அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.
வெற்றியாளன் யார் ?
நண்பர்களே, வாழ்வியலில் நமது வெற்றிகள் பலவகையிலும் தீர்மானிக்கப்பட்டு
சிறப்பிக்கப்படுகின்றது.
நாம் குழந்தையாக இருந்தபோதே நமக்கு முன்பிறந்தவர்கள் , பின் பிறந்தவர்
களோடு நம்மை ஒப்பிட்டு பேசி நமது செய்கைகளை கண்டு வியந்து நமது வெற்றியை தீர்மானித்தார்கள்.
“ இவனுக்கு ஒன்றரை மாசத்திலேயே தலை நின்னுடுச்சி”
ன்னு துவங்கி ...
“அந்த குழந்தை ஒன்றரை வருடமாச்சு பேச இவன் குழந்தையிலேயே பேச
ஆரம்பிச்சுட்டான்”
“அம்மான்னு இவன் கூப்புடர்தே புது தினுசுதான் “
“பாலுங்கரத பாவுன்னுதான் கேப்பான் அதுவே அழகா இருக்கும் “
ஏய் .. ஏய் .. யாரும் புடிக்காமலே நடக்கிறான் பார் “
“ஆனா ஆவன்னால்லாம் சொல்வான், எ பி சி டியே அவனுக்கு அத்துப்படி “
“இன்னும் ஸ்கூல்ல போடல- “அவுங்க அக்கா
படிக்கிறத பாத்துக்கிட்டே இவன் கத்துக்கிட்டான் பிரில்லியண்ட் பையன் ”
“தாளம்ன்னு கேட்டுட்டாபோதும் ஒரே டான்ஸு தான் , யார்கண்டா இவன் அடுத்த
பிரபு தேவாவா வந்தாலும் ஆச்சர்யப்படர்துக்கில்ல “
“ஒருதரம் சொன்னா போதுங்க! அப்பிடியே புடிச்சிக்கிறான், அப்புறம் எப்ப
கேட்டாலும் அப்பிடியே சொல்றான்னு, அவுங்க டீச்சரே அதிசயமா சொல்றாங்க” என்று
சொல்லி சொல்லி படிப்படியாக நாம் வளர வளர நமது வெற்றி பலவழிகளிலும் கண்டு
ஆராயப்பட்டது.
கல்வி கற்கையில் கல்வியோடு நமது ஒழுக்கமும் கணக்கிடப்பட்டு நமது
வெற்றி தீர்மானமானது.
பணி தேடல் துவங்கியதும் , கல்வியுடன் , ஒழுக்கம், பணபலமும் சேர்ந்து
நமது வெற்றியை தீர்மானித்தது.
திருமண வயதில் நமது வெற்றி என்பது கல்வி, ஒழுக்கம், தொழில், வருமானம்,
குடும்ப பின்னணி இவைகளைக் கருத்தில் கொண்டு நம்கையில் வந்து சேர்ந்தது.
திருமணத்திற்கு பின் மனைவிக்கு நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வாழ்க்கையின்
வசதி வாய்ப்புகள், குழந்தைகள் , அவர்களின் கல்விக்காக சேர்த்துள்ள பள்ளி மற்றும் எதிர்காலத்
திட்டங்கள், நமது தொழில் முன்னேற்றம் , நமது
வசதியின் பெருக்கம், நமது வாழ்வின் எதிர்காலத் திட்டம் போன்றவைகளை நாம்
தீர்மானித்துள்ள முறைகளைக் கொண்டு நமது வெற்றி முடிவாகின்றது.
இறுதியாக நமது வாழ்வின் முடிவில், அதுவரை வாழ்வில் நாம் கடந்து வந்த
பாதையில் நாம் செய்த நற்கர்மங்கள் , மற்றவர்களோடு நாம் வைத்திருந்த நல்ல
பழக்கங்கள், எல்லோருக்கும் ஒரு மனிதனாக நாம் செய்த நற்பண்பு, தொண்டுகள் ஆகியவைகளைக்
மனதில் கொண்டு - நாம் வாழ்நாள் முழுவதும் பெற்ற வெற்றிகளை கருத்தில் கொண்டு நமக்கு
வெற்றிக்கனியாக “ அடடா ,ஒரு நல்லவனை இழந்தோமே என மற்றவர்கள்
வருத்தப்ப்படும்போது “ அந்த வார்த்தைகளே நமது வெற்றிகரமான வாழ்க்கையின் சான்றாக
நமக்கு தரப்படுகிறது.
