அன்புள்ளங்களே , வணக்கம்.
இந்தப்பகுதியில் எனது சிற்றறிவுக்கு எட்டிய சில
தகவல்களை உங்களோடு பகிர்ந்து வருகின்றேன் . இவை முழுக்க முழுக்க குறைமதி கொண்ட எனது
சிந்தனைச் சிதறல்களே ஆகும். இவைகள்
மற்றவர்களின் எந்த ஒரு ஆக்கங்களிலிருந்தோ , புத்தகங்களிலிருந்தோ தவறாகக் எடுத்துக்
கையாண்டவை அல்ல. இவைகள் யாரையும் புண்படுத்தும் நோக்கிலும் அல்ல.
ஆரவாரப்
பேய்கள் !?!?
பேய்கள் என்று
கேள்விப்பட்டிருப்போம் , இதென்ன புதிதாக ஆரவாரப்பேய்கள்; இப்படி ஒன்று உள்ளதா என்ன
? நெருப்பில்லாமல் இல்லாமல் புகையுமா ? என்பார்கள் , அப்படி என்றால் ஆரவாரப்பேய்கள்
இருக்கும் போலத்தான் தெரிகிறது.
சாதாரணமாக
பேய்களை மயானத்தில் இருப்பதாகவும் நடுநிசியில் வெளிப்படும்
என்றும் சொல்வார்கள் , இந்த ஆரவாரப்பேய்கள் எங்கிருக்கும்? எப்போது வெளிப்படும்
என்பதை காணப் போகின்றோம்.
இந்த
ஆரவாரப்பேய்கள் ஒவ்வொரு மனிதருள்ளும் மறைந்திருக்கின்றன; இவைகள் மனிதர்களின்
குணாபேதங்களுக்கேற்றாற்போல் உருக்கொள் கின்றன. இவைகள் இருக்கும் இடம்
மனிதர்களுக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதன்பிடியில் தான் இருப்பதையே மனிதர்கள்
உணரமுடிவதில்லை.
ஞானிகள்,
ரிஷிகள், யோகிகள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள்,
தாவரங்கள் என எதையும், யாரையும் இந்த ஆரவாரப்பேய்கள் விட்டு வைக்கவில்லை. ஆனால்
துரதிர்ஷ்டவசமாக மனிதர்கள்தான் இந்த ஆரவாரப்பேய்களால் பீடிக்கப்பட்டு
அவதியுறுகின்றனர்.
இந்த ஆரவாரப்பேய்கள்
பலதரப்பட்ட குணங்களைக் கொண்டு
இருக்கின்றன.
எப்படி இந்த ஆரவாரப்பேய்கள் மனிதர்களை பிடிக்கின்றன ; அதனால்
மனிதன் எப்படி அவதிக்குள்ளாகின்றான்? எனப் பார்ப்போம் !.
மனிதர்கள்
தன்னுடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டி நிறைய புத்தகங்கள் படித்தல்,
அனுபவஸ்தர்களோடு கலந்துரையாடுதல் என ஈடுபடுவார்கள், ஈடுபடுகிறார்கள்.
இந்த
படித்தறிதலையும், கலந்துரையாடலையும், (இவைகளை மற்றவர்களின் அனுபவம் என சொன்னால்
தன்மீது மற்றவர்கள் கொண்ட மதிப்பு குறைந்து விடுமே என்று எண்ணி) தன்னாலேயே அறிந்து உணரப்பட்டதாக மற்றவர்களிடம்
தன்னைக் காண்பித்துக் கொள்வார்கள்; அந்த நேரம் அதனைக் கேட்பவர்கள் அவர்களை மேலும்
ஊக்குவிக்க மனிதன் மிகவும் சந்தோஷமாகி நிறைய சொல்ல துவங்குவான் அல்லவா ! அப்போது
இந்த ஆரவாரப்பேய்கள் மனிதருள்ளிருந்து விழித்து எழுந்து கொள்ளும் ; அதன்பின்
அதனுடைய பிடியிலிருந்து மனிதன் மீளுவது என்பது முடியாததாகின்றது.
தன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக மற்றவர்களை நம்ப வைத்துவிட்டு
பின்னர் அதனை காப்பாற்ற மனிதன் படும்பாடு இருக்கின்றதே சொல்லி மாளாது.
சில மனிதர்கள்
நல்ல குணங்களைக் கொண்டிருந்தபோதும் , சிலவேளை களில் அவர்களிடமும் இந்த
ஆரவாரப்பேய்கள் தலை தூக்கத்தான் செய்கின்றன. இவர்கள் தானுண்டு , தன்
பணியுண்டு என இருப்பார்கள் , மிக சாந்தமாகவே எதையும் செய்வார்கள். எதையும்
மிக சிரத்தையோடு செய்வார்கள். ஆனால் கொஞ்சம் அவர்களை சீண்டி விட்டால் போதும்
அவர்களுள்ளே பதுங்கியிருந்த ஆரவாரப்பேய் விழித்து அவர்களை வெளி உலகிற்கு
காட்டிவிடும்.
