அன்பு நண்பர்களே,
வணக்கம்.
நம்பிக்கை அதுதானே
எல்லாம் என்பதே தலைப்பு.
நம்பிக்கை என்பது பல
வகையானது என்றபோதிலும் ஒரே
வார்த்தையானது.
பொதுவாக நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நம்பிக்கையை
பற்றி இந்நேரம் இதனைப்பற்றித்தான் சொல்லவருகிறார் என சிந்திக்க துவங்கியிருப்போம்.
ஆன்மீகம் என்றால் இறை
நம்பிக்கை ,
நாத்திகம் என்றால்
இறைவன்இல்லை என்பதில் நம்பிக்கை ,
லௌகீகம் என்றால்
வாழ்வின்மீது நம்பிக்கை ,
மாணவர்களுக்கு
தேர்ச்சி பெறுவோம் என்ற நம்பிக்கை ,
இளைஞர், இளைஞிகளுக்கு
தத்தமது அபிலாஷைகள் நிறைவேறும் எனும் நம்பிக்கை ,
மத நம்பிக்கை , மன
நம்பிக்கை , தனது உழைப்பின் மீது நம்பிக்கை . . .
இப்படியே அவரவர்கள்
அவரவர்களின் மனோபாவத்திற்கும், மனவேகத்திற்கும், ஏற்றாற்போல் வெவ்வேறு வகைகளில்,
வெவ்வேறு சிந்தனையில் நம்பிக்கைகள் மாறுபடுகின்றன.
ஆனால் அதற்கெல்லாமே
பெயர் நம்பிக்கைதான்.
ஏன் இந்த ஒருவார்த்தைக்கு
மட்டும் பற்றாக்குறை ,
ஏன் இத்தனை வார்த்தை
நெருக்கடி வந்தது ?
நம்பிக்கை என்பதனை
எந்த வகையிலாவது நமக்கு ஏற்படுத்தவேண்டும் , நாம் நம்பிக்கையை இழக்க எதுவுமே
காரணமாகக் கூடாது , நம்பிக்கையின் சிறு வேர் அசைந்தால் கூட மனிதம்
பாழ்பட்டுவிடும், அந்த மாதிரி எதுவுமே உருவாகி விடக்கூடாது , அதனால் மனிதம் நிலை
குலைந்து விடக்கூடாது என்பதில் நமது முன்னோர் மிக ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள்
என்பது இதனால் தெளிவாகத் தெரிகின்றது.
அதனால்தான்
எல்லாவற்றையும் நம்பிக்கையின் கீழ் கொண்டு வந்தார்கள்.
நம்பிக்கை என்பதை நமக்கு
உயிரோடு கலந்திட வைத்தார்கள் , நம்பிக்கையை எதிலும் நமக்கு ஏற்படுத்தினார்கள்.
நம்பிக்கையிழந்தவர்களை கண்டு அவர்களுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கி அவர்களையும்
நம்பிக்கையுள்ளவர்களாக்கி வைத்தார்கள்.
எந்தவிதத்திலும் நம்பிக்கையை மனிதம் இழக்காதவாறு
நிறைய நம்பிக்கை தரும் கதைகளை உருவாக்கி வைத்தார்கள்.
நம்பிக்கை இல்லாத
நிலையில் மனிதம் சிந்திக்கும் நிலையும் , செயலாற்றும் நிலையும் இழந்து விடுவதனால்
வாழ்நிலை கெடும் என்பது மட்டுமல்ல , வாழ்வின் மீது ப்ரியம் வராது என்பதே முக்கிய
காரணமாகும்.
நாம் ஒவ்வொருநாளையும்
நம்பிக்கையின் துணையோடுதான் துவங்குகின்றோம் .
நம்பிக்கையோடு
எதனையும் முயல்கின்றோம் .
ஒவ்வொரு
காரியத்தையும் மிகுந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயலாக்குகின்றோம்.
எந்த காரியம்
செய்யும் முன்பும் அந்த காரியத்தின் மேல் பற்றும் , நம்பிக்கையும் வைத்துத்தான்
துவங்குகின்றோம்.
ஆனால் , நம்மிடம்
எந்த விஷயத்திலும் நம்பிக்கை 15% சதவிகிதமும் , அவ நம்பிக்கை 85% சதவிகிதமும்
கலந்தே உள்ளது.
எதிலும் முழு நம்பிக்கையற்றவர்களாகவே
இருக்கின்றோம்.
எதையும் நம்புவதில்லை
, அனைத்தையுமே சந்தேகக்கண் கொண்டே பார்க்கின்றோம்.
முழுநம்பிக்கை என்பது
நம்மிடம் எதிலுமே இல்லை
இதைவிட , அதைவிட ,
இன்னும் கொஞ்சம் நன்றாக , ஏனிப்படி , அது ஏன் ? இது ஏன் ? என்பது போன்ற சின்ன
சின்ன சந்தேகக் கேள்விகள் நம்மை முழுமையாக சூழ்ந்துள்ளன.
ஏன் என்ற கேள்வி, இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை என்பதை தவறுதலாக புரிந்து கொண்டதின் விளைவே இது .
இப்போது கேள்விகளே
வாழ்வாகிப் போய் வாழ்வு கேள்விக்குறியாகி விட்டது.