ஆனால் உண்மையில் நாம் எப்போது வெற்றி பெற்றோம் தெரியுமா ?
கோடானுகோடி அணுக்களிலே ஒன்றாக இருந்த நாம் அத்தனை கோடி அணுக்களையும்
பின்னுக்கு தள்ளி, ஒரு முழுவேகத்தை நம்முள் கொண்டு வந்து, அனைத்திற்கும் முன்னே
சென்று வேறொரு அணு நம்மை பின் தள்ளி முந்துவதற்குள் , முட்டி மோதி உள் புகுந்து
உயிர் பெற்றோமே ! அந்த புனித நாள் நினைவிருக்கின்றதா ?
அன்றே நமது வெற்றியின்
துவக்கம் துவங்கிய பொன்னாள், நன்னாள் .
அந்த நாளை நாம் எல்லோரும் மொத்தமாக மறந்துதான் போனோம் .
இல்லையென்றால் உப்புசப்பற்ற விஷயத்திற்கெல்லாம் “ நான் எடுத்த இந்த
காரியமும் உருப்பட்டதே இல்லை” என்று புலம்புவோமா ?
சின்ன சின்ன வெற்றி பெறாத நிகழ்ச்சிகளை கண்டு “ தோல்விதான் எனக்கென
தரப்பட்டது “ என நம்மை நாமே அதைரியப்படுத்திக் கொள்வோமா ?
எதைப் பார்த்தாலும் பயந்து “ நான் தொட்டாலே எதுவும் சரியா வராது என்னை
விடுங்க “ என்று சொல்லி நம்மையே நாம் தரம் தாழ்த்திக் விமர்சிப்போமா ?
நாலுபேர் நம்மைபற்றி பேசும்போது நம்மை முன்னிறுத்தி காட்டாமல் ஒரு
தாழ்வு மனப்பான்மையுடன் பதுங்குவோமா ?
எல்லாம் என்தலையெழுத்து , நானென்ன செய்வேன் என்று விதியின் பின்னே
ஒளிந்து கொள்வோமா?
இப்ப நேரம் சரியில்ல , நல்ல நேரம் வரட்டும் அப்ப நான் யாருன்னு
காட்டறேன்னு ஜோதிடம் - ஜாதகத்தை துணைக்கு அழைப்போமா ?
சாமிக்கித்தான் கண்ணிருக்கா இல்லையா தெரியல, மோசமானவன்ல்லாம்
நல்லாருக்கான், யாருக்கும் ஒரு தப்பும் நினைக்காத எனக்குதான் அடுக்கடுக்கா
ப்ரச்சினைன்னு அங்கலாய்ப்போமா ?
சரி , நாம் ஏன் தோல்வியை தேடவேண்டும் !
ஒரு பேருண்மை தெரியுமா?
நாம் எதனை அதிகம் நேசிக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம் என்பதே உண்மை.
நாம் நினைப்பது என்னவோ சுகமான , சந்தோஷமான , நிம்மதியான வாழ்வைத்தான்.
ஆனால் நாம் அதிகம் சிந்திப்பதும், பேசுவதும் , தோல்வியும் அதன்
தொடர்பான வீழ்ச்சியையும்தான் . அதனாலேயே நமது தோல்விகள் நம்மை தொடர்ந்து
வருகின்றன.
காரணம் நம்மை அறியாமலேயே நாம் அவற்றை அதிகம் நேசிக்கின்றோம். எந்த
நேரமும் தோல்வி , முடியாது , எனக்கு அவ்வளவுதான், என இப்படியே தானே
சிந்திக்கின்றோம்.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நமது சிந்தனை இப்படியே தொடர்ந்து வீழ்ச்சியின்
உருவகமாக இருந்தால் அதுவே தொடர்கதையாவது நம்மாலேயே உறுதியாக்கப்பட்டு விடும்.
ஆகவே முதலில் நம்மை புரிந்து கொள்வோம்.
நாம் வெற்றியின் வித்து , வெற்றியின் முழு வடிவம் , வெற்றிக்கு
எடுத்துக்காட்டு , வெற்றியின் அடையாளம்.
உயிருள்ள ஒவ்வொரு மனிதனுமே வெற்றியின் சின்னம் என்பதும் , நாமே சிறந்த வெற்றியாளன் என்பதையும் என்றுமே
மறக்கவேண்டாம் .
No comments:
Post a Comment