அன்பு நண்பர்களே , வணக்கம்.
பயம் எனும் செயல்பாட்டு உணர்வினை தலைப்பாக எடுத்துக்கொண்டோம்.
பயம் என்பது ஒரு உணர்வாகும்.
இன்பம் துன்பம் என்பதுபோல பயம் ஒரு உணர்வு அவ்வளவுதான் என்று
ஒதுக்கமுடியாது , இன்பமும் , துன்பமும் சிறிது நேரத்தில் மாறிவிடும் அல்லது மறந்து
விடும். காரணம் இன்பமும் துன்பமும் வெளிமனதில் சிறு சலனம் உண்டாக்கும் , சற்று
நேரத்தில் வேறொன்று இந்த இடத்திற்கு வந்தவுடன் அகன்று விடும் .
ஆனால் இந்த பயம் மட்டும் உள்மனதினில் சற்று பெரிய சலனத்தினை உருவாக்கி
அது குறையாதவாறு பார்த்துக்கொள்ளும். மனம் அதிலிருந்து வெளிவராதவாறு சுற்றி
பின்னிக்கொள்ளும்.
பயம் என்பது என்ன ?
பயம் ஏற்பட என்ன காரணம் ?
பயம் மனிதர்களுக்கு தேவையா ?
பயம் அறியாத மனிதர்கள் உண்டா ?
பயத்தினால் என்ன பயன் ?
முதல் கேள்வி :
பயம் என்பது என்ன ?
பயம் என்பது ஒரு உணர்வு ; வெட்கம் , நாணம் என்பது
போல பயமும் ஒரு உணர்வே .
இரண்டாவது கேள்வி :
பயம் ஏற்பட என்ன காரணம்?
பயம் ஏற்பட காரணமே இல்லை , பயம் நம்மீது
திணிக்கப்பட்டது . குழந்தையாக இருந்தபோது
உணவு உட்கொள்ள வைக்கவும், உறங்க வைக்கவும் , பெரியவர்கள் வெளியே போகும்போது
அழுதால் அதனை தடுக்கவும் குழந்தைகளை பயமுறுத்துவது சாதாரணமான விஷயமாக உண்டானது.
அஞ்சு கண்ணன் வர்றான், அங்க பார் பேய், உன்ன புடிக்க பூச்சாண்டி வரான்
எனக்கென்ன- ஐயோ எனக்கே பயமாயிருக்கு , நான் போறன்ம்பா, பூச்சாண்டி புடிச்சிக்கோ
என்றெல்லாம் சொல்லி குழந்தையிலேயே பயமெனும் ஒரு உணர்வை நம்முள் திணித்தார்கள்.
நாம் வளர வளர அந்த உணர்வு மட்டும் நம்மை விட வேகமாக வளர்ந்தது.
மூன்றாவது கேள்வி :
பயம் மனிதர்களுக்கு தேவையா ?
தேவைதான். பயம் என்பது ஒரு எச்சரிக்கை
உணர்வாகவும் இருப்பதால்.
இதனை செய்தால் அந்த செயல் , இது போன்ற நல்ல விளைவுகளை உண்டாக்கும்
என்கிற முன்னுதாரணதிற்கு , வேண்டாம், வேறுமாதிரி நடப்பதற்கும் வாய்ப்புண்டு என
சிறு பயம் வருவது நல்லதே. அந்த பயம் ஒரு செயலை தகுந்த முன் ஏற்பாட்டுடனும் , அதீத
எச்சரிக்கையோடும் நம்மை செயலாற்றிட வைக்கும்.
மேலும் , தவறுகள் செய்வதிலிருந்து மனிதத்தை காக்கும். எந்த தவற்றையும்
செய்தால் அதற்குரிய சங்கடங்களை நாம் அனுபவித்தே தீரவேண்டும் என்கிற எண்ணம்
(பயம்)உண்டானால் தவறுகள் குறையும் . மனிதரிடம் மனிதத்துவம் மலரும்.
நான்காவது கேள்வி :
பயமறியாத மனிதர்கள் உண்டா ?