ஒரு நண்பர்
அடியேனுக்கு ஒரு முறை ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தார் அதில்,
கண்கள்
இதயத்தைப்பார்த்து சொல்கின்றது , “ நீ விழித்திருப்பாய் என்ற நம்பிக்கையில் உறங்கச்
செல்கிறேன் ”
என்ன அழுத்தமான,
ஆழமான, உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்த நம்பிக்கை.
இதுதான் உண்மை நிலை –
ஆனால் நடைமுறையில் நம்நிலை ?!.
குழந்தைகள் நம்மிடம் சில சந்தேகக் கேள்விகளை கேட்கின்றன , நாம்
அதற்கான விளக்கம் தந்தவுடன் அப்படியே ஏற்றுக்கொள்கின்றன , அதனால் அவர்கள் மிக
அதிகமான ஆனந்தம் அடைகின்றார்கள்.
அதனைப்போல நமது கேள்விக்கான பதிலை அப்படியே ஏற்றுக்கொண்டால் மிக அதிகமான
ஆனந்தம் பெறலாம்.
நாமும் சில கேள்விகள் சிலரை கேட்கின்றோம். அவர்களும் அதற்குரிய
விளக்கமோ , பதிலோ தருகின்றார்கள் அதில் நாம் திருப்தி அடைகின்றோமா என்றால் இல்லையே
, நமது கேள்வியை விட்டுவிட்டு இவர் சொன்னது சரியா என புதியதாக ஒரு சந்தேகக்கேள்வி
கிளம்பி அதனை சுமக்க துவங்குகின்றோம் , அதனை பலரிடம் கேட்கின்றோம் , இவர் சொன்னது
சரியா , உங்கள் கருத்தென்ன ? இப்படியே வெறும் சந்தேகக் குவியலாகி விட்டதே நம்
மனமும், வாழ்வும்.
நம்பிக்கை என்பது என்ன ?
ஒன்றை அல்லது ஒரு கருத்தினை அல்லது ஒரு தகவலை முழுமனதுடன் எவ்வித
கேள்வியும் இன்றி , தயக்கமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்வது , அதனை பின்பற்றுவது
அவ்வளவுதான் , இங்கே அறிவுக்கு வேலையில்லை .
நாம் என்ன செய்கிறோம் என்றால், உடனே அங்கே அறிவினைக் கொண்டு ஆராய
முற்படுகிறோம்.
எல்லா விஷயங்களையும் அறிவின் கீழ் கொண்டு செல்லலாகாது
முன்னிருந்தோர் தாம் கண்டதினை, பின்வருவோர் தடையின்றி தொடர்ந்திட
தங்கள் அனுபவ கருத்தினை பதிவிட்டிருந்தார்கள்.
நாமோ அதனை புறந்தள்ளி நமது அறிவினை புகுத்தி நேரம் , வாழ்வு ,
அனைத்தையும் வீணடித்து கொண்டுள்ளோம்.
சில விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் , சில விஷயங்களை
ஆராயவேண்டும் , நாம் எல்லாவிஷயங்களையும் ஆராய முற்படுகிறோம்.
செய்யாதே என்றால் செய்தால் என்ன என்று கேட்பது புத்திசாலித்தனமாகாது .
விஷம் குடித்தால் மரணம் சம்பவிக்கும் என்றால் அதனை ஏற்றுக் கொள்வதைபோல்
– இப்படி செய்தால்தான் நல்லது என்றால் சரி என்று அதனை ஏற்பதில் என்ன தவறு ?
விஷத்தையும் குடித்துப்பார்த்துதான் ஒப்புக்கொள்வேன் என
குடித்துப்பார்ப்பது தானே – உயிர் போய் விட்டால் . . . என்ற பயம் அப்படித்தானே !
அதாவது நமக்கு ப்ராண சங்கடம் தரும் என்றால் மறுபேச்சின்றி ஏற்றுக்
கொள்வோம் , இல்லையென்றால் நம்பிக்கையற்று , சந்தேகப்பட்டு நாமும் பிறரும்
சங்கடப்பட காரணமாவோம்.
என்ன நியாயம் இது ?
வாழ்வின் ஆதாரமே நம்பிக்கை .
நம்பிக்கை இழப்பது , நம்பிக்கையின்றி இருப்பது , அவநம்பிக்கையோடு வாழ்வது
நடைபிணத்திற்கு சமமான வாழ்வல்லவா ?
நல்லவரோ, கேட்டவரோ முழு மூச்சோடு ஒரு குருவை நம்பினால் அந்த குரு
நன்நிலைக்கு போகவில்லை என்றாலும் , நம்பிக்கை கொண்டவரை அந்த நம்பிக்கை நன்நிலைக்கு
கொண்டு செல்லும் .
அரிதிலும் அரிதான மானுட பிறப்பெடுத்தது இப்படி ஓர் வாழ்விற்காகவா?
நாம் கொண்ட மானுட பிறப்பின் பெருமையை கருதி இனியாவது இடம் ,பொருள்,
ஏவல் என்பார்கள் அதுபோல எதற்கெடுத்தாலும் அவநம்பிக்கையின்றி , 100% சதவிகித முழுநம்பிக்கையோடு
செயல்படுவோம் .
எதிலும் வெல்வோம் , ஏற்றம் கொள்வோம்.
வளமுடன் வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
நம்பிக்கை அதுதானே எல்லாம்.
நமசிவயம்.
No comments:
Post a Comment