பொதுவாக மனித இயல்பு மற்றவரின் குற்றம்
காணல்.
இந்த உலகம் உருப்படாது , இப்படியே போய் ஒருநாள் எல்லாம் அழியப் போகுது
பார் , இவன்-லாம் எங்க உருப்படுவான் , எதுக்கும் லாயக்கில்லாதவன் , வீணாப் போனவன்
, எவ்வளவோ சொன்னேன் கேட்கலியே , கேட்டா உருப்புட்டிருப்பான் , கேக்காட்டி
இப்படித்தான், இன்னும்படுவான் பார் , என்றெல்லாம் சக மனிதர்களை, மனிதர்கள் கோபமாக , வருத்தப்பட்டு, ஆதங்கத்துடன் பேசுவதை
கேட்டிருப்போம்.
இதில் உண்மை நிலை என்ன ? யோசிப்போம்.
மனிதன் இப்படியெல்லாம் பேசுவதால் தன்னை பெரியவனாக காட்டிக்கொள்ள
முயல்வதாகத்தான் தெரிகிறதே தவிர வேறொன்றும் இல்லை. உலகில் உள்ள ஒவ்வொன்றும் அதனதன்
பணியை மிகச் சரியாக, இம்மியும் பிசகாமல், நேர்த்தியாக செய்கின்றன , மிகச் சிறிய
உயிரினமான எறும்பை கவனியுங்கள்.
தான் உண்ணும்படியான வஸ்து (தனது தேவை இல்லாத எது பற்றியும் அக்கறை
காட்டுவதில்லை) ஏதேனும் ஒன்று நிலத்தில் விழுமானால் அடுத்த ஒன்றிரண்டு நிமிடத்தில்
பல எறும்புகள் அந்த இடத்தை முற்றுகையிட்டு அங்குள்ள வஸ்துவை தங்களது மிகச் சிறிய
பற்களால் துண்டித்து சிறுசிறு பகுதிகளாக்கி அதனை தாங்கள் வசிக்கும் இடத்திற்கு
கொண்டுசென்று விடும் , சிறிது நேரத்தில் நிலத்தில் விழுந்த அந்த வஸ்து இருந்த இடமே
தெரியாமல் போகும்.
இதனையே மனிதர்களின் பழக்கத்தை பாருங்கள் , தனக்கு தேவையே இல்லாத
பொருளாயினும் சரி, அல்லது தனக்கு மிகவும் தேவையான பொருளாக இருந்தாலுமே கூட யாராவது
வீட்டிற்கு கொண்டு வந்து தன்னிடம் தந்தால் பரவாயில்லை என எண்ணுகின்றோம் அல்லது
உனக்கும் தேவைதானே, தேவைன்னா நீ கொண்டுவா, நான் கொண்டு போக மாட்டேன் என்று விவாதம்
செய்வோம். ஆனால் பேசும்போது மிகவும் பொதுவான மனிதனாக காட்டிக் கொள்வோம். இது
அனைத்து மனிதர்களின் பொது இயல்பாகும்.
தன்னுடைய சொல்லை, தன்னுடைய அறிவுரையை மற்றவர்கள் கேட்டு நடந்தால்
அவர்களுக்கு மிகவும் நல்லது என எண்ணும் மனிதர்கள் ஏனோ தனது வாழ்வில் ஏன் தோல்வியை
தழுவினோம் என எண்ணிப்பார்க்க விரும்புவதில்லை.
அவர்கள் சொன்னதை இவர் கேட்கவேண்டும் என விரும்புகிறாரே – ஏன் அவரே
அதன்படி நடப்பதில்லை என்றால் மனிதர்களிடம் (அதாவது நம்மிடம்) இரண்டுவிதமான
தீர்மானங்கள் உண்டு ஒன்று மற்றவருக்கானது – மற்றது தனக்கானது. (வேலைக்காரி
எனும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் “ஊருக்கு தாண்டி உபதேசம் ஒனக்கும் எனக்கும் இல்ல”) இது பெரும்பான்மையான மனிதர்களின் வாழ்வியல் கடைபிடிப்பாகும்.
இன்னும் சிலரோ தனது வார்த்தையை தெய்வத்தின் குரலாக சொல்வார்கள் –எல்லாம்
அவன் செயல், நடப்பது எல்லாம் விதியின் செயலல்லவா ? நாம் வெறும் கருவிதானே
என்பார்கள்.
ஆனால் அடுத்தவரின் குரலும் தெய்வத்தின் குரல்தான் – அவரும் விதியின்
படி செயலாற்றும் ஒரு கருவிதான் என எண்ணுவதே இல்லை, காரணம் தன்னை தெய்வத்தின்
பிரதிநிதியாக கருதும் மனிதர், சக மனிதனை மனிதனாக கூட எண்ணுவதில்லை. தான் மட்டுமே
இந்த பிரபஞ்சத்தை மாற்றியமைக்க வந்த அவதாரமாக கருதுகின்றார் . இதனை அறியாமையா ,
மமதையா எப்படி சொல்வது ?
இப்படியே ஒவ்வொருவரும் மற்றவரை மாற்றியமைக்க முயல்கிறோம் , அவர்
மாறவேண்டும் , இவர் மாறவேண்டும் என்றும், இவர்கள் எல்லாம் தன்னை மாற்றிக்
கொள்ளாதவரை எந்த நற்பயனும் இல்லை, என்றெல்லாம் வருத்தப்படுகிறோம், கோபமடைகிறோம்,
ஆதங்கத்தின் எல்லைக்கே செல்கிறோம் .
இதற்கு தீர்வுதான் என்ன ?
இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும், மாற்றம் வேண்டும் என
உண்மையில் நாம் விரும்பினால் மாற்றம் நம்மிடம்தான் வேண்டும், நாம் நம்மை மாற்றிக்
கொள்ளாதவரை , வெளியில் மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பேயில்லை என்பதை உணரவேண்டும்.
மாற்றம் என்பது உடனே நிகழ்வதில்லை , சிறிது சிறிதாகத்தான் மாற்றம் காணும். முதலில்
நாம் மாறவேண்டும் , நம்மைப் பார்த்து நமது நண்பர் மாறுவார், அவரைப் பார்த்து அவரது
நண்பர் என ஒவ்வொருவராக மாறுவர். ஒரு சில அல்லது பல வருடங்களில் எல்லோரும்
மாறியிருப்பார்கள் , இதற்கான முதல் துவக்கத்தை நாம்தான் தரவேண்டும், ஆனால்
துரதிர்ஷ்டவசமாக நாம் யாரும் மாற விரும்புவதில்லை , மற்றவரையே மாற்ற
விரும்புகிறோம்.
மாற்றத்தை விரும்பினால் நாம் மாறுவோம் , அதனை மற்றவர்கள் பின்பற்ற
செய்வோம்.மாற்றம் நம்முள் நிகழாதவரை வெளியில் மாற்றம் இல்லை , ஆக மாறவேண்டியது
நாமே.
No comments:
Post a Comment