உண்டு நாம் பயமுண்டாக்காதவரையில்
குழந்தைகள் பயமறியாதவர்களே.
ஐந்தாவது கேள்வி :
பயத்தினால் என்ன பயன் ? நிறைய உண்டு. பயம் என்பது ஒரு உணர்வு என்று பார்த்தோம் , நம்மீது
திணிக்கப்பட்டது என்றோம், பயம் நம்மை தீயசெயல்கள் செய்வதிலிருந்து தடுக்கும் காரணியாகின்றது.
ஒரு செயலை செய்யத் துவங்கும் போதே இதன் பலன் எப்படியிருக்கும் என சிந்திக்கச் செய்யும்.
நன்மையானால் நல்ல பலன்களும் , தீய செயலானால் தீய பலன்கள் வருமே என்ற எண்ணம் வரக்
காரணமாகின்றது .
தீமைகள் குறைகின்றது, அதனால் ஏற்படும் பாபங்கள் இல்லாததால் நமது
வருங்கால தலைமுறை செழிப்புடன் வாழ வழி செய்தவர்களாகின்றோம்.
நாம் சேர்த்து வைக்கும் செல்வம் மிக எளிதில் கரைந்து போகும் , நாம்
சேர்த்து வைக்கும் புண்ணியங்கள் தலைமுறை கடந்து நிற்கும்.
தனக்கு மேல் ஒருவர் உள்ளார் , அவருக்கு கீழ்தான் நாமிருக்கின்றோம் , அவருக்கு
நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற (பயம்) எண்ணம் இருக்கும் வரை (அது தந்தையாகவோ,
தாயாகவோ , அண்ணனாகவோ , முதலாளியாகவோ , சீனியர் ஆபீசராகவோ யாராக இருந்தாலும் சரி)
நம்மால் தவறான எந்த காரியமும் செய்யமுடியாது , செய்ய மாட்டோம்.
(ஏனென்றால் தவறு செய்தால் மாட்டிக்கொள்வோம் அதனால் பெரும் தண்டனை
கிடைக்கும் பயம் காரணம்).
ஒரு கதை சொல்கிறேன் :
ஒரு குரு தனக்குப் பின் தலைமையை ஏற்க தகுதியுள்ளவரைத் தேர்ந்தெடுக்க
எண்ணி தனது சிஷ்யர்களில் மூவரை அழைத்து, தனது இறுதி நாள் நெருங்குவதாகக் கூறி , “ எனக்கு
கோழி இறைச்சி உண்பதற்கு பிரியமாக இருக்கின்றது , யாரேனும் பார்த்தால் இழிவாக
கருதுவார்கள் எனவே யாருக்கும் தெரியாமல் ஒரு கோழியை சமைத்து கொண்டு வாருங்கள்” கேட்டுக் கொண்டார்.
சரி குருவே , அப்படியே செய்கின்றோம் , நாங்கள் இரண்டே நாளில்
வருகின்றோம் என்று சொல்லி மூவரும் புறப்பட்டார்கள்.
ஒரு சீடன், நேராக தனது வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தோரை மொத்தமாக
வெளியேறச் செய்தான், வீட்டை சுத்தம் செய்தான் , தானே ஒரு கோழியைப் பிடித்து
சுத்தமாக்கி சமையல் செய்தான், எடுத்துக்கொண்டு குரு இருக்கும் இடம் நோக்கி
புறப்பட்டான் .
இரண்டாமவன், வீட்டிற்கு செல்லவில்லை இன்றில்லாவிட்டால் நாளை குரு கோழி
இறைச்சியை உண்டது எல்லோருக்கும் தெரிந்துவிடும் ஆகவே வீட்டிற்கு வேண்டாம்
என்றெண்ணி காட்டிலேயே ஒரு மரத்தின் பொந்திற்குள் புகுந்து அதற்குள்ளேயே அமர்ந்து
கோழியை சுத்தப்படுத்தி சுவையாக சமைத்து எடுத்துக்கொண்டு குருவை நோக்கி
புறப்பட்டான்.