வேறு சில
மனிதர்கள் நல்ல விஷயங்கள் நிறைய அறிந்தவர்களாக இருப்பார்கள் , ஆனால் தன் நிலையைக் காட்டிலும் அதிகமாக வெளியில்
காட்டிக் கொள்வார்கள் , உலகினைக் காக்கவே அவதரித்தது போல் இவர்களது நடவடிக்கைகள்
அமைந்திருக்கும். அற்புதமான மாயா ஜாலமெல்லாம் நிகழ்த்திக்காட்டுவார்கள், தீர்க்கமுடியாத பலவிதமான நோய் களெல்லாம் இவர் தம்
பார்வை பட்ட மாத்திரத்தில் தீர்ந்தோடும் , இருக்கும் இடத்திலிருந்தே எல்லாக் காரியங்களையும்
மற்றவர்களுக்கு நிகழ்த்திக் காட்டும் இவர்களின் ஆரவாரப் பேய் இவர்களைக் காக்க
முடியாது என கை விட்டு விடும்.
உண்மையில் இந்த
ஆரவாரப்பேய்களின் வேலைதான் என்ன ?
மனிதனின்
ஆழ்`மனதில் குடிகொண்டுள்ள இந்த உதவாக்கரை ஆரவாரப் பேய்கள் மனிதனின் மேம்பாட்டினை
சீர்குலைக்க வல்லவை.
தனிமையில்
அமைதியாக அமர்ந்து ஏதாவது இறைவனை அல்லது தன் வாழ்வின் வந்த வழிதனை சிந்திப்போம் என
அமர்ந்தால் மனதின் உள்ளே இருக்கும் அத்தனை குப்பைகளையும், அசிங்கங்களையும் கிளறி
விட்டு (ஏய்,..,டேய்..உன்னை
எனக்குத் தெரியாதா? நீயெல்லாம் போய்...என்று)
அந்த
துர்நாற்றத்தில் நமது உள் மன அமைதியையே குலைத்துவிடச் செய்கின்றன. பொதுவாகவே ஒவ்வொரு
மனிதனுக்கும் தன்னைப்பற்றி நன்றாகத் தெரியும்; அதனால்தான் மனிதனின் அந்தரங்கம்
அறிந்துள்ளதால் இந்த ஆரவாரப் பேய்களுக்கு கொண்டாட்டமாகிப் போகின்றது. தன்னிடம்
இல்லாததை இருப்பதாகக் காட்டும்போது இவைகள் அந்த மனிதனைக் கேலியும், கிண்டலுமாக
செய்து அந்த மனிதனை கேவலமுறச் செய்கின்றன.
ஞானிகளையும் விட்டதில்லை இந்த ஆரவாரப் பேய்கள் , மகரிஷியான
விச்வாமித்திரரையே என்ன பாடுபடுத்தின என்பதை படித்துள்ளோம். பணிந்த தாவரங்கள்
நிமிர்ந்து நிற்கின்றன , ஆரவாரப்பேய் கொண்டு நிமிர்ந்து நின்ற மரங்களின் கதியென்ன
? ஆரவாரப்பேய் எனும் மதம் கொண்ட மிருகங்களின் நிலையென்ன ?
சரி சரி.. இந்த
ஆரவாரப்பேய்களை எப்படி ஒடுக்குவது ?
இசைஅமைப்பாளர்
திரு. இளையராஜா அவர்கள் தனது புத்தகத்தில் எழுதியிருந்ததை இங்கே நினைவு கூறல் சரியாகும்
எனக் கருதுகிறேன்.
ஓரெழுத்து
வித்தியாசத்தில் மாபெரும் மாற்றம் பாருங்கள் .
அவர் சொல்கிறார் : இந்த உடம்பை இல்லாமல்
செய்வது மயானம் , இந்த மனதினை இல்லாமல் செய்வது தியானம்.
ஆமாம்,
சகோதரர்களே,
நடுநிசியில்
இரவின் சலனத்தில் மயானத்தில் தோன்றுகின்றன பேய்கள்.
குருவின்துணையில்
மனஉறுதியில் செய்யப்படும் தியானத்தில் ஒடுங்குகின்றன
ஆரவாரப்பேய்கள்.
கவியரசர் ஒரு பாடலில் சொன்னார் ;
ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா ......
பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா –
இறந்தபின்னே வரும் அமைதி வந்துவிட்டதடா
எவ்வளவு உயர்ந்த நிலை பாருங்கள் வாழும்
காலத்திலேயே பேரமைதியுடன் வாழ்வது.
ஆரவாரப்பேய்கள்
நம்மை விட்டு ஓடிவிட்டால் மனம் அமைதியைக் காணும், ஆனந்தம் கூடும், பேரின்பம்
சேரும், எங்கும் சாந்தி, சாந்தி, சாந்தி மட்டுமே.
பின்
குறிப்பு :
இந்த
ஆரவாரப்பேய்கள் எப்படியெல்லாம் செயல்படுகின்றது என்பதற்கு ஒரு உதாரணம்தான்
ஆரம்பத்தில் உள்ள எனது தன்னிலை விளக்கம் இது தேவையா?! ஆனால் இப்படி எல்லாம்
தன்னைப் பீற்றிக் கொள்ளும்.
உங்கள்
No comments:
Post a Comment