மூன்றாமவன் , எதுவும் செய்யவில்லை அவன் முழுக் கோழியை அப்படியே
எடுத்து வந்தான்.
மூவரும் குருவை அடைந்து அவரை வணங்கி தாங்கள் கொண்டு வந்த கோழிக்கறியை அவர்முன்னே
பணிவுடன் வைத்தார்கள் ,
ஒவ்வொருவரும் தாங்கள் எவ்வாறு அதனை சமைத்தோம் என்பதை குருவிற்கு விவரித்தார்கள்
.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த குருநாதர் மூன்றாமவனைப்
பார்த்து,
நீ ஏனப்பா சமைக்காமல் அப்படியே எடுத்து வந்து விட்டாய் எனக் கேட்டார்.
அதற்கு அவன் , குருவின் பாதங்களில் வீழ்ந்து , கண்ணீர் விட்டபடியே
அழுது தொழுது, குருவே இந்த பாவியை மன்னியுங்கள் , இந்த நிலையில் உங்களுக்கு கோழி
இறைச்சியை சமைத்து தந்து உங்களை திருப்தி செய்ய முடியாதவனாகி விட்டேன் என்று
கதறினான்.
இங்கு வா அழாதே , என்ன காரணம் , என்று குரு அவனை ஆதரவாகப் பேசி அருகே
அழைத்தார் .
அவன் சொன்னான் , மேன்மைதங்கிய குருவே, உங்கள் ஆணைப்படியே கோழி ஒன்றினை
வாங்கிக்கொண்டு மிகவும் தனிமையான இடம் சென்றேன், எங்கும் யாருமேயில்லை என்பதனை
உறுதி செய்து கொண்டு சமையல் செய்ய ஆயத்தமானேன் , ஆனால் ஐயகோ , யாரோ என்னைப் பார்ப்பது
கண்டேன் , உடனே வெளியே வந்து யாரென்று பார்த்தேன் , யாருமே இல்லை . மீண்டும்
சென்றேன் , சமைக்க தயாரானேன் , மீண்டும் இரண்டு கண்கள் என்னையே பார்ப்பதினை
உணர்ந்தேன் , மகா குருவே, அதன்பின் அந்த கண்கள் என்னை விடவே இல்லை , எங்கு
சென்றாலும் என்னை விடாமல் துரத்தின.
நான் என் செய்வேன் குருவே , என் செய்வேன் , என மீண்டும் அழுது புரண்டு
புலம்பினான்.
குரு சொன்னார், மகனே, குழந்தாய் , அழாதே, நீயே எனக்குப்பின் இந்த
பீடத்தினை அலங்கரிக்கத் தகுந்தவன் , எப்போது நீ , அந்த இரண்டு கண்களுக்குத் தெரியாமல்
மறைத்து எதனையும் செய்ய முடியாது என உணர்ந்தாயோ அன்றே , அந்த நொடியே நீ மகா
புனிதனாகி விட்டாய், வாழ்க என்று ஆசீர்வதித்து மறைந்தார்.
அந்த இரண்டு கண்கள் ?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!!!!
அது எல்லாம் அறிந்த இறைவனா ?
நமது மனசாட்சியா ?
அல்லது எங்கும் நிறைந்த இயற்கையா ?
அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் , எதுவானபோதும்
அதற்கு மறைத்து எதையுமே செய்யமுடியாது எனும் உண்மை நிலையை உணர்ந்தால் போதும் , இந்த உலகெங்கும் தவறே நடைபெறாது என்பது திண்ணம்.
அதனால்தான் கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டுநாள் என்றார்கள்
முன்னோர்.
வெளியே தெரியாமல் மறைக்கப்பட்ட தவறுகளே இன்றுவரை பதிவு செய்யப்படவில்லை என்பதை உணருங்கள்.
பயத்தோடு வாழுங்கள் . நல்ல மனத்தோடு பழகுங்கள்
.
வாழுங்கள் வளமுடன் ,
வாழும் நாளெல்லாம்.
நமசிவயம்.
No comments:
Post a Comment